Thursday 21 January 2016

'அப்புறம்... என்னா '****'க்கு கணக்கெடுத்தீங்க?' - தாசில்தாரிடம் எகிறிய முன்னாள் அமைச்சர்!

அதிமுகவின் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் 'தூள்' சினிமாப் படம் 'சொர்ணக்கா' ஸ்டைலில், அரசு அதிகாரியை திட்டித்தீர்த்த விவகாரம் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவ, கதிகலங்கிக் கிடக்கிறது கடலூர் மாவட்ட அதிமுக.

சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் கடலூர் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வருவாய்த் துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதிகளில் சரிவர கணக்கெடுப்பு பணி நடத்தாததால்,  பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள், தொகுதி எம்.எல்.ஏவான  செல்வி ராமஜெயத்தை சந்தித்து 'வரும் தேர்தலில் இதற்கான பாடத்தை கற்பிப்போம்' என்று எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

இதில் டென்ஷனான செல்வி ராமஜெயம், பலாப்பழத்துக்கு பெயர் பெற்ற ஊரின் தாசில்தாரை இரண்டு நாட்களுக்கு முன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

சாவகாசமாக பேசத்தொடங்கிய ராமஜெயம், "என்ன சார் கணக்கெடுத்தீங்க... என்ன பணம் போட்டீங்க? எங்களையெல்லாம் ஒதை வாங்க வைக்கணும்னு முடிவு பன்னிட்டீங்களா...?" என்று பேச,  அதற்கு தாசில்தார், " நீங்க கலெக்டர்கிட்ட பேசுங்க மேடம். எங்கிட்ட பேசாதீங்க!" எனச்சொல்ல, " ஆ... ஊ...ன்னா ஆர்.டி.ஓ.கிட்ட பேசுங்கிறீங்க,  கலெக்டர்கிட்ட பேசுங்கிறீங்க. புவனகிரி வடக்கு திட்டு எல்லாம் பணம் போகலையாம். நீங்க என்னா... நல்லா என் வாயில வருது... கன்னா பின்னான்னு கேப்பேன்... அப்புறம் என்னா **** க்கு எல்லாத்தையும் கணக்கெடுக்க சொன்னீங்க...?" என்று கடுமையாக பேசிக்கொண்டே போக, எம்.எல்.ஏ வின் பேச்சால் அப்செட் ஆன தாசில்தார்,  தொடர்பை துண்டித்துக்கொண்டுள்ளார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே அவருக்கு அரை நாள் பிடித்ததாம்.

எம்.எல்.ஏ- தாசில்தாருக்கு இடையே நடந்த இந்த உரையாடல்தான், தற்போது வாட்ஸ் அப் மூலம் இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஒருவரின் இந்த அவமரியாதையான பேச்சு,  கடலூர் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  தற்போது செல்வி ராமஜெயத்தை கண்டித்து  போராட்டம் நடத்தும் முடிவுக்கு வந்துள்ளனர். மேலும் எம்.எல்.ஏ. செல்விராமஜெயம் பற்றி அவரது கட்சித் தலைமைக்கும் புகார் கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தின் கடலுார் மாவட்ட தலைவர் மகேஷ், " செல்வி ராமஜெயம் இப்படி அதிகாரிகளை அவமரியாதையான வார்த்தைகளில் பேசுவது இது முதன்முறையல்ல. அவரின் இயல்பான சுபாவமே அதுதான். ஆனால் இந்த முறை விடப்போவதில்லை. இதை கண்டித்து போராட்டம் நடத்த சங்கத்தில் பேசி வருகிறோம்.

அரசு ஊழியர்களான நாங்கள் எங்களது வழக்கமான பணிகளுக்கிடையில்தான் நிவாரணப்பணி கணக்கெடுப்பும் நடத்துகிறோம். இந்தப்பணியினிடையே எங்களது உயரதிகாரிகள் தரும் பணி, அவ்வப்போது மீட்டிங் என பரபரப்பாக இயங்கவேண்டியதிருக்கிறது. நிவாரண கணக்கெடுப்பு பணி இன்னமும் முடியாத நிலையில்,  ஒரு எம்.எல்.ஏ வான முன்னாள் அமைச்சர் இப்படி பேசுவது ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அழகா எனத் தெரியவில்லை" என முடித்துக்கொண்டார்.

