Wednesday 24 February 2016

ஜான்சன் & ஜான்சன் பவுடரால் கருப்பை கேன்சர்:பலியான பெண் குடும்பத்திற்கு ஐநூறு கோடி ரூபாய் ஃபைன்!

நம் நாட்டைப் பொறுத்த வரை இங்குள்ள மக்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கும் நோக்கில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டு கொஞ்ச வாரங்களில் மறு படியும் விற்கப்படுவது சகஜமான விஷய மாகி விட்டது..அதிலும் ஜனங்களின் உயிரோடு விளையாடும் பல பொருட்களை இந்தியாவெங்கும் உள்ள கடை களில் தாராளமாகக் கிடைக்கின்றன. சாம்பிளுக்கு சொல்வதானால்…

நிமுசுலிட் (Nimesulide)

இந்த நிமுசுலிட் என்பது ஒரு வலிநிவாரணி மாத்திரை. இம்மாத்திரை அமெரிக்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தபடவே இல்லை. ஆனால் இந்தியாவில் இம் மாத்திரை அதிகம் கிடைக்கிறது. அந்நாடுகளின் மார்க்கெட்டுகளில் விற்கப்படாததற்கு காரணம் என்னவென்று தெரியுமோ? இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரல் செயலிழப்பு ஏற்படும். மேலும் காய்ச்சலுடன் உள்ள குழந்தைகளுக்கு இம்மாத்திரையைக் கொடுக்கவே கூடாது. ஆனால் இந்தியாவில் இம்மாத்திரையை பல டாக்டர்களே சிபாரிசு செய்வார்கள்.

மேகி

சில நாட்களுக்கு முன்பு மேகியில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளுடமேட் (MSG) மற்றும் ஈயம் (Lead) இருப்பதாக சோதனையில் தெரியவந்தது நினைவிருக்கும். இதிலுள்ள MSG-யை அதிகமாக உடலில் சேர்த்து வந்தால் கல்லீரல் பிரச்சனைகள், மூளை பாதிப்பு மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படக்கூடும். மேலும் MSG-யானது ஒருவரை அப்பொருளுக்கு அடிமைப் படுத்திவிடும்.

கோலா

காற்றூட்டப்பட்ட பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நன்கு தெரிந்ததே. மேலும் இது உடல் பருமனை அதிகரிக்கக் கூடியதும் கூட. ஆனால் கருப்பாக இருக்கும் அனைத்து பானங்களும், இன்னும் மோசமானது. ஏனெனில் இவற்றில் அஸ்பார்டேம் என்ற செயற்கை சுவையூட்டி, உடலுக் குள் செல்லும் போது மெத்தனாலாக மாறுகிறது. அதிலும் சூடான நிலையில் மெத்தனால் வாயு உடலுக்குள் செல்லும் போது, அது பார்வையை இழக்கச் செய்யும்.

சிகரெட்

இந்தியாவில் சிகரெட்டை கட்டாயம் தடை செய்ய வேண்டும். ஏனெனில் இது தான் இந்தியாவில் பல மக்களின் உயிரைக் குடிக்கிறது. இதில் உள்ள நிக்கொடின் என்ற வேதி பொருள் மனிதனின் நுரையிரலை அழிக்கும் தன்மையுடையது மேலும் நாளடைவில் இது கேன்சரை உருவாக்கும் குணம் உடையது.

இந்த வரிசையில் இன்றளவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத் தின் தயாரிப்பான, அதன் டால்க்களில் கேன்சரை உருவாக்கும் கெமிக்கல் பொருட்கள் இருப்பதாக, கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் அமெரிக்காவில் இன்றும் ரிக்கார்ட் செய்யப் பட்டுள்ளன. அத்துடன் , “Johnson’s No More Tears baby shampoo“வில் கூட மிகுந்த நச்சு பொருட்கள் கலந்திருப்பதாக அமெரிக்க நுவர்வோர் அமைப்புகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும் அமெரிக்காவில் 2009-ம் ஆண்டு, பல்வேறு அமைப்புகள் சேர்ந்து “பாதுகாப்பான அழகு சாதன பொருட்களுக்கான” விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை தொடங்கினார்கள். அந்த பிரச்சாரத் தின் மூலம், ஜான்சன் & ஜான்சன் நிறுவன தயாரிப்புகள் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பிய துடன் மட்டுமல்லாமல், அந்த பொருட்களை புறக்கணிக்குமாறும் மக்களிடம் வலியுறுத்தினார்கள். இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் , தங்களுடைய நிறுவனத் தின் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் , dioxane மற்றும் formaldehyde-டை, இனிமேல் பயன்படுத்த போவதில்லை என்று 2012-ம் ஆண்டு தெரிவித்தது. dioxane மற்றும் formaldehyde இரண்டுமே மனித உடலில் கேன்சரை உருவாக்குபவை என்பது குறிப்பிடத் தக்கது.

இதனிடையே இந்தியாவில், மும்பையில் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தில் தயா ரிக்கப்பட்ட, குழந்தைகள் பவுடரில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் இருப்பதாக புகார் எழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு, அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப் பட்டது. விசாரணையில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை முலுந்தில் உள்ள ஜான் சன் அன்ட் ஜான்சன் ஆலையில், அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை, 2013-ம் ஆண்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்காவின் அலபாமாவில் வசித்து வந்த plaintiff Jacqueline Fox என்ற பெண்மணி, கடந்த சில வருடங்களுக்கு முன் மிசோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், கடந்த 35 வருடங்களாக ஜான்சன்&ஜான்சன் பேபி பவுடர் மற்றும் Shower to Shower பவுடரை தன் அந்தரங்க சுகாதாரதிற்காக உபயோகபடுத்தி வந்ததாகவும், அதன் காரணமாகவே தனக்கு கருப்பை கேன்சர் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

கருப்பை கேன்சர் இருப்பதாக 2013-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பாகவே, கடந்த ஆண்டு Jacqueline காலமாகி விட்டார். இதையடுத்து, அவருடைய மகன் ஜேக்கி பாக்ஸ் வழக்கை தொடர்ந்து நடத்தினார். இந்த வழக்கில் நேற்று முன்தினம் – அதாவது திங்கள் (22.02.14) மாலை வழங்கப்பட்ட தீர்ப்பில், “ஜான் சன்&ஜான்சன் நிறுவனம் தவறு செய்திருப்பது மட்டுமல்லாமல், அவற்றை பொது மக்களுக்கு தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்தது, தவறை மறைத்து சதித்திட்டம் தீட்டியது மற்றும் மோசடி செய்துள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து Jacqueline வழக்கறிஞர் Ted G. Meadows கூறுகையில் “*ஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ் நிறுவன பவுடர்களில் கலந்திருக்கும் டால்க்(Talc) கேன்சரை உருவாக்கும் என்பது அந்த நிறுவனத் தின் உரிமையாளர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே தெரியும்.ஆனால், விற்பனையை மட்டுமே கருத்தில் கொண்டு, அதை பற்றிய உண்மையை மக்களிடமிருந்து அவர்கள் மறைத்து விட்டனர். அதை பற்றிய ஒரு எச்சரிக்கையை கூட, ஜான்சன்ஸ்&ஜான்சன்ஸ் நிறுவன தயாரிப்புகளில் வெளி யிட அவர்கள் தயாராக இல்லை. தெரிந்தே இந்த விவகாரத்தை, அந்நிறுவனத்தினர் மறைத் திருக்கிறார்கள். டால்க் பற்றிய அந்நிறுவன டாக்குமன்ட்களை படித்தால், பீதியூட்டும், ஆத்திர மூட்டும் வகையிலான விஷயங்களும், கார்பரேட் பேராசைகளும், மனித உயிரின் மீதான அவர்களின் அலட்சியமும் தெரிய வருகிறது” என்றும், தெரிவித்துள்ளார்.

