Monday 15 February 2016

வரும் தேர்தலில் விஜயகாந்த் ஜெயலலிதாவை பழிக்கு பழி வாங்க கூடும்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழக முதல்வராகிவிட எல்லாவிதமாக முயற்சியிலும் ஈடுபடுவார்கள். ஆனால் சென்னை பெருவெள்ளத்துக்கு முன்பு வரை தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவே மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது. ஆனால் பெரு வெள்ளம் ஏற்படுத்திய மாற்றம் ஆட்சி மாற்றத்திற்கு மாற்றத்துக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

பெருவெள்ளத்தை பொறுத்தவரை சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை புரட்டிப் போட்டு விட்டது. இந்த மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 194 சீட்டுகளை பெற்றிருந்தது. அந்த தேர்தலில் அதிமுகவின் வாங்கு வங்கி 43 சதவீதமாக இருந்தது. தற்போது அதுவே 32,33 சதவீதம் என்று குறையத் தொடங்கியுள்ளதாம்.  கடந்த மக்களைவை தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி
வைத்திருந்தது. பாரதிய ஜனதா, ம.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க இந்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து 19 சதவீத வாக்கு வங்கிகள் வைத்துள்ளன.

இதில் பெருவெள்ளத்தின் போது, அ.தி.மு.க அரசின் செயல்பாடு இந்த நான்கு மாவட்ட மக்களிடையே கடும் வெறுப்பை விதைத்துள்ளது என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த நான்கு மாவட்டங்களிலும் அதிமுகவினர் எத்தகைய பணிகளில் ஈடுபட்டாலும் பெரிய வெற்றியை பெற முடியாத நிலைதான் காணப்படுகிறதாம். பாதிப்புக்குள்ளான இந்த மாவட்ட மக்களின் மனவோட்டத்தை இப்போதே புரிந்து கொண்டு அதிமுகவினர் செயல்பட்டால் மட்டுமே இந்த 40 சீட்டுகளில் கொஞ்சமாவது கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே மக்களிடையே தே.மு.தி.க.வுக்கு சத்தமில்லாமல் பலம் கூடி வருகிறதாம். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தே.மு.தி.க இந்த தேர்தலில் தனித்து நின்றாலும் அதிமுக, திமுக கட்சிகளுக்கு அடுத்தபடியாக தனிப் பெரும் கட்சி என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிய ஆரம்பித்துள்ளதாம். விஜயகாந்துக்கு ஒரு முறை வாய்ப்பளித்தால் என்ன? என்ற எண்ணம் நடுநிலையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாம். தேசிய கட்சிகளான  காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட்  கட்சிகள் கூட தமிழகத்தை பொறுத்தவரை கத்துக்குட்டிகள் என்ற  நிலையில், தே.மு.தி.க.வுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மிகப் பெரிய வெற்றிதான்.

கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 தொகுதிகளில் வெற்றி பெற்ற, விஜயகாந்த் அதற்கு பின் நடந்தவையெல்லாம் மக்களுக்குத் தெரியும். இப்போது இருப்பவர்களில் விஜயகாந்த் எப்படியிருந்தாலும் ஒரு வாய்ப்பளித்து பார்க்கலாம் என்ற மனநிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆளுங்கட்சி  போடும் மனநஷ்ட ஈடு வழக்குகளையும் கூட உச்ச நீதிமன்றம் வரை சென்று அதில் வென்று வருவதும் விஜயகாந்த் மீது மக்களுக்கு நம்பிக்கையை அதிகரித்திருக்கிறதாம்.