இதனிடையே வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு குறித்து கேள்விப்பட்ட செல்வி ராமஜெயம்,  சம்பந்தப்பட்ட தாசில்தாரை பிடித்து 'பேச' முயன்றாராம். ஆனால் தாசில்தார் அதற்கு பிடிகொடுக்கவில்லை. இதனால் செல்வி ராமஜெயம் சார்பாக அந்த மாவட்ட டெல்லி பிரதிநிதி ஒருவர்,  சங்கத்தை தொடர்புகொண்டு சமாதானம் பேசியதாகவும், தேர்தல் நேரத்தில் இந்தப் பிரச்னையை பெரிதுபடுத்தவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால்  'பூனைக்கு மணி கட்டியே தீருவோம்' என்கிறது வருவாய்த்துறை வட்டாரம்!

சூரிய குடும்பத்தில் புதிய கோள்: பூமியை விட 10 மடங்கு பெரியது


 நமது சூரிய குடும்பத்தில் 9வது கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பூமியைவிட 10 மடங்கு பெரியது என கூறப்படுகிறது. சூரிய குடும்பத்தில் ஏற்கனவே 8 கோள்கள் இருக்கின்றன. நெப்டியூனை தனி கோளாக கருதுவதில்லை. இந்நிலையில் கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் இருந்தபடி சூரியனை சுற்றி வரும் புதிய கோளை கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியனில் இருந்து பூமி இருக்கும் தூரத்தை விட, 50 மடங்கு தூரத்தில் இக்கோள் இருக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். விண்வௌி விஞ்ஞானி கான்டான்டின் பாத்திஜின் மேலும் கூறும்போது, ''சூரிய குடும்பத்தில் இன்னமும் கண்டுபிடிக்க வேண்டியது நிறைய உள்ளன. புதிய கோளை நாங்கள் நேரடியாக காணவில்லை. அதற்கான அறிகுறிகள் தெறிகின்றன. அக்கோளின் ஈர்ப்பு விசை நன்கு உணரப்படுகிறது'' என்றார்.

'நெப்டியூனை ஒரு கோளாக கருத முடியாது'' என 2006ம் ஆண்டு ஒரு பிரச்னையை எழுப்பி, அதை 'பதவியிறக்கம்' செய்தவர் இதே விஞ்ஞானி தான்.


1,000 ரூபாய் நோட்டுகளை தவறாக அச்சடித்த ரிசர்வ் வங்கி


இந்திய ரூபாய் நோட்டுகளின் முக்கியப் பாதுகாப்பு அம்சமாகக் கருதப்படும் வெள்ளி நூல் இல்லாமல், 5AG, 3AP வரிசையில் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளது. இதில் 20,000 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியிடமும், 10,000 கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளதாகவும் ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது. இந்நிலையில், 5AG, 3AP வரிசையில் உள்ள 1,000 ரூபாய் நோட்டுகள் யாவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 5AG, 3AP வரிசை நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும், ம.பி., ஹோஷன்காபாத்தில் உள்ள SPMCIL அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் தீயிட்டு எரிக்க ஆர்.பி.ஐ., முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி SPMCIL அச்சகத்தின் நிர்வாக இயக்குநருக்கு ஆர்.பி.ஐ., நோட்டீஸ் அனுப்பியுள்ளது. SPMCIL அச்சகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

“25 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத வாக்குறுதி.. மேடையில் உறுதி தந்த முதல்வர்!!”

கேரள அரசின் சுற்றுலா துறை சார்பில் ஆண்டு தோறும் நிஷாகந்தி நடனம் மற்றும் இசை விழா நடத்தப்பட்டு வருகிறது.

இவ்விழா நேற்று திருவனந்தபுரத்தில் தொடங்கியது.

முதல் அமைச்சர் உம்மன் சாண்டி குத்துவிளக்கேற்ற சுற்றுலா துறை மந்திரி ஏ.பி.அனில் குமார் தலைமை தாங்கினார்.

இவ்விழா வருகிற 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் இசையுலகில் சாதனை படைத்த இளையராஜாவுக்கு நிஷாகந்தி விருதை உம்மன்சாண்டி வழங்கினார்.

மேலும் கலை இலக்கிய துறையில் சாதனை படைத்த சூர்யா கிருஷ்ணமூர்த்திக்கும் விருது வழங்கப்பட்டது.

பின்னர் விழாவில் பேசிய உம்மன்சாண்டி கூறியதாவது…

இளையராஜாவுக்கு நிஷாகந்தி விருதை வழங்கியதன் மூலம் கேரளம் பெருமை கொள்கிறது.

இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க 5 ஏக்கர் நிலத்தை கேரள அரசு சார்பில் தருவதாக 25 ஆண்டுகளுக்கு முன்பே வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை நிறைவேறாத அந்த வாக்குறுதி உடனே நிறைவேற்றப்படும்” என்றார்.