மேலும், இதை முன் வைத்தே தான் வாதிட்டதாகவும், Jacqueline போன்ற அற்புதமான பெண்மணி நீண்டநாள் வாழ்ந்திருக்க வேண்டியவர் என்றும், இருப்பினும் அவருடைய வழக்கில் நீதி பெற்றுத்தந்ததை மிகப்பெரும் கவுரமாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுவதாக வழக்கறிஞர் Ted G. Meadows குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது Jacqueline வழக்கறிஞர் Ted G. Meadows தரப்பில் 1977 -ம் ஆண்டு ஜான்சன் & ஜான்சன் நிறுவனதிற்குள் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் அளிக்கப்பட்ட குறிப்பை, முக்கிய ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

தற்போது கார்பரேட் நிறுவனங்களுக்கான ஊடகமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி “வழக்கை விசாரித்த நீதிபதிகளான foreman, Krista Smith ஆகியோர், வழக்கறிஞர் Ted G. Meadowsன் வாதத்தை ஏற்று கொண்டதாகவும், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் டாக்குமென்ட்களே அந்நிறுவனத்தின் தவறுகளுக்கு உறுதியான சான்றாக இருந்ததாக நீதிபதிகள் நம்பியதாகவும்” குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்தே, ஜான்சன் &  ஜான்சன் டால்க் பயன்படுத்தியதால் கருப்பை கேன்சர் வந்து பலியான ஜாக்குலின் குடும்பத்திற்கு ஐநூறு கோடி ரூபாய் நிவாரணம் அளிக்க Missouri நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

“இனிமே யாரும் இப்படிப் பண்ணாதீங்க ப்ளீஸ்..!’’ - குமுறும் லட்சுமி ராமகிருஷ்ணன்

‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா...’ - ’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் போகிற போக்கில் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லிய ஒரு கேப்ஷன்தான்,

இப்போது தமிழக தேர்தல் திருவிழாவையே  துவக்கி வைத்திருக்கிறது. கோடிகளைக் கொட்டி தி.மு.க. வெளியிடும் தேர்தல் விளம்பரங்களில், ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ என்பதுதான் ஹேஷ்டேக் போல உள்ளது. இடையில் திடீரென லட்சுமி ராமகிருஷ்ணனே அந்த பிரசாரத்தை ஆதரிக்கிறார் என்பது போல செய்திகள் வெளியாக, ’என்ன நடக்கிறது?’ என்று அவரிடமே கேட்டேன்.

குமுறிக் கொட்டத் தொடங்கி விட்டார். ‘’என்னைக் கேக்காம என்னைப் பத்தி எப்படி தப்பான தகவல் பரப்பலாம். எனக்கும் குடும்பம் இருக்கு. என் பொண்ணு அமெரிக்காவில இருந்து வந்திருக்காங்க. அவங்ககூட எனக்கு நேரம் செலவழிக்க முடியலை. இது பத்தி நான் எங்கேயும் எந்த இடத்துலயும் பெரிசா பதில் சொன்னதே இல்லை. அப்புறம் ஏன் எல்லாரும் என்னை டார்கெட் பண்றீங்க!

இந்த ஒரு சின்ன வார்த்தை எங்கே போய் நிக்குதுனு பாருங்க. சின்னச் சின்னதா கிண்டல் பண்ணி, கடைசியில தமிழ் நாட்டோட முதலமைச்சரவே கிண்டல் பண்ற அளவுக்கு வளர்ந்து நிக்குது. அந்த அரசியல் விளம்பரம் லட்சுமி ராமகிருஷ்ணன்ங்ற ஒரு சாதாரண மனுஷிய டார்கெட் பண்ணல. அதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தமிழ்நாட்டு அரசியல் பத்தி விளம்பரம் பண்றாங்க. அதனால அது பத்தி என்கிட்ட கேக்குறதே தேவையில்லாத விஷயம்.

அந்த வார்த்தை என்னை ஏன் இவ்ளோ சுத்துதுனு தெரியலை. முன்னாடி சிவகார்த்திகேயன் அந்த வார்த்தைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு சொல்லியிருந்தாரு. ’என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ பாட்டு ஹிட் ஆனதுக்கு லட்சுமி மேடம் காரணம் இல்லை. பாட்டை உருவாக்கின டீம்தான் காரணம்’னு சொல்லியிருந்தாரு. அதான் எனக்கு கோபம் வந்து ட்வீட் பண்ணேன். ஏன்னா, அப்போ அது எனக்கு பெரிய ஆதங்கமா இருந்தது. என்னதான் கோடி கோடியா சம்பளம் வாங்குற ஹீரோ ஆகிட்டாலும், எனக்கு சிவா இன்னமும் பழைய சிவாதான். என் வீட்டுப் பையனாதான் அவரைப் பார்க்கறேன். கதை விவாதத்துல எல்லாம் என் கூடவே பல நாள் கலந்துட்டு இருக்காரு. அப்படி இருக்கும்போது, அப்படி ஏன் சொல்லணும். அதான் நான் அப்படிக் கேட்டிருந்தேன்.

எல்லாத்துக்கும் மேல விஜய் டிவி ஷோவுலயும் என்னை அவமானப்படுத்தினாங்க. என்னை மாதிரியே கெட்டப் போட்டுக்கிட்டு, ஒருத்தர் மேல கை வைக்கிற மாதிரியெல்லாம் நடிச்சு, என் சுயமரியாதைய சீண்டியிருந்தாங்க. அதை ஒரு தடவ செஞ்சா பரவாயில்லை. திரும்பத் திரும்ப அதை கிண்டலடிச்சு பெரிசாக்கிட்டாங்க. அதனாலதான் நான் கோபப் பட்டேன். ஆனா, இப்போ நிலவரம் வேற. இந்த பிரச்னைல என்னை இழுக்கறது தேவையில்லாத விஷயம்.

என்னை அவங்க டார்கெட் பண்ணல, அப்படி இருக்கும் போது நான் ஏன் ரியாக்ட் பண்ணணும் பதில் சொல்லணும். இன்னைக்கு வந்திருந்த டெய்லி பேப்பர்ல இருக்கறதுகூட நான் சொல்லாதது. அந்த பத்திரிகைல கேட்டப்ப, ‘எதுவும் சொல்ல விரும்பல’ன்னுதான் சொல்லியிருந்தேன். அவங்களா ஏதோ எழுதிட்டாங்க. இத்தோட இதை விட்ருவோம்!’’

