Saturday 30 January 2016

குஷ்புவிற்கு முத்தம் கொடுத்த சர்ச்சைக்கு சாமர்த்தியமாக பதில் கூறிய மாதவன்

மாதவன் நடிப்பில் தற்போது திரையரங்கில் வெற்றி நடைப்போடும் படம் இறுதிச்சுற்று. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக குஷ்பு தொகுத்து வழங்கும் ஒரு ஷோவில் மாதவன் கலந்துக்கொண்டார்.

இதில் குஷ்புவிற்கு மாதவன் முத்தம் கொடுத்தார். இவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ பலரும் பலவிதமாக கருத்துக்களை கூறினர்.

இதற்கு ஒரு வார இதழில் மாதவன் பதில் அளிக்கையில், ‘குஷ்பு எனக்கு ஒரு அக்கா மாதிரி தான், தற்போது சொல்லுங்கள் அந்த முத்தத்தில் என்ன தவறு என்று’ என அசத்தலாக கூறினார்.

முதல் நாள் இத்தனை கோடி வசூல் செய்து விட்டதா அரண்மனை-2- பிரமாண்ட வரவேற்பு

அரண்மனை-2 படம் நேற்று தமிழகம் முழுவதும் 355 திரையரங்குகளில் வெளிவந்தது. படத்திற்கு முதல் காட்சியிலிருந்தே நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தின் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ 5.22 கோடி வசூல் செய்துள்ளதாம். இவை சாதரண விஷமில்லை.

இப்படத்துடன் இறுதிச்சுற்று வந்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இவை ஒரு இரண்டாம் கட்ட முன்னணி நடிகரின் படத்திற்கு இணையான வசூல் என்று கூறப்படுகின்றது.

இப்பதான் பழ.கருப்பையா வீட்ல கல் விழுந்திச்சு, இதுல இவரு வேற?

“ஆட்டுக்கு தாடி மாதிரி இது எதுக்குங்க அநாவசியமாக?” இப்படியொரு கேள்வியை எழுப்பி எழுப்பி தொண்டை வறண்டு போய் கிடக்கிறது கோடம்பாக்கம். எது குறித்து இப்படியொரு பதற்றம்? வேறொன்றுமில்லை, படங்களுக்கு தரப்படும் வரிவிலக்கு தொடர்பான அலுப்பும் அனத்தலும்தான் இது. தொடர்ந்து தன் படங்களுக்கு வரிவிலக்கு மறுக்கப்படுவதாக உதயநிதி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வருகிறார். அது தொடர்பான விவாதங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. அவராவது முன்னாள் முதல்வரின் குடும்பம். காரசாரமான எதிர்கட்சியின் வாரிசு. ஐயோ பாவம்… இந்த கதிர் என்ன பண்ணினார்?

முதலில் யார் இந்த கதிர்? ‘காந்தர்வன்’ என்ற படத்தில் அறிமுகமான ஹீரோ. அதற்கப்புறம் நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’. சென்னையிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி செல்லும் ஒரு காரின் டிரைவர் கதிர். கூடவே பயணம் செய்யும் ரேடியோ ஜாக்கி ஸ்வப்னா மேனன். இவர்கள் இருவருக்கும் நடுவில் வரும் மோதல் என்று கதை பயணிக்கிறது. திடீரென இவர்கள் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்ள பின்னாலேயே விரட்டி வரும் போலீசிடம் இவர்கள் சிக்கினார்களா? ஏன் போலீஸ் துரத்தியது? என்பது மிச்சசொச்சம். விஜய் சண்முகவேல் ஐயனார் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்திற்குதான் வரிவிலக்கு தராமல் சுமார் ஆறு மாதங்களாக இழுத்தடித்தார்களாம். “என்னை கேட்டால், இந்த முறையே தேவையில்லே சார். பேசாம எல்லா படத்துக்கும் கூட வரி போடலாம். இவங்க வரிவிலக்கு கொடுப்பாங்கன்னு கொடுப்பாங்கன்னு அலையுறதிலேயே எங்களுக்கு தோதான ரிலீஸ் டைம் போயிடுது” என்று புலம்புகிறார் கதிர். வரிவிலக்குன்னு போனாலே இது வேணும் அது வேணும்னு கேட்கிறாங்க. நான் அப்படியெல்லாம் கொடுக்கிற ஆள் இல்ல. இப்பவும் எங்க ஊர்ல உள்ள ஸ்கூலுக்கு ஐந்து சென்ட் நிலம் வாங்கிக் கொடுத்திருக்கேன். எங்க ஊர் கோவிலை 45 லட்சம் செலவு பண்ணி புதுப்பிச்சிருக்கேன். செலவு அதுக்கு பண்ணலாம். இந்த வரிவிலக்குக்காக ஏன் பண்ணணும்?” என்று மேலும் மேலும் சூடாகிக் கொண்டே போனார்.

பழ.கருப்பையா வீட்ல கல்லெறிஞ்சுட்டாங்கன்னு இப்பதான் நியூஸ் வந்திச்சு. இந்த கதிர் வேற… கன்னா பின்னான்னு பேசிகிட்டு இருக்காரே? சினிமா ஹீரோ… சமாளிப்பார்னு நம்புவோம்!

அம்மனுக்கு லீவு... பேய்க்கு ஓவர் டைம்! - ‘அரண்மனை-2’ விமர்சனம்

ஆக்‌ஷனோ... ரொமான்ஸோ... பேய் படமோ.. எது எடுத்தாலும் எனக்கு அது காமெடி படம்தான் என்கிற சுந்தர்.சியின் செல்லுலாய்டு அரண்மனை. பயப்பட போனால் ஏமாற்றமும், சிரிக்க போனால் நிம்மதியும் கிடைக்கலாம்.