அதிகம் அறியப்படாத சுந்தர்.சி-யின் பக்கங்கள்-நிழலில் அசத்தல் காமெடி.. நிஜத்தில் அலட்டாத சீரியஸ்:

 தமிழ் திரையுலகில் நகைச்சுவைப் படங்களை வரிசைப்படுத்தினால் 'உள்ளத்தை அள்ளித்தா', 'வின்னர்', 'கிரி' ஆகிய படங்களைத் தவிர்க்க முடியாது. டிவி சேனல்களின் அப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் ஒளிபரப்பாத நாட்கள் அரிது.

இந்தப் படங்களின் இயக்குநர் சுந்தர்.சி-க்கு இன்று பிறந்த நாள் (ஜன.21). இப்போதும் காமெடி படம் எடுக்கிறோம் என்றவுடன் பலரும் சொல்வது 'உள்ளத்தை அள்ளித்தா' மாதிரி ஒரு படம் பண்ணனும் என்பது தான்.

ஆனால் இயக்குநர் சுந்தர்.சியை நேரில் பார்த்தீர்கள் என்றால், அவ்வளவு வசூல் வெற்றி கொடுத்த படங்களின் இயக்குநர் என்பதை அவருடைய பேச்சில் காணவே முடியாது. அந்தளவுக்கு இனிமையாகவும் இயல்பாகவும் பேசக்கூடியவர்.

சுந்தர்.சி உடன் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தைத் தொடர்ந்து தற்போது 'அரண்மனை 2' படத்திலும் நடித்திருக்கிறார் சித்தார்த். "சுந்தர்.சி எப்போது கூப்பிட்டாலும், படத்தின் கதையைக் கேட்காமல் நடிக்க தயாராக இருப்பேன்" என்று பேட்டியில் தெரிவித்திருக்கிறார். காரணம், அவர் பணியாற்றும் விதம். அந்தளவுக்கு தயாரிப்பாளருக்கு பணத்தை மிச்சப்படுத்தி தன் படம் மூலமாக லாபம் கிடைக்க வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்றுபவர் சுந்தர்.சி.

இயக்குநர் சுந்தர்.சியை 'தீயா வேலை செய்யணும் குமாரு' படப்பிடிப்பில் காண முடிந்தது.

ஹன்சிகாவும் திருமணத்துக்கு வருகிறார் என்று அலுவலகத்தில் அனைவரும் தங்களை பதிவு செய்யும் காட்சியை போரூர் செல்லும் வழியில் உள்ள ஒரு கட்டிடத்தில் படமாக்கினார்கள். சித்தார்த்திடம் "சித்தார்த்.. அந்தக் கூட்டம் இருக்காங்க இல்லையா. அங்கு போய் நானும் வர்றேன்" என்று கத்த வேண்டும் என்று சொன்னார் சுந்தர்.சி. உடனே அக்காட்சியை மானிட்டரில் பார்த்துக் கொண்டே இன்னும் குதிங்க, இன்னும் கத்துங்க என்றார். ஷாட் ஒ.கே அடுத்து என்றார். இன்னொரு முறை வேண்டாமா என்று சித்தார்த் கேட்க, "சித்தார்த்.. சில நொடிகள் வரப்போகிறது. இது போதும். பார்த்துக் கொள்ளலாம்" என்று போய்விட்டார் சுந்தர்.சி

நடிகர்களிடம் நண்பர்களாக பேசி வேலை வாங்குவதில் சுந்தர்.சி வல்லவர் என்று தெரிந்து கொண்டேன். அதிலும், எப்போதுமே ரொம்ப கூலாக பேசிக் கொண்டிருப்பார். இசை வெளியீட்டு விழா, பேட்டிகள் என எதிலுமே அதிகம் பேசாத சுந்தர்.சி தனது பழைய படங்கள் உருவான விதம் உள்ளிட்டவற்றை BOFTA-வில் படிக்கும் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்ட வீடியோவை காணும்போது ஆச்சர்யமே மிஞ்சியது. அதில் அவர் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள்..