- சாந்தமாக முடித்துக் கொள்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

மாண்புமிகு முதல்வர் 'அம்மா' வுக்கு ஒரு தமிழனின் பகிரங்க கடிதம்!

மாண்புமிகு முதல்வர் 'அம்மா' புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம்!

இந்தக் கடிதத்தின் வார்த்தைகளை நீங்கள் கருத்தில்கொள்ளாமல், அது எந்த உணர்வில், எந்த மனநிலையில் எழுதப்பட்டதோ, அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் அம்மா.

ஆம்... ’அம்மா’தான். வெறும் உதட்டசைவில் மட்டுமல்ல; மனதின் அடியாழத்திலிருந்தே சொல்கிறேன். நீங்கள் எனக்கு அம்மாதான்... உங்களது மந்திரிகள், கட்சிக்காரர்களைப் போல் உங்களிடமிருந்து எனக்கு எந்த தேவையும் இல்லை. இருந்தாலும் நீங்கள் எனக்கு அம்மாதான். முதலில் உங்களுக்கு என் இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழ எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.... வாழ்த்துக்கள் அம்மா...!!!

ஆனால், இந்தக் கடிதம் நான் உங்களை வாழ்த்த மட்டும் எழுதப்பட்ட வெறும் வாழ்த்து மடல் அல்ல. அதை உங்கள் கட்சிக்காரர்கள் விதம்விதமாக வீதியெங்கும் பேனர்களாக இந்நேரம் நிறைத்திருப்பார்கள். உங்களுடன் நான் கொஞ்சம் உரையாடவே விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை நீங்கள்  படிப்பீர்களா என்பது நிச்சயமில்லை. அது என் நோக்கமும் இல்லை. என் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவே இந்தக் கடிதம். என் விரக்தி, என் கோபம் இந்த வார்த்தைகளில் வழிந்து ஓடி விடாதா என்ற ஏக்கத்தில்தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்...

அம்மா... உங்களை நான் முதன்முதலாக பார்த்தது என் 7 வயதில். அப்போது நான் இரண்டாம் வகுப்பு மாணவன். தஞ்சையில் நடந்த ‘எட்டாவது உலக தமிழ் மாநாட்டில்’ கலந்து கொள்வதற்காக நீங்கள் வந்திருந்தீர்கள். வீதியெங்கும் மக்கள் கூட்டம், என்னை என் அப்பா தோள் மீது தூக்கி வைத்து உங்களைக் காண்பித்தார். உண்மையைச் சொல்லவேண்டுமானால், அப்போது உங்கள் மீது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. ஆண்கள் நிறைந்திருந்த அந்த மேடையில் தனியொரு பெண்ணாக கம்பீரமாக நீங்கள் நின்று கூட்டத்தினரை எதிர்கொண்டது, இன்றும் நினைவில் நிழலாடுகிறது. வீதி நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடமும், உங்களைப் பார்த்ததை மகிழ்வுடன் ஒரு வாரத்திற்கு சொல்லிக் கொண்டே இருந்தேன்...

சில மாதங்கள் சென்றது. எங்கள் வீட்டிலும், எங்கள் கிராமத்திலும், உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடந்த திருமணம் குறித்துப் பேசத் துவங்கினார்கள். 'பல கோடி செலவழித்து நடந்த திருமணம், ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டார்களாம், மிக டாம்பீகமான ஆடம்பரம்' என்று துவங்கும் அவர்கள் பேச்சு, இறுதியில் கோபமாக முடியும். ஏனெனில் அப்போது எங்கள் கிராமத்தில் நிலவிய வறுமை. உங்களது ஆடம்பரங்கள், அவர்களைக் கிண்டல் செய்வதாக இருந்திருக்கலாம். கோபமூட்டியிருக்கலாம் என நினைக்கிறேன்.

அதே சமயம் மன்னார்குடி பின்னணி கொண்ட சிலர்,  மிரட்டி இடங்கள் வாங்குவது, சொத்துக் குவிப்பது என வரைமுறை இல்லாமல் செயல்படுவதாகவும் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். எனக்கு இது புரியாவிட்டாலும், உங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்ற ஈர்ப்பே அந்த உரையாடலில் கலந்து கொள்ள காரணமாக அமைந்தது. உங்கள் மீது பலர் அவதூறு பேசினாலும், எங்கள் கிராமத்து பெண்கள் உங்கள் பக்கமே நின்றார்கள்... உங்களை அவர்கள் தங்கள் பிரதிநிதியாக பார்த்தார்கள்...

பின்பு தேர்தல் வந்தது, வீதியெங்கும் ‘ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் சீமாட்டிக்கு, எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்’ என்று போஸ்டர்கள் பளிச்சிட்டன. அதில் நீங்களும், உங்கள் தோழி சசிகலாவும் நகைகள் அணிந்திருக்கும் படங்கள் இருந்தது... எங்கள் வீட்டு சுவற்றிலும் அது ஒட்டப்பட்டு இருந்தது, ஆனால் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் நான் கிழித்தெறிந்தேன். எனக்கு அப்போது எந்த அரசியல் புரிதலும் இல்லாவிட்டாலும், உங்களை எனக்குப் பிடித்திருந்தது, அதற்கு உங்களை நேரில் பார்த்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அரசியல் களம் சூடு பிடித்தது! வெள்ளித் திரையின் சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அரசியல் அரங்கில் உங்களுக்கு எதிராகப் பெரிய அணி திரண்டது. கருணாநிதியின் அரசியல் சாதுர்யம், மூப்பனாரின் அரவணைக்கும் திறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணுவின் பிம்பம் எல்லாம் கரம் கோர்த்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகின. உங்கள் கட்சி படுதோல்வி அடைந்ததாக என் சித்தப்பா கூறினார். எங்கள் கிராமத்தில் இருந்த ஆண்கள் எல்லாம் மகிழ்வுடன் கருணாநிதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சிறப்பு பேருந்துகள் அமர்த்திப் புறப்பட்டனர். ஆனால், அப்போதும் எங்கள் ஊர் பெண்கள் உங்கள் தோல்வியை ரசிக்கவில்லை.

அப்போது எங்கள் வீட்டருகே இருக்கும் ஒரு அத்தை சொன்னது நன்றாக நினைவிருக்கிறது, “நான் அந்தம்மாவுக்கு எதிராத்தான் ஓட்டு போட்டேன். ஆனா, அவங்க தோத்துப் போவாங்கனு நினைக்கலை. பயமா இருக்கு. எங்கே திரும்ப கிராமம் முழுக்க சாராயம் பரவிடுமோ..” என்று பதபதைத்தார். ஆம், எனக்கு உறைத்தது, உங்களால்தான் சாராய சாவுகள் குறைந்தது என்று அவர்களது நம்பிக்கை. அதில் அப்போது உண்மையும் இல்லாமல் இல்லை.
 