எல்லாவற்றையும் விட,  சமீபத்தில் தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற சஸ்பெண்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது மிகப் பெரிய வெற்றியாகவே கருதப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம்  தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையின்போது குறுக்கிட்டு ரகளை செய்ததாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், எல்.வெங்கடேசன், சி.எச்.சேகர், கே.தினகரன், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் கடந்த  உரிமைக்குழுவின் பரிந்துரையின்பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து அவர்கள் 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், அவர்கள் 6 பேரின் இடைநீக்கத்தையும் ரத்து செய்து விட்டது. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அதிமுக அரசை எதிர்த்து பெற்ற மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. வரும் தேர்தலில் இதுதான் தே.மு.தி.க.வின் மிகப் பெரிய  பிரசார உத்தியாக கருதப்படுகிறது. இதனை முன் வைத்தே தே.மு.தி.க.வின் தேர்தல் பிரசாரம் அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கண்ட வெற்றியும் தொடர்ந்து, ஆளுங்கட்சியால் ஏற்பட்ட அவமானங்களையும் இந்த தேர்தலில் விஜயகாந்த் பழிக்கு பழி வாங்கக் கூடும் என்றே கூறப்படுகிறது.

அதிசயம்... ஆனால் உண்மை... வார்த்தைகளை படிக்கும் நாய்!

காகிதத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளை படித்து புரிந்துக்கொண்டு,  அதன்படி செயல்படும் அதிசய நாய் ஒன்று இங்கிலாந்தில் உள்ள பள்ளியில் வளர்க்கப்பட்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக வாயால் உத்தரவிடப்படும் வார்த்தை ஒலிகளை புரிந்துகொண்டு அல்லது கைகளால் காட்டப்படும் செய்கைகளை பார்த்து அதன்படி செயல்படும் நாய்களைதான் இதுவரை பார்த்துள்ளோம். ஆனால், தற்போது முதன் முதலாக, காகிதத்தில் எழுதப்பட்டுள்ள ஆங்கில வார்த்தைகளை படித்து புரிந்துகொண்டு அதன்படி செயல்படும் ஒரு அதிசய நாய் இங்கிலாந்தில் பள்ளி ஒன்றில் வலம் வந்துகொண்டு இருக்கிறது.

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டோல் நகரில் குழந்தைகளுக்கான தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதற்கு நிக் கார்டனர்(38) என்பவர் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். இந்த பள்ளியில்தான் பெர்னி என்ற பெயருடைய 2 வயது நாய் ஒன்று குழந்தைகளுடன் எப்போதும் வலம் வந்துக்கொண்டு இருக்கிறது.

பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்கும் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் நிக் கார்டனர் ஒரு அதிசயத்தக்க பயிற்சியில் ஈடுபட்டார். அதாவது, பெர்னி என்ற அந்த நாய்க்கு வார்த்தைகளை படித்து புரிந்துக்கொண்டு அதன் செயல்பட பயிற்சி அளித்து வந்துள்ளார். இதன் பலனாக, தற்போது 4 வார்த்தைகளை படித்து புரிந்துகொண்டு, அதன்படி பெர்னி செயல்பட்டு பள்ளி குழந்தைகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

உதாரணமாக, எந்த ஒலியும் எழுப்பாமலும், கைகளால் சைகைகளை காட்டாமலும் காகிதத்தில் ‘Sit’(தரையில் அமர்) என்ற ஆங்கில வார்த்தையை காட்டினால், அதனை பார்த்துவிட்டு அந்த நாய் தரையில் அமரும். ’Down’ என்ற வார்த்தையை காட்டினால், உடனே தரையில் படுக்கும். ‘Roll Over’ என்ற வார்த்தையை காட்டினால், தரையில் படுத்து உருளும். இறுதியாக, ‘Spin Around’ என்ற வார்த்தையை காட்டினால், அந்த நாய் அதே இடத்தில் சுற்றி சுற்றி வரும்.