முதல் பாகம் ஹிட் என்பதால் கூடுதல் தைரியமும், குறைவான வேலையும் தேவைப்பட்டிருக்கிறது. ”ஆண்ட்ரியா நகரு நகரு... த்ரிஷா உட்காரும்மா.. ஹன்சிகா, நீ அப்படியே இரும்மா. வினய் ஸாரி... சித்தார்த் ஜி ஆவோ ஆவோ. சந்தானம் இல்லையா? அப்ப சூரி ஓகே!” - இவ்வளவுதான் மாற்றங்கள்.

அம்மன் சிலையை மறுபிரதிஷ்டை செய்ய கருவறையை விட்டு வெளியே எடுக்கிறார்கள். அந்த விடுமுறை நாளில் அம்மனுக்கு சக்தி இருக்காதாம். அதனால் பூமியில் மறைந்திருக்கும் பேய்களைக் கிளப்பி விட்டு தொழிலை விருத்தி பண்ண நினைக்கிறார்கள் பேயோட்டிகள். அப்படிக் கிளம்பியதில் எக்ஸ்ட்ரா பவர் பேயொன்று அந்த ஊர் அரண்மனையில் ஓடி ஒளிந்து கொள்கிறது. அந்த அரண்மனையில் இருக்கும் ஒவ்வொருவராய் கொலை செய்ய, அந்த பேய் யார்? ஏன் அது பழி வாங்குகிறது என்பது இடைவேளைக்கு பின்னான ஃப்ளாஷ்பேக். அந்த வீட்டின் நல்லவர்கள் காப்பாற்றப்படுகிறார்களா என்பது க்ளைமேக்ஸ் (ம்க்கும்... சஸ்பென்ஸாமாம்!).

கவர்ச்சி த்ரிஷா, வீட்டோட நர்ஸ் ஆக பூனம் பாஜ்வா, பேயாக ஹன்சிகா என.. சுந்தர்.சி ஏரியா வழக்கம் போல நச். முதல் பாடலில் சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டெல்லாம் வருகிறார் த்ரிஷா. ஆனால், பூனம் பாஜ்வாவுக்குத்தான் அள்ளுது அப்ளாஸ்.
பிரசாந்துக்கு தம்பி போல ஆகிவிட்டார் சித்தார்த். ஹிட் என்பதற்காக இந்த லிஸ்ட் படங்களை நம்புவதா பாஸ்? ப்ச்..!


 ”சந்தானம் எவ்வளவு நல்லா காமெடி பண்ணுவாரு” என யோசிக்க வைத்தாலும் சூரிக்கு பிராக்சி தந்து காப்பாற்றுகிறது சுந்தர்.சி அண்ட் கோ வின் வசனங்கள். “கோணி ஊசிக்கு கொண்டை மீசை” என ஒன்லைனர்களும், பேயுடனான டெம்போ ட்ராவலர் பயணமும் அதிரிபுதிரி சிரிப்பு மத்தாப்பூ!

ஆளாளுக்கு பேயை பார்க்கிறார்கள். பின் அடுத்த நாள் அந்தவீட்டிலே பாட்டு பாடுகிறார்கள். பேய் படத்தில் மேஜிக் பாக்கலாம். லாஜிக் பாக்கலாமா என்ற பன்ச் பேசி நம்மை நாமே சமாதானம் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

வழக்கமான கலகல சீன்களாலும், கிளாமராலும் தனது வேலையை செவ்வனே செய்திருக்கிறார் இயக்குனர். ஒரே குரல்.. ஒரே மாதிரியான வரிகள்.. கொஞ்சம் உஷாராயிடுங்க ஹிப்ஹாப் தமிழா. தமிழனுக்கு வெரைட்டிதான் முக்கியம்.

ஆக, பன்ச் லைன்: அரண்மனை-3 வருவதை யாராலும் தடுக்க முடியாது!

திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலப்பாக்கட்டு பிரியாணி கடைகளைப் பார்க்கலாம். அந்த அளவில் அது மிகவும் பிரபலமானது. ஆனால் அந்த தலப்பாக்கட்டு பிரியாணியை எப்படி செய்வதென்று தெரியுமா? அதுவும் திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த வார இறுதியில் செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:



நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப்
புதினா - 1/2 கப்
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு

ஊற வைப்பதற்கு...

சிக்கன் - 1/2 கிலோ
கெட்டியான புளிக்காத தயிர் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

பிரியாணி மசாலா பொடிக்கு...

சோம்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4
அன்னாசிப்பூ - 1
கிராம்பு - 4

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி, பின் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பிரியாணி மசாலா பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின் ஊற வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வர பிரட்டி விட்டு, தட்டி கொண்டு மூடி 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் குக்கரில் வாணலியில் உள்ள சிக்கனுடன் கூடிய மசாலாவை போட்டுக் கொள்ள வேண்டும். பின் அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறி, அதையும் குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லி, புதினா, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, தீயை அதிகரித்து 1 விசில் விட்டு, பின் தீயை குறைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும்.

விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி ரெடி!!!

அரண்மனை 2 (2016) - திகிலுடன் காமெடி கலந்து குடும்பப்பாங்கான...வேறென்ன..?

பெரிய ஜமீன்தாரான ராதாரவி தனது மகன்கள் சித்தார்த் மற்றும் சுப்பு பஞ்சுவுடன் ஒரு மிகப்பெரிய அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். இந்த அரண்மனையிலேயே அண்ணன் தங்கைகளான மனோபாலாவும், கோவை சரளாவும் வேலைக்காரர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

சுப்பு பஞ்சுவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. சித்தார்த்துக்கு அவரது முறைப்பெண்ணான திரிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. திருமணத்துக்கு கொஞ்ச நாட்கள் இருக்கும்போது இரண்டுபேரும் வெளியூர் சென்றுவிடுகிறார்கள். அந்த நேரத்தில் ராதாரவி திடீரென கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார்.

இதனால் இருவரும் அவசரமாக அரண்மனைக்கு திரும்பி, ராதாரவியை கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறார்கள். ராதாரவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்த அரண்மனையிலேயே நர்சாக தங்கி பணிபுரிந்து வருகிறார் பூனம் பஜ்வா. மேலும், ராதாரவியை குணப்படுத்துவதற்காக சூரியும், நாடி ஜோசியராக அந்த அரண்மனைக்கு வருகிறார்.