மீண்டும் தி.மு.க ஆட்சி. வருடங்கள் உருண்டோடின, வழக்கமான அரசியல் சலிப்புகள் வந்தது. மீண்டும் தேர்தல் அறிவிப்பு, தி.மு.க ஒரு வரலாற்று பிழையை செய்தது... ஜாதி கட்சிகளை மட்டும் இணைத்து ஒரு கூட்டணி அமைத்தது. நீங்கள் பலமான கூட்டணி அமைத்தீர்கள்... தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்டுகள் என கூட்டணி அமைத்து, மீண்டும் அரியணை ஏறினீர்கள்.

அந்த ஆட்சிக் காலத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், பேருந்து ஓட்டுனர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  வேலை நிறுத்தம் என்பது அனுமதிக்கப்பட்ட ஒரு போராட்ட வழிமுறை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால் நீங்கள் அதை உணர்ந்தீர்களா என தெரியவில்லை. எஸ்மா சட்டத்தைப் பாய்ச்சினீர்கள். ஆயிரக்கணக்கில் அரசு ஊழியர்களை கைது செய்தீர்கள். நான் உங்கள் தைரியத்தைக் கண்டு வியந்தேன்.

தவறான முடிவாக இருந்தாலும், ஓட்டு வங்கி அரசியலில் இருப்பவர்கள் அரிதினும், அரிதாக எடுக்கும் முடிவுகள் இவை. குறிப்பாக அத்தியாவசிய தேவைகளை கட்டமைக்கக்கூடிய அரசு இயந்திரம் முடங்கிய அந்த சமயம் வேறு எந்தகட்சியாவது இத்தகைய துணிச்சலான முடிவெடுத்திருக்குமா எனத் தெரியவில்லை. அதனாலேயே ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் உங்களுக்கு எதிராக நின்றார்கள்.

அடுத்தடுத்து மதமாற்ற தடைச் சட்டம், கோவில்களில் ஆடு - கோழி பலியிட தடை- பொடாவில் வைகோவை கைது செய்தது என உங்கள் துணிச்சலை நிரூபித்துக்கொண்டே இருந்தீர்கள். இது உங்களுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணி அமைய வித்திட்டது. இதுவே பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் படு தோல்வி அடைய காரணமாக அமைந்தது.

பின்பு, அனைத்து சட்டங்களையும் ரத்து செய்தீர்கள். இதுதான் நீங்கள் முதன்முறையாக சறுக்கிய இடம் என நினைக்கிறேன். இது மட்டுமல்லாமல் 2004ல், மிகபெரிய பேரிடர் தமிழகத்தைப் புரட்டிப் போட்டது. யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும், அப்போது உங்கள் அரசு மோசமாகச் செயல்படவில்லை. (சிறப்பாக செயல்பட்டது என்று கூறவில்லை..!).

மீண்டும் தேர்தல்... மீண்டும் கூட்டணி... மீண்டும் தி.மு.க ஆட்சி... இரண்டு ரூபாய் அரிசி திட்டம், 2 ஏக்கர் இலவச நிலத் திட்டம் என அவர்கள் ஆட்சியை சிறப்பாகவே தொடங்கினார்கள். ஆனால், நில ஆக்ரமிப்பு, அபகரிப்பு, மதுரையில் ஒரு பவர் சென்டர், தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என அவர்களின் வெற்றி மமதை, நேரடியாக மக்களைப் பாதித்தது. இதில் ஈழப் பிரச்சனையும் சேர்ந்து கருணாநிதி மீதும், அவர் சகாக்களின் மீதும் ஒரு வெறுப்பை உண்டாக்கியது. நீங்கள் அல்ல, மக்கள் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார்கள். சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி வெற்றி பெற்றது. உங்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால், உங்கள் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

தி.மு.க-வால், எதிர்கட்சித் தலைவர் பதவியைக் கூடப் பெற முடியவில்லை! ஆனால் ஒன்று அம்மா எப்போதெல்லாம் திமுக எதிர்கட்சியாகிறதோ அப்போதெல்லாம்தான் அதன் செயல்பாடு வீரியமாக இருக்கும் என்பார்கள். ஆனால் உங்கள் கட்சி எதிர்கட்சியாகிறபோது நீங்கள் அந்தளவிற்கு செயல்புரிந்தாக கேள்வியுற்றதில்லை. உங்கள் கட்சிக்காரர்களும் தத்தம் தொழில்களில் முடங்கிப்போய்விடுவார்கள். திமுக மீதும் 'இந்த முறை இந்தம்மாவிற்கு போடுவோம்' என்ற மக்களின் வழமையான எண்ணத்தின் மீதும் உங்களுக்கு அந்தளவிற்கு நம்பிக்கை

எண்பதுகளில் பிறந்த என் தலைமுறையினர் அரசியல் விழிப்புணர்வு பெற்ற காலம் இது. உங்கள் ஆட்சிக் காலத்தை உன்னிப்பாகக் கவனித்தோம். நான் உங்கள் அனைத்து முடிவுகளையும் ஆராயத் தொடங்கினேன். உங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதத்துக்கு விட்டேன். எனக்கு இப்போது உங்கள் பலங்கள் எல்லாம் பலவீனமாக தெரிய தொடங்கியது.

தி.மு.க நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது என்றால், பல பவர் சென்டர் இருக்கிறது என்றால், அதற்கான தொடக்கமும் நீங்கள்தான் அம்மா. 1991-96 ல் நீங்கள் என்ன செய்தீர்களோ அதைத்தான் அவர்கள் 2006-11ல் செய்தார்கள். ஈழப் பிரச்னையில் தமிழின தலைவர், தமிழினத்திற்கு எதிராக தன் பெண்டு, தன் பிள்ளை நலனுக்காக மிகப் பெரிய துரோகம் செய்தார் என்றால்.... நீங்கள் மட்டும் என்ன செய்தீர்கள் அம்மா...? “போர் ஒன்று நடந்தால், மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றீர்கள் சர்வசாதாரணமாக..!

எனக்கு பாவ, புண்ணியங்களில் நம்பிக்கை இல்லை... ஆனால், என் நண்பன் அடிக்கடி கூறுவான், “அதிமுகவும், ஈழ ஆதரவாளர்களும் எப்போதோ செய்த புண்ணியம்தான், ஈழப் போர் நடந்த காலத்தில் ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதது. இருந்திருந்தால், கருணாநிதி போல அவரும் அம்பலப்பட்டு இருப்பார். ஈழ ஆதரவாளர்களும் பல துயரங்களை அனுபவித்திருப்பார்கள்...” என்று! கூடங்குள அணு உலை போராட்டத்தில், நீங்கள் எடுத்த முடிவுகளைப் பார்த்த பின், அவன் சொன்னது உண்மை என்று புரிந்தது.