இந்த அதிசயம் குறித்து நிக் கார்டனர் கூறுகையில், "பள்ளி குழந்தைகளுக்கு கற்கும் ஆவலையும் தன்னம்பிக்கையையும் உண்டாக்கும் எண்ணத்தில்தான் நாய்க்கு வார்த்தைகளை புரிந்துகொள்ளும் பயிற்சியை அளித்தேன். இந்த ஆங்கில வார்த்தைகளை வரிசை மாற்றி காட்டினாலும் கூட, அந்த வார்த்தையை பார்த்து புரிந்துகொண்டு செயல்படும். இதற்கு முதலில் Sit என்ற வார்த்தையை காகிதத்தில் எழுதி அதனை நாயிடம் காட்டிக்கொண்டு ‘Sit’ என வாயால் ஒலி எழுப்புவேன். பின்னர், நாளடைவில், ஒலியை எழுப்பாமல் வார்த்தையை மட்டுமே காட்டியபோது அதனை புரிந்துக்கொண்டு நாய் செயல்பட்டு வருகிறது. இதுபோன்று 20 வார்த்தைகளை இந்த நாய் புரிந்துகொள்ளும். இதற்கு கூடுதலான பயிற்சிகள் அளிக்க உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

உலகின் மிகச் சிறந்த காதல் வரி இதுதானோ..!?

"நான் நேசித்ததும் உன்னையல்ல...
மணக்கப் போவதும் உன்னையல்ல...
 உன் உள்ளத்தை..!"

இந்த மூன்று வரிகளுக்குப் பின்னால் உலகப் பிரசித்திப் பெற்ற ஒரு காதல் குறுங்கதை மறைந்திருக்கிறது. மாவீரன் டியூக் வெலிங்டன் பிரபு காதரின் என்ற பெண்ணை உயிருக்குயிராக நேசிக்கிறான். அவன் காதரினுக்கு எழுதியதுதான் இந்த மூன்று வரிகள்...

ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்...

வரலாற்றின் முக்கியப் பக்கமாக இன்றளவும் அனைவர் நினைவுகளிலும் வந்து போகிற போர்முனை "வாட்டர் லூ". நெப்போலியனின் கடைசி யுத்தம். தனக்குள் இருக்கும் ஆன்மிக சக்திதான் உலகத்தையே வெற்றி கொள்ள வைக்கிறது என்ற கொள்கையில் உறுதியாய் இருந்த நெப்போலியனை எதிர்முனையில், கூட்டுப் படையை வழிநடத்தும் தளபதியாக எதிர் கொள்கிறான் வெலிங்டன்பிரபு.

1லட்சத்து 80 ஆயிரம் வீரர்கள், 35 ஆயிரம் போர்க் குதிரைகள், 500 பிரமாண்ட பீரங்கிகள் அணிவகுத்து நின்ற இந்தப் போர் 1812-ல் நெப்போலியனுக்கு ஒவ்வாத குளிர் மாதத்தில் நடந்தது. காலை தொடங்கிய போர் இரவு 11 மணிக்கு முடிவுக்கு வருகிறது. மாவீரன் என்ற அடையாளத்துடன் இருந்த  ஃப்ரெஞ்ச் தேசத் தளபதி நெப்போலியன் தோல்வியை சந்திக்கிறான். போர்க் கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டு பிரிட்டிஷ் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த செயின்ட் ஹெலீனா தீவில் அடைக்கப்படுகிறான்.

போர்முனைக்கு வந்த வெலிங்டன் பிரபு, அதற்கான வெற்றிக் கனியை ருசிப்பதற்கு முன்னர் கொஞ்ச காலம் 'திட்டமிடல்' பணிக்காக இந்தியாவில் தங்கிட வேண்டிய சூழல். அந்த சிறு இடைவெளியில்தான் அவனுக்கு ஓர் கடிதம் வருகிறது...

அந்தக் கடிதத்தை எழுதியிருந்தது வெலிங்டன் பிரபுவின் காதலியான காத்ரின்....