இந்நிலையில், அந்த அரண்மனையில் ஒரு கருப்பு உருவம் நடுமாடுவது, கோமா நிலையில் இருக்கும் ராதாரவி திடீரென அந்தரத்தில் தொங்குவதுபோல திரிஷாவுக்கு தெரிகிறது. இதனால், பயந்துபோய் அரண்மனையில் உள்ளவர்களிடம் சொல்கிறார். ஆனால் அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அந்த வீட்டிலேயே தோட்டக்காரனாக பணிபுரிந்து வரும் ராஜ்கபூர், திரிஷாவை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்க, சித்தார்த் அவரை அடித்து, அரண்மனையை விட்டு துரத்துகிறார். சித்தார்த்தை பழிவாங்க குடித்துவிட்டு அரண்மனைக்கு வரும் ராஜ்கபூர் மர்மமான முறையில் இறக்கிறார். அவரை சித்தார்த் தான் கொலை செய்துவிட்டார் என்று போலீசார் சித்தார்த்தை கைது செய்கிறது.

இதையடுத்து, அரண்மனையில் நடந்த சம்பவங்களுக்கு தீர்வுகாண திரிஷா தனது அண்ணன் சுந்தர்.சிக்கு போன் செய்து அரண்மனைக்கு வரவழைக்கிறார். அரண்மனைக்கு வரும் சுந்தர்.சி., அரண்மனையில் நடக்கும் சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டறிய முடிவு செய்கிறார். இறுதியில், அவற்றையெல்லாம் சுந்தர்.சி., கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

சித்தார்த் வழக்கமான ஹீரோயிசம் இல்லாமல் பேயின் அடக்குமுறைக்கு பயந்தவாறு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முறைப்பெண்ணாக வரும் திரிஷா, முதல் பாதியில் பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். பிற்பாதியில், ஆவி புகுந்த பெண்ணாக மிரட்டியிருக்கிறார்.

இரண்டாம் பாதியில் வரும் ஹன்சிகா அழகாகவும், அழுத்தமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். பேயாகவும் வந்து மிரட்டியிருக்கிறார். சூரி-கோவைசரளா-மனோபாலா கூட்டணியின் காமெடி படத்திற்கு மிகப்பெரிய பலம். பூனம் பஜ்வா முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் தன்னை வித்தியாசப்படுத்தி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சுந்தர்.சிக்கு படத்தில் அழுத்தமான கதாபாத்திரம். சந்திரமுகி படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் போன்றது இவருடையது. அதை அழகாக வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார். ராதாரவி தனக்கே உரித்தான வில்லத்தனம், பாசமுள்ள அப்பா என தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார்.

அரண்மனை படத்தைப் போன்றே இப்படத்தையும் திகிலுடன் காமெடி கலந்து குடும்பப்பாங்கான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி., முதல்பாதி முழுக்க திகில் மற்றும் காமெடியுடன் இயக்கியிருக்கிறார். இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் கலந்து திகிலும் கொடுத்திருக்கிறார். முந்தைய பாகத்தை விட இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். அதை திரையில் பார்க்கும்போது நிறைவாக இருக்கிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்கள் ஹிட்டாகிவிட்டாலும், பெரிய திரையில் பார்க்கும்போது அழகாக இருக்கிறது. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். யுகே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் ‘அரண்மனை 2’ மிரட்டல்.

விளம்பரங்களில் நடிக்க இத்தனை லட்சம் கேட்கிறாரா இவர்?

ரம்யா கிருஷ்ணன் படங்களில் கவனம் செலுத்துவதை விட தற்போது சீரியல்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சின்னத்திரை மூலம் அவர் பெண்களை கவர்ந்திருப்பதால், ரம்யா கிருஷ்ணனுக்கு நகை, புடவை போன்ற விளம்பரங்களில் நடிக்க அதிகம் வாய்ப்பு கிடைக்கின்றனவாம்.

சமீபத்தில் ஒரு பெரிய ஜவுளி கடை நிறுவன புடவை விளம்பரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணனை அழைத்த போது, விளம்பரத்தை எத்தனை நாள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் ஒரு நாளைக்கு ரூ. 20 லட்சம் சம்பளம் என்றாராம்.

திரை இசையில் திருப்பம் உண்டாக்கிய இளையராஜா: கிராமிய இசைக்கு புத்துயிர் அளித்தார்

தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.

"அன்னக்கிளி'' படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப் பார்த்தீங்களா'' எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.

இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.

தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:

"நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைபுரம் என்னும் கிராமத்தில். இப்போது அது தேனி மாவட்டத்தில் உள்ளது.

அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். ஊரில் அப்பாவை `கங்காணி' ராமசாமி என்றால்தான் தெரியும். அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளில் நான் ஐந்தாவது. ஆறாவது என் தம்பி அமரன் (கங்கை அமரன்).

எங்களுக்கு மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன். அடுத்து அக்காள் கமலம். அடுத்து பத்மாவதி. அடுத்தவர் அண்ணன் பாஸ்கர்.

1943-ம் ஆண்டு நான் பிறந்தேன். தமிழில் வைகாசி மாதம் 20-ந்தேதி. (3-6-1943)

அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகுதான் நீ போவாய்'' என்று கூறியிருக்கிறார்.

அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார்.

பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

அப்பா அவர் சொன்னதுபோலவே என் 9-வது வயதில் (1952-ம் வருஷம் ஏப்ரல் 10-ந்தேதி) காலமாகிவிட்டார். அப்பா இறக்கும்போது நான் நாலாவது படித்துக் கொண்டிருந்தேன். உயிர் பிரியும் நேரத்தில் என் கையையும் அண்ணன் பாஸ்கரின் கையையும் பாவலர் அண்ணன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, அண்ணன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அத்தோடு உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா என்று மாற்றி விட்டார். ஆனால் `ராசையா' என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டேன். பட்டிக்காடு அல்லவா! `ராஜையா'வுக்கு பதில் ராசையாதான் அவர்களுக்கு சுலபம்.