இன்னொரு நெருங்கிய நண்பர், தீவிர அ.தி.மு.க-காரர். அவர் நீங்கள் தவறான முடிவுகள் எடுக்கும்போதெல்லாம் சொல்வார், “ஏங்க.. அவுங்க நல்லவங்க... ஆனா, பல விஷயம் அவங்க கவனத்துக்கு தெரிவதில்லை.... எல்லாம் சுத்தியிருக்கிறவங்க பண்ற வேலை” என்பார். இது அவரின் கருத்து மட்டுமல்ல, எதிர் முகாமில் இருந்தாலும் உங்கள் மீது அபிமானமுள்ள பெரும்பான்மையானவர்களின் கருத்தும் கூட. நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கெல்லாம் அவர்கள்தான் காரணமென்றால், உங்களுக்கு எதற்கு ’காவிரி தாய்’, சமூக நீதி காத்த வீராங்கனை என்றெல்லாம் பட்டங்கள்....? அதையும்கூட அந்த சுற்றியிருக்கிறவர்களுக்கு (சசிகலாவும் திவாகரனும்தான் அவர்கள் என்று நான் சொல்லவில்லை. மற்றவர்கள் சொல்கிறார்கள்) பிரித்துக் கொடுத்துவிடலாமே...?

சொத்துக் குவிப்பு வழக்கில் உங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. சிறையில் அடைக்கப்பட்டீர்கள். இந்திய வரலாற்றிலேயே முதன்முதலாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற பெருமையை தமிழகத்திற்கு தேடி தந்தீர்கள். அப்போதும்கூட, தமிழக மக்களுக்கு உங்கள் மீது ஒரு 'Soft Corner' இருந்தது. மன்னித்து விட்டிருக்கலாம் என்று கூட பேசத் துவங்கினர். ஆனால், அப்போது உங்கள் அமைச்சர்கள் செய்த காரியங்கள், உங்கள் மீது ஒரு வெறுப்பை உண்டாக்கியது.

ஒரு குற்றவாளியாக நீங்கள் சிறையில் இருந்தபோது உங்கள் அமைச்சர்கள் தலைமைச்செயலகத்தில் துருத்தித் தெரிந்த உங்கள் படத்தை மேஜையில் வைத்து கும்பிட்டு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்கள். அரசியலமைப்பு சட்டத்தை ஆவணமாக முன்மொழிந்து பொறுப்பேற்ற அமைச்சர்கள் அதையே கேலிக்குள்ளாக்கிய விஷயங்கள் அவை. மொத்த இந்தியாவே தமிழகத்தை முகம் சுளிப்போடு பார்த்த தருணங்கள் அவை அம்மா.

கட்சிக்காரர்கள் உங்கள் மேல் உள்ள மரியாதையில் அலகு குத்தினார்கள், உங்கள் மேல் உள்ள பாசத்தில் மண்சோறு சாப்பிட்டார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா....? நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். என் அம்மா நிச்சயம் அவ்வளவு முட்டாள் கிடையாது. சிறையிலிருந்து மீண்டீர்கள். 10 சதவீதத்திற்கும் கீழ் ஊழல் செய்திருந்தால் பிழை இல்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பால் விடுதலையானீர்கள். மீண்டும் தேர்தலில் நின்றதும், வென்றதும் முதல்வராக பொறுப்பேற்றதும் எங்களுக்கு கனவு போல் இருந்தது. நாட்கள் நகர்ந்தன.

காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் மதுவுக்கு எதிரான தமிழகம் தழுவிய போராட்டங்களுக்கு பிள்ளையார் சுழியாக இருந்தது. தமிழகமே உங்களிடமிருந்து மதுவுக்கு எதிரான ஓர் அரசாணையை எதிர்பார்த்தது. நானும் ஆவலாக இருந்தேன். ஆனால், நீங்கள் மெளனமாக இருந்தீர்கள். மதுவுக்கு எதிராகப் போராடியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தீர்கள். எந்தப் பெண்கள் நீங்கள் ஆட்சியில் இருந்தால், சாராய சாவுகள் இருக்காது என்று நம்பினார்களோ, அந்தப் பெண்கள் உங்களுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடினார்கள். அவர்களில் பலபேர் தாலிக்கு தங்கம் கொடுத்த உங்களால் மன்னிக்கவும் உங்களது அரசு நடத்தும் மதுக்கடைகளால் தாலி இழந்தவர்கள். இன்னமும் போராடுகிறார்கள். நீங்கள் இன்னமும் மெளனமாகத்தான் இருக்கிறீர்கள் அம்மா.

எல்லா எதிர்ப்புகளுக்கு பிறகும், உங்கள் மீது ஒரு பெருங்கூட்டம் நம்பிக்கை வைத்திருந்தது. அது எப்போது சரிந்தது தெரியுமா....? ’அம்மா ஸ்டிக்கர்’களுக்குப் பிறகுதான் .... அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா உணவகம் என்று எல்லா திசைகளிலும் நீங்கள் பாடிய சுயபுராணத்தில் லயித்த உங்கள் தொண்டர் படை, கடைசியில் சென்னை பெரு வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவ லாரி லாரியாக, கொண்டு வந்த நிவாரணப் பொருட்கள் மீதும் உங்கள் முகம் பதித்த ஸ்டிக்கரை ஒட்டியது உங்கள் அரசியல் வரலாற்றில் மாபெரும் அசிங்கம். உங்கள் மீது இருந்த கடைசி நம்பிக்கையும் எங்களுக்கு சரிந்த தருணம் அதுதான்!

வரலாறு பல அசாதாரண ஆட்சியாளர்களைச் சந்தித்திருக்கிறது. அவர்களின் வீழ்ச்சிக்கும் சாட்சியாக இருந்திருக்கிறது. அவர்கள் எப்படி வீழ்ந்தார்கள் தெரியுமா அம்மா? மமதை, சுய புராணம் பாடும் ஒரு கூட்டத்தை பக்கத்தில் வைத்திருந்தது, ஜனநாய வழியில் தாங்கள் வெற்றியை தங்களது தனிப்பட்ட வெற்றியாக கருதி செயல்பட்டது இவைதான். துரதிருஷ்டவசமாக அது இங்கேயும் இருக்கிறது. அதை நீங்கள் உணர்கிறீர்களா....? ’மக்களிடையே உள்ள ’ஸ்டிக்கர் வெறுப்பு’ பற்றி எனக்கு தெரியவே தெரியாது’ என்று நீங்கள் சொன்னால், அது கூடத் தெரியாமல் இருக்கும் உங்களை நம்பி நாங்கள் எப்படி எங்கள் மாநிலத்தின் எதிர்காலத்தை ஒப்படைப்பது? ஒருவேளை தெரிந்து நீங்கள் அமைதியாக இருந்தால், அப்போது நீங்களும் அந்த ஸ்டிக்கர்களை ரசிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

இன்னொரு புறம் அ.தி.மு.கவினர் உங்கள் பெயர், உருவத்தை பச்சை குத்துவதும், மொட்டை அடிப்பதும் உங்கள் மீது உள்ள பிரியத்தாலா...கண்டிப்பாக இல்லை; அதற்கு வேறு சில காரணங்கள் உண்டு. இதை எப்போதும் உங்கள் அமைச்சரவை சகாக்கள் சொல்ல மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் ’முன்னாள் அமைச்சராக’ ஆவதை விரும்புவதில்லை.