"எனக்கு அம்மை நோய் கண்டு விட்டது. அதன் பாதிப்பு என் முகத்தை விகாரமாக்கி விட்டது. அன்று நீங்கள் நேசித்து, நாளெல்லாம் வர்ணித்து மகிழ்ந்த அந்த வட்ட நிலா ஒளி முகம் இப்போது என்னிடத்தில் இல்லை. அழகிழந்த குரூபியாக உங்கள் காதரின் இருக்கிறேன். தயவு செய்து இனியும் என்னைப் பார்க்க வரவேண்டாம். நீங்கள் வேறு அழகான பெண்ணைப் பார்த்து மணம் புரிந்து கொள்ளுங்கள். இப்படிக்கு உங்கள் முன்னாள் காதலி காதரைன்.

நெப்போலியனையே மண் கவ்வ வைத்த அந்த வீர இளைஞன் வெலிங்டன் பிரபு, காதரினுக்கு எழுதிய அந்தப் பதில் கடிதத்தில் இருந்தது... மேலே குறிப்பிட்ட அந்த மூன்றே வரிகள்தான்.

அந்த வரிகளை மீண்டும் வாசியுங்களேன்....உங்கள் காதலை நீங்கள் நேசிப்பீர்கள்..! 

அஞ்சல - திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் அவ்வபோது தமிழ்ர்களின் பண்பாட்டை வெளிக்கொண்டு வரும் படங்கள் வரும். அந்த வகையில் தங்கம் சரவணன் இயக்கத்தில் பசுபதி, விமல், நந்திதா நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள படம் அஞ்சல.

ஒரு தெருவில் இருக்கும் டீக்கடை என்பது ஒருவரின் வியாபாரம் சார்ந்தது மட்டுமில்லை, இவை பல தலைமுறைகளின் ஒருங்கினைப்பு, சமுதாய மாற்றத்திற்கான அடையாளம் என்பதை மிக அழுத்தமாக கூற வந்துள்ளது இந்த அஞ்சல.
கதைக்களம்

பசுபதியின் தாத்தா 1913ம் ஆண்டு தொடங்கிய டீக்கடை 2013ம் ஆண்டு 100வது ஆண்டு சிறப்பு விழாவுடன் அமர்க்களமாக தொடங்குகிறது அஞ்சல டீக்கடை.. ஊரில் உள்ள அனைவரும் இந்த டீக்கடையில் தான் ஒன்று கூடுகிறார்கள்.

ஜாதி, மதம் பாரமல் பசுபதி தன் குடும்பம் என்று கூட இல்லாமல் விமல் மற்றும் ஒரு சில இளைஞர்களுடனே அந்த டீக்கடையை நடத்தி வருகிறார். ஆனால், அரசாங்க சாலை விரிவு பணிக்காக இந்த டீக்கடையை நகர்த்த முடிவு செய்ய இடியாக வந்து விழுகின்றது இந்த செய்தி பசுபதி மற்றும் அந்த ஊர் மக்களுக்கு.

இதை தொடர்ந்து ஊரே இதை எதிர்த்து டீக்கடையை அகற்ற கூடாது என வழக்க தொடர்கிறது. இதற்கிடையில் ஊரில் போலி சாரயாம் கடத்துபவரான சுப்பு, ஒரு நாள் அவசரமாக தன் லாரியை ஓட்டி வர சொல்கிறார்.

அந்த இடத்தில் நந்திதாவை இடித்துவிட்டு செல்லும் லாரியை, விமல் மற்றும் அஞ்சல டீக்கடையில் பணிபுரிபவர்கள் தடுத்து நிறுத்த சுப்பு போலிஸிடம் பிடிப்படுகிறார். இதனால், அஞ்சல டீகடையை ஒழித்துக்கட்ட அவர் முயற்சி செய்கிறார். அதே நேரத்தில் விமலின் நண்பர் யாருக்கும் தெரியாமல் கள்ள நோட்டை அஞ்சல டீக்கடையில் வைக்க, கடைக்கு சீல் வைக்கப்படுகின்றது. இதை தொடர்ந்து பல போராட்டங்களில் இருந்து இந்த அஞ்சல டீக்கடை காப்பாற்றப்பட்டதா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்