நான் படிப்பிலும் பெரிய விசேஷம் கிடையாது. பண்ணைபுரத்தில் பெருமாள் வாத்தியார் என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.

பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதில் நானும் பாஸ்கர் அண்ணனும் அடிக்கடி சினிமா பார்க்கச் செல்வது வழக்கமாகி விட்டது.

இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த "லைலா மஜ்னு.'' இந்தப் படத்தை பாடல்களுக்காக மூன்று நான்கு முறை பார்த்தோம். பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டது. அண்ணன் பாவலர் எப்போதுமே அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்.

அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது. ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, கயஸ் மட்டும் `லைலா லைலா' என்று தன்னுடைய சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பான். இதைப் பார்த்த ஆசிரியர் கயஸின் கையில் பிரம்பால் விளாசி விடுவார். கை புண்ணாகி விடும். எங்கள் வகுப்பிலும் ஆசிரியர் ஏதோ எழுதச் சொல்லியிருந்தார். முந்தின நாள் இரவு ஆட்டம் பார்த்த ஞாபகத்தில் சிலேட்டில் `லைலா லைலா' என்று எழுதியிருந்தேன்.

என்ன நடந்தது தெரியுமா? படத்தில் கயஸுக்கு விழுந்த அடியை விட எனக்கு பலமாக அடி விழுந்தது. கயஸுக்கு வருத்தப்பட என் மாதிரி ரசிகர்கள் இருந்தார்கள். எனக்காக வருத்தப்படத்தான் யாருமில்லை.

இந்தப் படத்தின் பாடல்களால் - நான் வளர வளர, கயஸை விடவும் லைலா மீது எனக்கு காதல் அதிகமாகி விட்டது. அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். பின்னாளில் இவரே என் மானசீக குரு ஆனார்.

அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) பாட்டு, நாடகம், கச்சேரி என்பதில் ஆர்வம் அதிகம். திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய வித்வானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றிருந்தார். இசை எனக்கு அறிமுகமானதும், ஆர்வமானதும் அண்ணனால்தான். நான் ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிந்து கொண்டதற்குக் காரணமும் அவர்தான். இப்படித்தான் எனக்கு ராகங்கள் கல்யாணியும், சங்கராபரணமும், கரகரப்பிரியாவும், தோடியும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்கு தெரியவந்தது.

சளி பிரச்னையால் அவஸ்தைப்படுகிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ்!

 தொண்டையில் சளி உண்டாவதையும், அதனால் ஏற்படும் தொந்தரவுகளையும் பெரும்பாலானோர் அனுபவித்திருப்போம்.


அதிலும் தொண்டையில் சளி இருந்தால் மூச்சு விடவே சிரமமாக இருக்கும்.


சுவாசமானது இயல்பாக இல்லையென்றால் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும்.


ஆவி பிடித்தல்


 தொண்டை சளி இறுகி இருந்தால், அப்போது சூடான நீரில் ஆவி பிடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.


தண்ணீர்


 கபம் மற்றும் சளியை தளர்த்த வேண்டுமெனில், தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.


சுத்தமான மூக்கு


 தொண்டையில் சளி தேங்காமல் இருக்க, மூக்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.


உப்புத் தண்ணீர்

 சளி இருக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீருடன் உப்பைச் சேர்த்து அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும்.


இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, தொண்டை கரகரப்பு நீங்கும்.


யூகலிப்டஸ் எண்ணெய்


 கபத்தைத் தளர்த்தவும் மற்றும் சளியின் இறுக்கத்தை போக்கவும், சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் சேர்த்து ஆவி பிடித்தல் நல்லது.


மூலிகைத் தேநீர்


 சளியை குணப்படுத்த மூலிகைத் தேநீர் அல்லது கோழி சூப் போன்றவற்றை சூடாக பருகினால், தொண்டை இதமாக இருக்கும்.


மஞ்சள் தூள்


 சளி இருக்கும் பொழுது அரை டம்ளர் பாலுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும். ஏனேனில் மஞ்சள் தூளில் கிருமி நாசினிகளின் பண்பு அதிகமாக இருப்பதால், அதனைக் குடிக்கும் போது, தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.


காரமான உணவுகள்


 காரமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஹார்ஸ் முள்ளங்கி அல்லது ஹாட் சில்லி பெப்பர்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்வது சளி இறுகுவதை தவிர்க்கும்.

தமிழுக்கு மரியாதை செய்த கமல்

ஜனவரி 26 ஆம் தேதி டிவிட்டரில் இணைந்தார் கமல். இன்றுவரை அவரை அறுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடருகின்றனர். தொடங்கியநாளிலிருந்து ஒரிரு பதிவுகளை மட்டுமே போட்டிருக்கிறார் கமல்.

நேற்று அவருடைய மகளும் நடிகயைமான ஸ்ருதிஹாசன் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துச் சொல்லி ஒரு டிவிட் போட்டிருந்தார். அதைப்போட்ட ஒரு மணிநேரத்திலேயே இன்னொரு டிவிட் போட்டிருக்கிறார் அதில், என் டிவீட்டில் தமிழில்லையென மனங்கோணும் அன்பர்கட்கு, இத்தோழி என் தோள் மிஞ்சப் பல காரணங்கள், அக்காலணியின் உயரமும் சேரும் என்று போட்டிருக்கிறார். மகளுக்கு அவர் சொன்ன பிறந்தநாள் வாழ்த்தின் தமிழாக்கம்தான் இது.

அவர் ஆங்கிலத்தில் வாழ்த்துப்போட்டதும், அவருடைய நட்புவட்டத்தில் இருப்பவர்களே, தமிழில் போடவில்லையென்று கேட்டதால் அதைத் தமிழிலும் போட்டிருக்கிறார். அவரிடம் தமிழில் போடவில்லை என்று சொல்வதற்கும் ஆள் இருக்கிறது, சொன்னதைக் கேட்டதும் உடனே இவர் தமிழில் போடவும் செய்திருக்கிறார்.