உங்களின் அரசியல் குரு எனப்படும் எம்.ஜி.ஆரும் ஒரு தருணத்தில்,  'கட்சிக்காரர்கள் தங்கள் கைகளில் கட்சியின் சின்னத்தை பச்சை குத்திக்கொள்ளவேண்டும்' என கட்சியினருக்கு வலியுறுத்தினார். அதற்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் எழுப்பிய அதிருப்தியில், கட்சியே கொஞ்சம் ஆட்டம் கண்ட வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. எம்.ஜி.ஆரே கொஞ்சம் ஆடிப்போனார். அத்துடன் மவுனமானார். அதிமுகவில் சுயமரியாதை உள்ள தலைவர்கள் இருந்த காலம் அது.

ஆனால் அப்படி சுயமரியாதை உள்ளவர்களை இன்று தேடிப்பார்த்துதான் கண்டுபிடிக்கவேண்டும். இப்போதுள்ளவர்கள் பொய்கள் சொல்லியாவது, உங்களைக் குஷிப்படுத்த வேண்டும். ஆனால், எனக்கு அப்படியான நிர்பந்தம் எதுவுமில்லை. உங்கள் மீதுள்ள பாசத்திலும் அபிமானத்திலும் உண்மையைச் சொல்கிறேன்.

தவறுகளிலிருந்து பாடம் கற்க மறுக்கும்போதுதான் ஒரு தலைவனின் தோல்வி தொடங்குகிறது . நீங்கள் அதைத்தான் தொடர்ந்து செய்கிறீர்கள். வரலாறு தொடர்ந்து உங்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. பிளசண்ட் ஸ்டே, டான்சிக்கு பிறகு வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. குறிப்பாக, தருமபுரியில் மூன்று மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட பிறகும் உங்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது. ஆனால், அதை நீங்கள் மிக மோசமாகக் கையாள்வதாகவே நினைக்கிறேன் அம்மா.

இந்தக் கடிதத்தை நீங்கள் படிப்பீர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அம்மாவைத் தவறாகப் பேசுவதை எந்த மகனும் விரும்பமாட்டான். நானும் விரும்பவில்லை. நீங்கள் முன்னெப்போதையும் விட இப்போதுதான் அதிக விமர்சனங்களை எதிர்கொள்கிறீர்கள். ஆனால், அதிலுள்ள உண்மையை புரிந்து கொள்ளாமல், எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு. இதுபோன்ற வழக்குகளில் காட்டும் ஆர்வத்தை, தமிழ் நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் காட்டியிருந்தால், தமிழகமே உங்கள் பிறந்த நாளுக்கு மனப்பூர்வமாக வாழ்த்தி இருக்கும்.

இப்போதும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்னும் தேர்தல் நாள் அறிவிக்கவில்லை. அதனால் சில முடிவுகளை அதிரடியாக எடுக்கலாம். முதலில் இயற்கை வளக்கொள்ளைக்கு எதிராகச் செயல்படுங்கள். கிரானைட் கொள்ளை தொடர்பான சகாயம் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுங்கள். நீர் வழிப்பாதையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள். ஆக்ரமிப்புகள் என்றால் ஏழைகளின் குடிசைகள் மட்டுமல்ல... பெரு நிறுவனங்களின் கட்டிடங்கள், கட்சிக்காரர்கள் கம்பிவளை போட்டு மடக்கியிருக்கும் அரசு நிலங்கள். மதுக்கடைகளை படிப்படியாக மூட அரசாணையிடுங்கள். இவை எல்லாம் உடனே சாத்தியமாகக் கூடியவையே!

நாம் எப்போதும் அம்மாவிடம் அதிக உரிமை எடுத்து கொள்வோம். நம் கோபங்களை, வெற்றிகளை, தோல்விகளை அம்மாவிடம்தான் முதலில் பகிர்ந்து கொள்வோம். நானும், உங்கள் மீது உள்ள கோபங்களை, வருத்தங்களை, உங்களிடமே தெரிவிக்கிறேன், உண்மையான பாசத்துடன். தேர்தலில் வெற்றியோ... தோல்வியோ நான் உங்களை எப்போதும் ’அம்மா’வாகத்தான் பார்ப்பேன். ஆனால், ஒருவேளை தேர்தலில் வெற்றிக் கனி கிட்டாவிட்டால், உங்கள் சுயபுராணம் பாட நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் கூட்டம் கனிகள் உள்ள இன்னொரு மரத்திற்கு பறந்து போய்விடும். நீங்கள் தனி மரமாக ஆகிவிடுவீர்கள்.

என் கடிதத்தின் ஏதேனும் ஒரு எழுத்து உங்களைக் காயப்படுத்தி இருந்தால் கூட மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா, நன்றி!

ஆரம்பத்திலிருந்து அஜித்திற்கு மட்டும் தான் மரியாதை கொடுப்பேன், ஏனென்றால்? ராதாரவி ஓபன் டாக்

நடிகர் சங்க தேர்தலின் போது ராதாரவி பேசியது எல்லாம் அனைவரும் அறிந்ததே. அவர் எல்லோரையும் பெயர் சொல்லி தான் அழைப்பார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட இதுக்குறித்து இவர் ‘நான் என் சக நடிகர்கள் அனைவரையும் பெயர் சொல்லி தான் அழைப்பேன். ஆனால், அஜித்தை மட்டும் தான் இன்று வரை சார் என்று அழைக்கிறேன்.

ஏனெனில் அவரின் உதவி மனப்பான்மை என்னை மிகவும் கவர்ந்தது, யார் எந்த உதவி கேட்டாலும் லட்சம் லட்சமாக அள்ளிக்கொடுப்பார், அவரை போலவே தற்போது சூர்யா கூட S3 படப்பிடிப்பில் ஒருவரின் கல்விக்காக ரூ 1 லட்சம் கொடுத்தார்’ என கூறியுள்ளார்.

கணிதன் விமர்சனம் - கொஞ்சூண்டு குமாரசாமி! நிறைய்ய நிறைய்ய குன்ஹா!