விமல் தான் ஹீரோ என்று படத்திற்கு போனால் படத்தின் உண்மையான ஹீரோ பசுபதி தான், இவரை ஏன் இன்னும் தமிழ் சினிமா முழுமையாக பயண்படுத்தவில்லை என்ற ஆதங்கம் நம்மிடையே வந்து போகும், அந்த அளவிற்கு தன் கதாபாத்திரத்தில் யதார்த்தமாக மூழ்கி ஈர்க்கிறார். அதிலும் குறிப்பாக தாத்தாவாக வரும் பசுபதி இந்த டீக்கடையை எப்படி உருவாக்குகிறார் என்ற காட்சி மிகவும் ரசிக்க வைக்கின்றது.

விமல் வழக்கம் போல் தலையை தலையை ஆட்டி நந்திதாவை காதல் செய்கிறார், ஒரு டூயட் பாடுகிறார் தவிர பெரிதாக ஈர்க்கவில்லை, நந்திதாவும் அட்க்கத்தி+இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஸ்டைல் பேமிலி+ப்ரேவ் கேர்ள் கதாபாத்திரம் தான்.

படத்தின் நாடியே அந்த டீக்கடை தான், ஏதோ 7 ரூபாய் டீ சில நிமிடம் பேச்சு என்று கடந்து செல்லும் பலரும் இந்த படத்தை பார்த்த பிறகு இதற்கு பின்னால் மறைந்திருக்கும் நம் முன்னோர்களின் உழைப்பு புரியும்.

ஒரு சமுதாய மாற்றமே இந்த சின்ன டீக்கடையில் இருந்து ஆரம்பிக்கின்றது என ஒரு ப்ளாஷ் பேக் காட்சியில் காட்டும் காட்சியமைப்புகள் சபாஷ் சரவணன். ஆனால், நல்லா இருந்த ஊரும் நாலு போலிஸும் பட சாயலில் ஊரில் இத்தனை நல்லவர்களா என ஆச்சரியப்பட வைக்கின்றது. வில்லன் கூட கடைசியில் திருந்துவது யதார்த்தத்தை விட்டு கொஞ்சம் செயற்கை தனம்.

கோபி சுந்தரின் இசையில் ‘கண் ஜாடை’ பாட்டு ரசிக்க வைக்க, பின்னணி இசையிலும் கலக்குகின்றார். ரவி கண்ணனின் ஒளிப்பதிவு டீக்கடை, கிராம மக்கள் என நம் கண்முன் காட்டினாலும் கொஞ்சம் குறும்படம் பார்ப்பது போல் உள்ளது.
க்ளாப்ஸ்

பசுபதியின் கதாபாத்திரம், அதிலும் குறிப்பாக டீக்கடை உருவானது போல் காட்டும் ப்ளாஷ் பேக் காட்சிகள்.

படத்தின் கிளைமேக்ஸ் யாரும் எதிர்ப்பார்ப்பது போல் இல்லாமல், ஒரு எமோஷ்னல் ட்ரவலாக செல்வது கவர்கிறது.

ஏதோ பத்தோடு பதினொன்று என கடக்கும் டீக்கடையில் கூட இப்படி ஒரு கதை இருக்கின்றது என அழுத்தமாக காட்டிய விதம்.
பல்ப்ஸ்

காமெடி காட்சிகள், அதிலும் இமான் அண்ணாச்சி பொறுமையை சோதிக்கின்றார்.

படம் ஆரம்பித்து முதல் அரைமணி நேரம் கதைக்குள் செல்ல திரைக்கதை தடுமாறுகிறது.

அழுத்தமே இல்லாத வில்லன் கதாபாத்திரம்.

மொத்தத்தில் பழமையான ஒரு டீக்கடைக்கு பின்னால் பலரின் உணர்ச்சிகள் இருக்கிறது என்பதை திரையில் காட்டியதற்காகவே அஞ்சல டீயை ஒரு முறை சுவைக்கலாம்.