உலகநாயகன் என்று பட்டம் இருந்தாலும் தென்னிந்தியநடிகர்சங்கம் தமிழ்நாடுநடிகர்சங்கம் ஆகவேண்டும் எனும்போது இந்தியநடிகர்சங்கம் ஆகவேண்டும் என்று சொல்லியிருந்தாலும் டிவிட்டரில் தமிழைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று அவரைப் பாராட்டுகிறார்கள். 

சின்னச் சின்ன உடல் நல குறைபாடுகளுக்கு வீட்டிலேயே இருக்கிறது தீர்வு!

பரபரப்பு மிகுந்த அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அன்பைப் பரிமாறும் இதயங்கள், அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி அத்துடன் போதுமென்ற மனமும் கொண்டிருந் தாலே பெரு மளவு நோய்கள் நம்மை அண்டாது பாதுகாக்க இயலும். அப்படியும் அவ்வப்போது ஏற்படும் சிறு உடல் நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.

வாயுத் தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வறட்டு இருமல்

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

அடுப்பில்லாமலும் சமையல் செய்யலாம்

 பேரீச்சைச் சாறு:
பேரிச்சம் பழத்தைக் கழுவி, குறைந்தது 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும், பின்னர் பிசைந்து வடி கட்டிக் கொள்ள வேண்டும்.

அளவு: 200 மி.லி. தண்ணீருக்கு (ஒரு டம்ளர்) 3 பேரீச்சம்பழம்.

எலுமிச்சை பானகம்:
ஓர் எலுமிச்சை பழத்தை பிழிந்து 3 டம்ளர் தண்ணீர் கலந்து நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் 50 கிராம் சேர்த்து அத்துடன் வாசனைக்காக 4 ஏலக்காய்களைத் தூள் செய்து போட்டுக் கொள்ளலாம்.

அவல் பாயசம்:
அவலைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, கனிந்த மொந்தன்பழம் சேர்த்துப் பிசைந்து தேங்காய்ப் பால், நாட்டுச் சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும். சிறிது ஏலக்காய்த் தூள், முந்திரிப் பருப்பு, காய்ந்த திராட்சை சேர்க்கலாம்.

அளவு: 5 பேர்க்கு அவல் 100 கிராம், தேங்காய்1, மொந்தன் பழம் 3, சர்க்கரை 50 கிராம், முந்திரிப் பருப்பு 10, காய்ந்த திராட்சை 15, ஏலக்காய் 5.

கேரட் கீர்:
கேரட் துருவலை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் ஆட்டிச் சாறு எடுத்து, அத்துடன் தேங்காய்ப்பால், நாட்டுடுச் சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும். வாசனைக்காக ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்க்கலாம்.

அளவு:
5 பேர்க்கு கேரட் 500 கிராம், பெரிய தெங்காய் 1, நாட்டுச் ச்ர்க்கரை 100 கிராம், ஏலக்காய் 10, பச்சைக் கற்பூரம் 4 சிட்டிகை.

கேரட் அல்வா:
கேரட் சக்கையுடன் தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்தால் அல்வா தயார்.


காதலருக்காக விஜய் சேதுபதியை பலி போட்ட நயன்தாரா? ஆஹா, இதுவல்லவோ பாலிடிக்ஸ்!

குட்டி மீனை கொன்று அதையே பெரிய மீனுக்கு இரையாக வைக்கிற தந்திரத்தை சினிமாவும் அரசியலும் சிறப்பாகவே செய்யும். அடுத்தவர் சுயநலத்தால் அபாயத்தை டச் பண்ணும் இத்தகைய மீன்களில் ஒருவராக நம்ம விஜய் சேதுபதியும் மாட்டிய கதைதான் இது.

கடந்த வருட ஹிட்டுகளில் முக்கியமான இடத்தில் இருக்கிறது ‘நானும் ரவுடிதான்’ படம். அந்த கூட்டணியை அப்படியே பெயர்த்துக் கொண்டு போனார் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். பொதுவாகவே ஹிட்டான படங்களின் கூட்டணி மறுபடியும் ரிப்பீட் ஆகிறதென்றால் அதன் வியாபாரமே வேறு. அந்த கணக்கில் அமைந்ததுதான் இந்த கூட்டணி. ஆனால் விஜய் சேதுபதிக்கு சிவகார்த்திகேயன் ரூபத்தில் வந்தது ஆறடி உயரத்தில் ஒரு இரும்பு கேட். தனியொருவன் பட இயக்குனர் மோகன் ராஜா இயக்க, அதில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் அல்லவா? அந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசினாராம் சிவகார்த்திகேயன்.

மோகன் ராஜா படத்தில் மீண்டும் நடிக்க விரும்பாத நயன்தாரா, “அந்த படத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை” என்று தெளிவாக சொல்லிவிட்டு, “என்னோட நடிக்கணும்னு உங்களுக்கு ஆசை இருக்கா?’ என்றாராம் சிவாவிடம். பின்னாலிருக்கிற திட்டம் தெரியாமல் “ஆமாம்” என்று சிவா தலையாட்டி வைக்க, அங்குதான் இந்த பொல்லாத ட்விஸ்ட் அரங்கேறியது. “விக்னேஷ்சிவன் டைரக்ஷனில் ஏ.எம்.ரத்னம் ஒரு படம் தயாரிக்கிறார். அதில் விஜய் சேதுபதிதான் என்னோட நடிக்கறதா பேச்சு இருக்கு. நீங்க ஓ.கேன்னா நானும் விஜய் சேதுபதியும் வேறு படத்தில் இணைஞ்சுக்குறோம். இந்த படத்தில் நீங்க உள்ள வரலாம்” என்றாராம் நயன்தாரா.