செய்யாத தப்புக்காக ‘சேதாரம்’ ஆகும் ஒருவன், தப்பு செஞ்சவனுக்கு தருகிற ‘செய்கூலி’தான் கணிதன்! தனி மனித தடால் புடால்கள் இல்லாமல், பொது நோக்கத்திற்காக போர் வாளை வீசியிருக்கும் இப்படத்தின் டைரக்டர் டி.என்.சந்தோஷுக்கு ஒரு வெரிகுட் சர்டிபிகேட் வழங்கலாமா? (போலி சர்டிபிகேட் இல்லேங்க)

எப்படியாவது பிபிசி சேனலில் நிருபராகிவிட வேண்டும் என்று துடிக்கும் டி.வி நிருபர் அதர்வாவுக்கு எந்நேரமும் அதே நினைப்புதான். அந்த நேரம் பார்த்துதான் அவர் வேலை பார்க்கும் துக்கடா டி.வி ஒன்றின் உரிமையாளர் மகள் கேத்ரீன் தெரசா, அதர்வாவின் லைஃப்-ல் கிராஸ் ஆகிறார். காதல்…! முழுசாக ஒரு டூயட் முடிவதற்குள் ட்விஸ்ட்! இன்டர்வியூவின் போது இவர் கொடுத்த சர்டிபிகேட்டுகளை சரிபார்க்க போலீஸ் உதவியை நாடுகிறது பிபிசி சேனல். பார்த்தால்… இவரது போலி சர்டிபிகேட்டை பயன்படுத்தி வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெறப்பட்டு ஏப்பம் விட்டதாக சொல்கிறது க்ரைம் ரெக்கார்ட்! அதர்வா மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருக்கும் ஏராளமான இளைஞர்களின் சர்டிபிகேட்டுகள் சம்பந்தப்பட்ட பல்கலைகழகங்களின் உதவியுடன் போலி எடுக்கப்பட்டு இத்தகைய வெளிநாட்டு வங்கிகளில் பல கோடிகள் ஸ்வாகா செய்யப்பட்டிருக்க, செய்யாத தப்புக்காக ஜெயிலுக்கு போகிறார் ஹீரோ! பெயிலில் வெளியே வரும் அதர்வா, போலிகளை கண்டுபிடித்து தோல் தனியே, ரத்தம் தனியே பிய்த்து எடுப்பதுதான் மீதி!

துப்பறியும் கதைகளுக்குள் தோட்டாவாக பொருந்துகிற அளவுக்கு கூர்மையாக இருக்கிறார் அதர்வா. தட்டிவிட்டால் விண்னென்று ஜம்ப் ஆகிற உடல்வாகு வேறு இருக்கிறதா? ஆக்ஷன் காட்சிகளில், அதிர்கிறது வெண்திரை! அப்பா மகன்களின் உறவில் இருக்கிற தலைமுறை இடர்பாடுகள் இவர் விஷயத்திலும் இருக்கிறது. ஆனால் அதுதான் சுவாரஸ்யம். தாத்தா காலத்திலிருந்து ஆல் இண்டியா ரேடியோவில் செய்தி வாசிக்கிற குடும்பமாக இருந்தாலும், “போதும்டா… எங்க கஷ்டம். நீயாவது வேலைய மாத்திக்கோ” என்று கெஞ்சும் அப்பா நரேனும், “அடைந்தால் பிபிசி” என்று துடிக்கும் மகன் அதர்வாவும் பிரமாதமான டேக் ஆஃப்!

அதர்வா- கேத்ரின் காதல், ஒப்புக்கு ஒத்தடமாக இருந்தாலும் கேத்ரின் அழகு ஆங்காங்கே தூவப்பட்ட ரோசா இதழ்கள். அவருக்கு டப்பிங் கொடுத்த பெண் யாரோ? கொஞ்சல் ஓவர்தான். அது ஒருபக்கம் இருக்கட்டும்… ஆபத்தான இடங்களுக்கு கூடவா இவரையும் சூட்கேஸ் மாதிரி இழுத்துக்கொண்டு போக வேண்டும்? போங்கப்பா… கேத்ரீன் காஸ்ட்யூமருக்கு எக்ஸ்ட்ரா பேமென்ட் கொடுக்கலாம். உடைத்தேர்வுகளில் அப்படியொரு அழகும் நேர்த்தியும்.

போலி சர்டிபிகேட் அடிக்கும் கும்பலோடு குடித்தனமே நடத்தியிருப்பார் போலிருக்கிறது டைரக்டர் டி.என்.சந்தோஷ். இண்டு இடுக்கு விடாமல் இழுத்துப்போட்டு பந்தி வைத்துவிட்டார். இனி எங்காவது நம் சர்டிபிகேட்டுகளை ஜெராக்ஸ் எடுக்கக் கொடுப்பது கூட எவ்வளவு ஆபத்து என்றாகிறது மனசு! அதுமட்டுமல்ல, வசனங்களில் துணிச்சல் வழிகிறது. “அண்ணா யுனிவர்சிடியிலிருந்துதான் சர்டிபிகேட்டுகள் போயிருக்கணும்” என்று அப்பட்டமாக பேசுகிற அளவுக்கு துணிச்சல் மிகுந்த வரிகளை மீண்டும் நினைத்தால் ஆச்சர்யமே மிஞ்சுகிறது. (எப்படிய்யா அனுமதிச்சாங்க?)

நட்புக்காக மட்டுமே கருணாகரன் சிக்கிக் கொண்டு உயிர் பிழைப்பதெல்லாம் ஓணானை இழுத்து வேட்டிக்குள் விட்டுக் கொள்வதை விட கொடுமையானது. காமெடியும் குணச்சித்திரமும் கலந்து கைதட்டல் பெறுகிறார் கருணாகரன். வில்லன் தருண் அரோரா சும்மா பார்வையாலேயே மிரட்டுகிறார். பாக்யராஜ் இருக்கிறார். அதிகம் வேலையில்லை.

தட தட வேகத்தில் செல்லும் திரைக்கதை, இரண்டாம் பகுதியின் கடைசியில் லேசாக பள்ளத்தில் விழுந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுவதை தவிர்த்திருக்கலாம்.

ட்ரம்ஸ் சிவமணியின் இசையில் எல்லா பாடல்களும் கொள்ளையடிக்கிறது. பின்னணி இசை மட்டும் வேறொருவர். அவரும் கொடுத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.

கணிதன்- கொஞ்சூண்டு குமாரசாமி! நிறைய்ய நிறைய்ய குன்ஹா!

ஃப்ரீடம் 251: ஆனந்தம் யாருக்கு?

உலகில் இன்றைய தேதிக்கு, ஒருவர் இலவசமாகவோ அல்லது குறைந்த விலைக்கோ ஏதாவது பொருட்கள் அல்லது சேவையை வழங்குகிறார்கள் என்றாலே அதற்கு பின் ஏதாவது அரசியல் கட்டாயமாக இருக்கத்தான் செய்யும். அதுவும் கார்ப்பரேட் நிறுவனங்களை பற்றி சொல்ல வேண்டுமா என்ன...? எந்த ஒரு செயலுக்கு பின்னும் லாப நோக்கத்தோடுதான் செயல்படுவார்கள் கார்ப்பரேட் முதலாளிகள் என்பதற்கு பல நூறு பணக்கார முதலைகளை பட்டியலிட முடியும்.

இந்தியாவில் இன்று செல்போன் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் சுமாராக 70 சதவிகிதம் (84 கோடி பேர்). மீதமுள்ள 30 சதவிகித (36 கோடி பேர்) மக்களை யார் தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக மாற்றிக் கொள்கிறார்களோ அவர்கள்தான் அடுத்த பல ஆண்டுகளுக்கு இந்தியா எனும் பசுமாட்டின் மடியிலிருந்து தொலைத்தொடர்பு  கட்டணம் எனும் பெயரில் பாலை கறப்பார்கள்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் பெரிய மாற்றங்களை கொண்டு வர மல்லுகட்டிக் கொண்டிருக்கிறார் இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவர். சமீபத்தில் தனக்கும், தன் நிறுவனத்தின் பாதுகாப்புக்காகவும் 16,000 ஓய்வுபெற்ற ராணுவ மற்றும் பாதுகாப்பு படை வீரர்களை கொண்ட தனி ராணுவத்தையே அமைத்துக் கொண்டிருக்கிறார் அவர் என்று  அண்மையில் ஒரு செய்தி வெளியாகி பகீர் கிளப்பியது.

இவருக்கு தற்போது இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது, ஏனெனில் இவர் நடத்தும் மற்ற நிறுவனங்களில் பெரும்பாலானவைகள் தேக்க நிலையிலேயே இருக்கின்றன. சமீபத்தில் இவரின் துணி உற்பத்தி நிறுவனத்தை கூட விற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் தடத்தை, இந்திய தொலைதொடர்புத் துறையில் வலுபடுத்திக் கொள்ள இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கலாம். தன் நிறுவனத்தின் 4G சேவையை அதிகரிக்க சுமாராக 1 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கிறார். அதில் வெறும் 10,000 கோடி ரூபாயை மட்டும் செலவழித்தால் கூட 30 கோடி பேருக்கு 251 ரூபாய்க்கு போனை கொடுத்துவிடலாம்.

இணைய நிறுவனங்கள்

இந்தியாவில் கூகுள் லூம், ஃபேஸ்புக் ஃப்ரீபேசிக்ஸ் போன்றவைகள் மூலம் இணையத்தை இந்தியாவில் அதிகமாக பயன்படுத்த வைக்க முயற்சித்தது அல்லது முயற்சித்துக் கொண்டிருப்பது எல்லாம் நாம் அறிந்ததே. கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களின் வருவாய் அசுர வேகத்தில் வளர வேண்டும் என்றால் அதிக இணைய பயன்பாட்டாளர்கள் வேண்டும், மற்ற நாடுகளில் மல்லுக்கட்டுவதை விட இந்தியாவில் இருக்கும் அரசை சரிகட்டுவது எளிது. எனவே இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினாலே தானாக இந்தியாவில் இணைய பயன்பாடும் அதிகரிக்கும். அதற்குதான் இந்த ஃப்ரீடம் 251 மொபைல்.

இ - காமர்ஸ் நிறுவனங்கள்

இந்தியாவில் இணைய வசதி அதிகரித்தால் ஆனந்தப்படப் போகும் நிறுவனங்களில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. அதிக இணைய பயன்பாட்டாளர்கள், அதிக வாடிக்கையாளர்களாக உருவாவார்கள். இ- காமர்ஸ் நிறுவனங்களின் பலமே அவர்களிடம் இருக்கும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்கள்தான். அந்த விவரங்கள் அதிகமானால் யாருக்கு என்ன மாதிரியான பொருட்கள் தேவை, இந்தியா முழுவதுமாக எந்த நேரத்தில் எந்த மாதிரியான பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்பது போன்ற ஃபிங்கர் டிப்ஸ் விவரங்கள் அவர்களின் கைக்குப் போகும். அடுத்த மாதம் என்ன தேவை என்பதை அறிந்து, உலகிலேயே எங்கு விலை குறைவாக அந்த பொருட்கள் கிடைக்கும் என்பதை கணக்கிட்டு அங்கிருந்து வாங்கி வந்து லோக்கல் கடைகளில் கொடுக்கும் விலையை விட மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யத் தொடங்குவார்கள். இன்று இ-காமர்ஸில் கிடைக்காத பொருட்களே இல்லை.

அப்படிப்போனால் சில்லறை வியாபாரிகளால், உலகத்திலேயே குறைந்தவிலைக்கு பொருட்களை விற்கும் நிறுவனத்தை எதிர்த்து நிற்க முடியாமல் நொடிந்து போவார்கள். உள்நாட்டு சந்தை சரியத் தொடங்கும், இ - காமர்ஸ் நிறுவனங்கள் இன்னொரு வால்மார்ட்டாக உருவாகும். நாடு நான்கு கால் பாய்ச்சலில் வளரும், மோடியும் என் நாடு வளர்கிறது என்று மார்தட்டி செல்ஃபி எடுத்துக்கொள்வார். ஆனால் தள்ளுவண்டி வியாபாரம், நடைபாதை விற்பனை, சில்லரை வர்த்தகம் என பல வடிவங்களில் வியாப்பித்திருக்கும் சாமான்ய வியாபாரிகளின் நிலை என்னவாகும்...? 

ரஜினியே சொன்ன அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான்

தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் பவன் கல்யாண். வெறித்தனமான ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் அவரை  தெலுங்கு திரையுலகின் பவர்ஸ்டார் என ரசிகர்கள் அழைப்பது நாமறிந்ததே. சமீபத்தில் அவரைப் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் சுனில்.

அவர் பேசுகையில், பிப்ரவரி 19 வெளியாகிய கிருஷ்ணாஷ்டமி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அப்படத்தின் நாயகன் சுனில், ஒரு முறை ரஜினி பவன் கல்யாணின் ஜல்சா படத்தின் போஸ்டரை பார்த்துவிட்டு, அதில் பவன் கல்யாணின் தனித்துவமான ஸ்டைலினை கண்டு ஆச்சரியப்பட்டதோடு, டோலிவூட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவராகத் தான் இருப்பார் என ரஜினி கூறிய தருணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என இங்கு பெரும் போராட்டமே நடந்து கொண்டிருக்கையில், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தான், தெலுங்கில் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரஜினி கூறியதாக வெளிவந்துள்ள இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழோ, தெலுங்கோ சூப்பர் ஸ்டாரிடமிருந்தே, சூப்பர் ஸ்டார் என பாராட்டு பெற்ற பவன் கல்யாண்க்கு நிச்சயம் இது கூடுதல் மாஸ் தான். 

குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை....?


நமது ஊர்களில் குழந்தைகளுக்கு காது குத்துவது ஒரு வழக்கம். ஆனால் குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஒரு சில விசயங்களை நாம் பேண வேண்டும்

* காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும்.


* குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை இழுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது அவர்களுக்கு மிகுந்த வலியினை கொடுக்கும்.


* காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல், தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.


* காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால் காது குத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது.


* அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது.


* காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை பயன் படுத்தி கழுவவும்.


* சில நேரங்களில், காது குத்திய இடத்தில் சிறிய தழும்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். ஆனால் இது கூட பலபெரும் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது.


* உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால் அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி, இது போன்ற காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.


* குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.


* குழந்தை மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.


* காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை என்றால் அது குழந்தைகளுக்குஅதிகமான வலியை ஏற்படுத்தும்.