அப்புறமென்ன? நைசாக ஓரம் கட்டப்பட்டிருக்கிறார் விஜய்சேதுபதி. ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்க, சிவகார்த்திகேயன் நயன்தாரா ஜாயின்ட் அடிக்கப் போகிறார்கள். இதில் ஓரமாய் நின்ற கொக்குக்குதான் கொள்ளை லாபம். இன்றைய தேதிப்படி விஜய் சேதுபதியை விட, சிவகார்த்திகேயனின் செல்வாக்குதான் உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. வியாபாரத்தில் மேலும் மேலும் லாபம்! அஜீத்திடமிருந்து விலகி வந்தாலும், அதற்கு கொஞ்சமும் சளைக்காத வேறொரு படத்துடன் கம்பீரமாக களத்தில் நிற்கப் போகிறார் ஏ.எம்.ரத்னம்

சர்க்கரை நோய்- சில கசப்பான உண்மைகள்!


முன் ஒரு காலத்தில்,’பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை ‘வாழ்க்கைமுறை நோய்’ என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை. அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொண்டால் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.


தற்போது கிட்டத்தட்ட ஆறரைக் கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. 7.7 கோடி இந்தியர்கள், சர்க்கரை நோய் வருவதற்கான எல்லைக்கோட்டில் உள்ளனர். 2030-ல் இது 8.7 கோடியாக அதிகரித்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இனியாவது நாம் ஆரோக்கிய வாழ்வை மேற்கொண்டால் சர்க்கரை நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.
 
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்தவகையில் ஆலோசனைகளை அள்ளி வீசுகின்றனர். எதையாவது செய்து நோயைக் குணப்படுத்திவிட வேண்டும் என்று மக்களும் இருக்கின்றனர்.

அது சரி! சர்க்கரை நோயை எப்படிக் கண்டறிவது?எப்படி என்கிறிர்களா?

முதலில் சாதாரண ரத்த பரிசோதனை பற்றி பார்ப்போம்:ஒருவருக்கு ரத்தத்தில் 200 மில்லிகிராம் / டெசி லிட்டர் என்ற அளவில் இருந்தால் – அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று அர்த்தம். 140 – அதற்கு கீழ் இருந்தால் ‘இயல்பான நிலை’ என்று அர்த்தம். ஒருவருக்கு 140-க்கு மேல் சர்க்கரை அளவு செல்லும்போது, அவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மற்றொரு பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும்.


இதன்படி, சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ரத்தம் பரிசோதனை செய்யப்படும். இதில் 140-க்கும் குறைவாக இருந்தால் அது சராசரி. 200-க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய். இதிலும்குழப்பம் என்றால், அடுத்தக்கட்டப் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படும்.


2 ஹெச்பிஏ1சி (HbA1c)பரிசோதனை:முன்னரே சொன்னது போல் நம்முடைய ரத்தத்தில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உள்ளன. குளுகோஸானது இந்தச் சிவப்பு அணுவில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். இந்தச் ரத்த சிவப்பு அணுக்கள் எட்டு முதல் 12 வாரங்கள் வரை இருக்கும். அதன் பிறகு அவை அழிக்கப்படும். இந்தச் ரத்த சிவப்பு அணுவைப் பரிசோதனைசெய்வதன் மூலம், எட்டு முதல் 12 வாரங்களில்ல் ஒருவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைக் கண்டறிய முடியும். பரிசோதனை முடிவில் 6.5 சதவிகிதத்துக்கு மேல் என்று வந்தால், அவருக்கு சர்க்கரை நோய். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. 5.7 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தால், அது இயல்பான அளவு (Normal).
                         

சிலர், சர்க்கரை நோய் ரத்தப் பரிசோதனைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இருந்தே சரியான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மேற்கொண்டு சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவருவர். இவர்களுக்கு பரிசோதனை செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதுபோல தோன்றும். இந்த ஹெச்பிஏ1சி பரிசோதனை செய்வதன்- மூலம், மூன்று மாதக் காலத்து சர்க்கரை அளவைக் கணக்கிடலாம்.

அட்லிக்கு ஷாக் கொடுத்த வடிவேலு - விவரம் உள்ளே

நகைச்சுவை சூறாவளி வைகைப்புயல் வடிவேலு சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்து கடைசியில் ஹீரோவாக நடித்து வெளிவந்த எலி மற்றும் தெனாலிராமன் தோல்வியடைந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் மீண்டும் காமெடியனாகவே நடிக்கப்போகிறேன் என்ற செய்தி வந்தவுடன் முதலில் போய் நின்றது தெறி பட இயக்குனர் அட்லி.

தெறி படத்தின் ஆரம்பகட்டத்தில் விஜய்க்கு டிரைவராக நடிக்கும் வேடம் ஒன்று இருந்ததாம், இதற்கு அட்லி வடிவேலுவை அணுகிய போது எனக்கு ரூ. 4 கோடி சம்பளம் கொடுங்கள் என்று அட்லியை அதிரவைத்துள்ளர். உடனே நான் தயாரிப்பாளரிடம் பேசி விட்டு சொல்கிறேன் என்று அங்கிருந்து எஸ்கேப் ஆனாராம்.

ஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..?

ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.


அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.


ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.


 உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.



அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.


 ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது .


ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது.


சில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:


அதிக அளவு நார்ச்சத்து உள்ள தானியங்கள்


ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான இந்த நார்ச்சத்தானது, கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இது போக வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும் ஓட்ஸ். இதன் மூலம் பசி உணர்ச்சி தவிர்க்கப்படுகிறது.


எடையை குறைக்க வேண்டுமென்றால் பசியை கட்டுப்படுத்தி, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்பது இதயத்துக்கும் நல்லது.


அதிக ஆற்றலை தரும் தானியம்


ஓட்ஸ் அதிக ஆற்றலை அளித்து வேலை செய்யும் திறனை உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால், அந்த முழு நாளைக்கு தேவையான சக்தியையும் திறனையும் அது அளிக்கிறது. இதனால் பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்கின்றனர்.


ஓட்ஸினால் கிடைக்கும் அதிக அளவிலான ஆற்றல், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப் படுகிறது. மேலும் ஓட்ஸ் உடலின் எடையை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதற்காகவே ஓட்ஸால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்தது.


அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள்


ஓட்ஸில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலை புனரமைக்க உதவுகிறது. அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குகிறது.


 இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளித் தள்ளுவதால், உடல் எடை குறைவதுடன் உடல் சுத்தமும் ஆகிறது. ஆண்டி ஆக்சிடன்ட்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்திலும், அவற்றை சரி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.


குறைந்த கலோரி உள்ள தானியம்

ஓட்ஸானது மற்ற தானியங்களை விட குறைந்த அளவிலான கலோரிகளையே உடையது. இதன் காரணமாகவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகிறது. பொதுவாக குறைந்த கலோரி உணவுகள் அதிக அளவிலான கொழுப்புகளை குறைக்க வல்லது.


 ஓட்ஸ் ஒரு அடர்த்தி குறைந்த உணவு. ஆதலால் இது எடையை குறைக்கும் உணவு முறையில் முதலிடம் பெறுகிறது. ஓட்ஸ் மட்டும் தனித்து உடல் எடையை குறைத்து விடாது. மற்ற ஆரோக்கியமான சரிவிகித உணவுகளோடு சேர்ந்தே ஓட்ஸ் எடையை குறைக்கிறது.


தயாரிப்பதற்கு சுலபம்


ஓட்ஸ் என்பது ஒரு ஆரோக்கியமான முழு தானியம். பொதுவாக முழுதானியங்கள் சமைப்பதற்கும், உண்ணுவதற்கும் எளிதானவை. பொதுவாக ஓட்ஸ் கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் பழங்களோடு சேர்த்து இது உண்ணப்படுகிறது.


இந்த காலத்தில் ஓட்ஸை கொண்டு பல துரித உடனடி உணவுகள் தயார் செய்யப்படுகிறது. காலை உணவாக அவைகள் எடுத்து கொள்ளப்படுகின்றன. துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் கூட ஓட்ஸ் தனது சத்துகளை இழப்பதில்லை. இந்த அனைத்து உண்மைகள் மூலம் ஓட்ஸ் எடை குறைய சிறந்த உணவு என்பதை அறியலாம்.

"இறுதிச் சுற்று - தமிழ் சினிமாவுக்கு புது இலக்கணம் வடித்துள்ள இங்கிதச் சுற்று !

இந்திய குத்துச்சண்டை வீரர்கள் தேர்வு வாரியத்தின் குளறுபடிகள், ஈகோ மோதல்கள் மற்றும் குஜால் சங்கதிகளை குத்திக் காட்டி ,சுட்டிக் காட்டி மாதவன் தமிழ் , இந்தி இருமொழிகளிலும் மாறுபட்ட கோணத்தில் நடிக்க ,பெண் இயக்குனர் சுதா கொங்கராவின் எழுத்து , இயக்கத்தில் துணிச்சலாக வெளிவந்திருக்கும் படமே இறுதிச் சுற்று.

ஒய் நாட்ஸ்டுடியோஸ் , திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இரு தயாரிப்பு நிறுவனங்களுடன் யு டிவி மோசன்பிக்சர்ஸும் இணைந்து தயாரித்திருக்கும் இறுதிச் சுற்று, இந்திய குத்துச்சண்டையில் குறிப்பாக பெண்களுக்கான இந்திய குத்துச்சண்டை தேர்வில் நடக்கும் திருட்டு தனங்களை மிரட்டலாக புட்டு புட்டு வைத்திருப்பதோடு., அதையெல்லாம் தாண்டி பாக்சிங்கில் நம் வீராங்கனைகளின் உலகளவு சாதனைகளையும் சொல்லி ரசிகனை சீட்டோடு கட்டி போட்டுவிடுகிறது இப்படம் என்றால் மிகையல்ல!

படுபயங்கர கோபக்கார பாக்ஸிங் கோச்சரான மாதவன் , சில வருடங்களுக்கு முன் இந்திய அளவில்நடந்த பாக்ஸிங் போட்டியில்., தன் கோப குணத்தால், நடந்த உள்குத்து பாலிடிக்ஸில் தோல்வியை தழுவி இருக்கிறார்.

அதனால் ,தன் மனைவியையும் , பாக்சிங் வீரருக்கான தகுதியையும் இழந்த மேடி , பாக்சிங் கோச் ஆகிறார் . பெண்களுக்கான குத்துச்சண்டை கோச்சராக ஹரியானாவில் திறம்பட செயல்படும் அவரை , தன்னுடனான பழைய பகையால் சென்னைக்கு தூக்கியடிக்கிறார் மேடியின் ஹை அபிஷியலான தேவ் எனும் ஷாகிர்.அதனால் ,சென்னை பாக்சிங் பயிற்சி மையத்திற்கு பொறுப்பிற்கு வரும் மேடி , சென்னை மீனவ குப்பத்தில் பல்வித பாக்சிங் திறமைகளுடன் திரியும் ரித்திகா சிங்கை கண்டுபிடித்து இந்திய வீராங்கனையாக , இண்டர்நேஷனல் லெவலுக்கு கொண்டு சென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தருவதும் , அவர் மூலம் இழந்த வாழ்க்கையை பெருவதும் , அதற்காக படும் துயரும் , சந்திக்கும் இன்னல்களும் தான் இறுதிச்சுற்று படத்தின் மொத்த கதையும்!

பக்காவான பாக்சிங் கோச்சாக மேடி , அப்ளாஸ் அள்ளுகிறார் .அவர் டென்சன் ஆகும் சீன்களிலும் சரி , பாக்சிங் பயிற்சி கொடுக்கும் சீன்களிலும் சரி தியேட்டரில் விசில் சப்தமும் க்ளாப்ஸூம் தூள் பறக்கிறது!

பாக்சிங்கில் ஜெயிக்க வேண்டிய தான் ,உள்குத்து விவகாரங்களால் தோற்றதால் ., மனைவி , வேறு ஒரு பாக்ஸருடன் ஓடிப்போன வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உடன் படுத்து உல்லாசம் தரும் பெண்களில் தொடங்கி, பாக்சிங் தேர்வு கழகத் தலைவர் தேவ் வரை தன்னை கிண்டல் அடிப்பது குறித்து கவலைப்படாமல் .,குத்துசண்டையில் இந்தியாவே மெச்சும் ஒரு வீராங்கனையை உருவாக்குவதில் மேடி காட்டும் முனைப்பு ரசிக்க வைக்கும் ஹாஸ்யம்.

பீர் குடித்தபடி விசாரணை கமிஷன் முன் வந்து அமர்ந்து கொண்டு, நான் பீர் குடிக்கும் நேரத்தில் நீங்க கமிட்டி மீட்டிங் யாரைக் கேட்டு வச்சீங்க .? என சின்ன சின்ன விஷயங்களுக்காக கோபப்படுவதில் தொடங்கி ., இந்தியாவுக்காக ஒரு சிறந்த வீராங்கனையை தன் பொருளாதாரத்தில் , தன் பொறுப்பில் உருவாக்குவது வரை ... சபாஷ் சொல்லும் அளவிற்கு நச் என்று மேஜிக்காக, அதே நேரம் லாஜிக்குடன் நடித்து டச் செய்துவிடுகிறார் மேடி. மனிதர் பலே கில்லாடி தான்!

சென்னை கடற்கரையோர மீனவ குப்பத்து அடாவடிப் பெண்ணாக, அலட்டிக் கொள்ளாத பாக்சிங் வீராங்கனை மதியாக ரித்திகா சிங் சான்ஸே இல்லாத சாய்ஸ்! நிஜமான குத்துசண்டை வீராங்கனை என்பதாலோ என்னவோ ., ரித்திகா , பாக்சிங் சம்பந்தப்பட்ட இக்கதையில் பக்காவாக பொளந்துகட்டியிருக்கிறார். பலே, பலே!

பாக்சிங் ரிங்கிற்குள் மட்டுமின்றி,கிழம் , கிழம் ... என்றபடி மாதவனிடம் மயக்கம் , கிறக்கம் கொள்வதில் கூட புதுசாக தெரிகிறார் ரித்திகா என்பது இறுதிச்சுற்றின் பெரிய ப்ளஸ்!

லக்ஸாக ரித்திகாவின் அக்காவாக வரும் மும்தாஜ் சர்க்கார் , மாதவனின் ஓடிப்போன பொண்டாட்டியின் அப்பாவாக வரும் ராதாரவி, விஷம வில்லன் தேர்வு கமிட்டி தேவ் வாக வரும் - ஜாகிர் உசேன் , பல்லீந்தர் கவுர் சர்மா , பிபின் உள் ளிட்டவர்களில் நாயகி ரித்திகாவின் குடிகார குப்பத்து மதம் மாறிய அப்பா காளி வெங்கட் , சார் ,நாங்க கக்கூஸ் கழுவத் தான் லாயக்கு ... ஆனா கப்பு உங்க வாயிலிருந்துல்ல வருது ... எனும் குழந்தை தனமான ஜூனியர் கோச் நாசர் உள்ளிட்டவர்கள் நாயகன் , நாயகிக்கு சமமாக ஜொலிக்கின்றனர்.

அருண் மாத்தீஸ்வரனின் அர்த்தபுஷ்டி வசனங்கள் , சதீஷ் சூர்யாவின் நச்சென்ற படத்தொகுப்பு ,சிவக்குமார் விஜயனின் காட்சிக்கு காட்சி துடைத்து வைத்த பளிச் ஒளிப்பதிவு , சந்தோஷ் நாராயணனின் "ஏய் சண்டக்காரா ... வாயாடி மீன்காரி .. ஐந்து நூறு தாளு பார்த்தா .... ஆகிய மெலடி பாடல்கள் , புது பாணியில் மிரட்டும் பின்னணி இசை.... உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இயக்குனர் சுதா கொங்கராவின் எழுத்து , இயக்கத்திற்கு மேலும், மேலும் ... வலு சேர்த்திருக்கின்றன.

ஹெவிவெயிட் , லோ வெயிட் , நாக் அவுட் பன்ச் உள்ளிட்ட பாக்ஸிங் வார்த்தைகளும் அதன் அர்த்தங் களும் எல்லா தரப்புக்கும் புரியும்படி படம் பண்ணியிருக்கும் இயக்குனர்., பாக்ஸிங் செலக் ஷன் கமிட்டியினரின் பாலிடிக்ஸையும் சகலரும் உணரும் வகையில் படமாக்கியிருப்பதில் வெகுவாக ஜெயித்திருக்கிறார்.

ஒரு பெண் இயக்குனரால் புதிய களத்தில் .,இப்படியும் சவாலான, சபாஷ் சொல்லும்படியான படம் எடுக்க முடியும் .. என சீன் பை சீன் மெய்ப்பித்திருக்கும் சுதா கொங்கரா., துணிச்சலாக நாயகியின் அப்பாவாக வரும் காளி வெங்கட் பாத்திரத்தின் வாயிலாக பணத்திற்காக மதம் மாறுபவர்களையும் , அப்படி மாற்றுபவர்களையும் ஆங்காங்கே அழகாக சாடியிருப்பதில் சகலத்திலும் தான் ஒரு சமூக பிரக்ஞை மிக்க இயக்குனர் ...என காட்டிக் கொண்டிருப்பது, வரவேற்கத்தக்கது. உங்கள் முயற்சிக்கு , புரட்சிக்கு ... வாழ்த்துக்கள் சுதாகொங்கரா !

மொத்தத்தில் ,ஸ்போர்ட்ஸ் சப்ஜெக்டையும் போரடிக்காது ,பொயடிக்காக சொன்ன "இறுதிச் சுற்று - இமாலய வெற்றிச்சுற்று! தமிழ் சினிமாவுக்கு புது இலக்கணம் வடித்துள்ள இங்கிதச் சுற்று !