* முதலில் 'வின்னர்' படத்தில் இடைவேளை வரை தான் வடிவேலுவின் காட்சிகள் இருந்தது. சுந்தர்.சி - வடிவேலு இணைப்பில் முதல் படம். இருவரும் படத்துக்காக பேசும் போது வடிவேலு "கால் உடைந்திருக்கிறதே" என்று சொன்னவுடன் "அப்படியா.. ஒன்றும் பிரச்சினையில்லை படத்தில் முதல் காட்சியிலே உங்கள் காலை உடைப்பது போல காட்சியை வைத்துவிட்டு நீங்கள் நொண்டி நொண்டி வருவது போல காட்சிகளை வைத்து காமெடி வைத்து விடலாம்" என்று கூறியிருக்கிறார் சுந்தர்.சி. காலை உடைக்கும் காட்சிக்காக எழுதப்பட்ட வசனம், "இந்த பார்ட்ரைத் தாண்டி நீயும் வரக்கூடாது. நானும் வர மாட்டேன்" என்பது. வடிவேலுவின் காமெடி காட்சிகள் நல்லபடியாக அமைந்துக் கொண்டே வந்ததால், இடைவேளைக்கு பிறகு அவரை நாயகனுடனே வருவது போல காட்சிகளை அமைத்திருக்கிறார்.

* 'தீயா வேலை செய்யணும் குமாரு' என்ற படம் ஒரு பழைய இந்தி படத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான். அப்படத்தில் நாயகியை காதலிக்க வைக்க ஓர் இடத்தில் போய் ஐடியாக்கள் வாங்கி வருவார். அந்த படத்தை அப்படியே மாற்றி, ஐடியா கொடுப்பவரே காதலிக்கு அண்ணனாக இருந்தால் எப்படியிருக்கும் என திரைக்கதையை முழுக்க மாற்றி பண்ணியிருக்கிறார்.

* 'அருணாச்சலம்' படம் பண்ண சுந்தர்.சியை அழைத்து ரஜினி சொன்னது வேறு ஒரு கதை. ரஜினியை இயக்குகிறோம்.. வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்று நினைத்து, அவருக்கு சொல்லப்பட்ட கதை பிடிக்கவில்லை என்றாலும் சூப்பர் சார் என்று தெரிவித்திருக்கிறார் சுந்தர்.சி. அதற்கு பிறகு ரஜினியோடு உட்கார்ந்து பேசி வெற்றியாக அமைந்த படம் 'அருணாச்சலம்'.

* எந்த ஒரு படத்தையும் திரையரங்கில் போய் பார்ப்பதில்லை. 'அந்த போதை எனக்கு தேவையில்லை. சென்சார் ஆகிவிட்டால் அப்படத்தில் இருந்து வெளியே வந்துவிட வேண்டும்' என்பார். ஒவ்வொரு படம் வெளியாகும் போது தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு அல்லது விவாதத்தில் தான் இருந்திருக்கிறார்.

* " ட்விட்டர், பேஸ்புக் விமர்சனத்தை எல்லாம் நான் பெரிசாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் சொல்லும் கருத்துகள் எல்லாம் புத்தி உள்ளே சென்று எங்கே எனது இயக்குநர் பணியை பாதித்து விடுமோ என்பதால் அந்தப் பக்கமே வருவதில்லை. ஒரு படைப்பாளியாக அதில் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. விமர்சனங்களை படிப்பேன், ஆனால் அதை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்."

* " காமெடி காட்சிகளை தனி ட்ராக்காக வைப்பதில் உடன்பாடே கிடையாது. படத்தின் கதையில் சில விஷயங்கள் போரடிக்கும், அதை நகர்த்துவதற்குத் தான் காமெடி தேவை. காமெடி என்பது கதையில் தேன் தடவுவது போல தான்."

அவர் BOFTA-வில் பல்வேறு விஷயங்கள் கூறியிருந்தாலும், அவர் சொன்னதில் நான் முழுமையாக ரசித்தது இன்றைய இயக்குநர்கள் பற்றித் தான். "ரஜினி, கமல் உள்ளிட்டவர்கள் அவ்வளவு வெற்றியைப் பார்த்துவிட்டு அமைதியாக இருக்கிறார்கள். இப்போது நிறைய பேரைப் பார்த்தால் சிரிப்பாக வரும், ஒரு படம் பண்ணிட்டு சினிமா என்றால் என்ன என்று பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்" என்று சொல்லியிருக்கிறார் சுந்தர்.சி.

தன் பெரும்பாலான படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு, வசூல் ரீதியில் வெற்றி என இருந்தும் சுந்தர்.சி அமைதியாக தன் வாழ்க்கையை கடப்பது தான் அவருடைய மிகப்பெரிய பலம்.

பிறந்த நாள் வாழ்த்துகள் சுந்தர்.சி! 

அன்று பேட்டி...இன்று போட்டி! சிவகார்த்திகேயனை புகழும் நெட்டிசன்கள்

பொங்கலுக்கு வெளியான படங்களில் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படம், பாலாவின் தாரை தப்பட்டை, விஷாலின் கதகளி ஆகிய படங்களை விட நல்ல வசூல் ஈட்டி வருகிறது.

சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் வேலை செய்த காலத்தில் பல்வேறு சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார். 'அவன் இவன்' வெளியான நேரத்தில் பாலா, விஷால், ஆர்யா ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கியிருப்பார்.

அந்த வீடியோ இப்போது முகநூல் மற்றும் ட்விட்டரில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

"அன்று பாலாவிடம் பேட்டி...இன்று பாலா படத்துக்கே போட்டி!" என ரசிகர்கள் அவரின் வளர்ச்சியை புகழ்ந்து வருகின்றனர்.

வைக்கப்பட்ட செக்கிலிருந்து மீண்டு வரத் திணறும் ரஜினி முருகன்??

இந்த பொங்கல் யாருக்கு சர்க்கரையோ இருந்ததோ? இல்லையோ? ரஜினிமுருகன் குழுவுக்கு தித்திக்கும் அளவிற்கு இருந்து வருகிறது.

இப்படத்துடன் மூன்று படங்கள் வெளியானாலும் இப்படமே வசூல் மற்றும் விமர்சனங்களில் முன்னிலை வகிக்கிறது.

படம் வெளியாகி இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது. இதுவரை வந்துள்ள தகவல்களின் படி தமிழகத்தில் மட்டும் ரூ. 24 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் படத்திற்கு ஏற்பட்டுள்ள வரவேற்புக்கு இந்த வசூல் சற்று குறைவே என தெரியவந்துள்ளது.

அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் படத்திற்கு எதிராக சில சிக்கல்கள் எழுந்ததே காரணம் என கூறப்படுகிறது.

காரணம், இப்படத்துடன் போட்டியாக முக்கிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் குறைவான தியேட்டர்களே ரஜினிமுருகன் படத்திற்கு கிடைத்ததாம். அதாவது தமிழகத்தில் மட்டும் 300 தியேட்டர்களே கிடைத்தன. மேலும் சில தியேட்டர்களில் ஒரு நாளைக்கு 2 காட்சிகளே கிடைத்திருக்கின்றன.

இவையில்லாமல் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட நெருக்கடியால் கடன்களை சரிக்கட்ட குறிப்பிட்ட சில விநியோகஸ்தர்களுக்கே மட்டுமே படம் கொடுக்கப்பட்டதாம்.

தற்போது படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துள்ளதால் நிறைய காட்சிகளும், தியேட்டர்களும் அதிகரிக்கப்படவுள்ளதாம்.

எனவே இனிவரும் நாட்களில் ரஜினிமுருகன் இன்னும் பல கோடிகளை வசூலிப்பான் என கோலிவுட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

நாராயணா, இந்த கொ… தொல்லை தாங்கலையே?

“ஐயோ எப்படி தம்பி இதெல்லாம்?” என்று தன்னைத் தானே வியந்து கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தமிழ்சினிமாவை யார் யாரோ கயிறு கட்டி மேலே தூக்கினாலும், நடுவுல பூந்து கட்டிங் பிளேயர் போடுவோம்ல? என்று சில ஹிட்டு பட ஹீரோக்கள் வந்து ஆபத்தை ஏற்படுத்துவார்கள். (பிட்டு பட ஹீரோக்கள் என்று மாற்றிப் படிக்காமலிருக்க கடவது) அப்படியொரு ஆபத்துதான் ஜி.வி என்கிறது சினிமாவுலகம். விஜய்க்கு ரஜினி இடத்தை பிடிக்க ஆசை. சிவகார்த்திகேயனுக்கு விஜய் இடத்தை பிடிக்க ஆசை. இந்த ஜி.வி.பிரகாஷுக்கு சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்க ஆசையாம். “எண்ணி வச்சுக்கோங்க…. இன்னும் ஒரே வருஷத்துல நான் அவர் இடத்துல இல்லேன்னா என் பெயரை மாத்திக்குறேன்” என்று வெளிப்படையாகவே பேசி வருகிறாராம் அவர்.

அதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறது திரையுலகம். ஒரு முன்னணி வார இதழில் சிவகார்த்திகேயன் அட்டைப்படம் வந்தது. அதை பார்த்தவுடன் இவருக்கும் அதே வார இதழில் அட்டைப்படமாக வந்துவிட ஆசை. தனது ஆசையை எப்படியோ சம்பந்தப்பட்ட இதழிடம் தெரிவிக்க, “அதுக்கெல்லாம் சான்சே இல்ல” என்று கூறிவிட்டார்களாம். “அவரு வர்றாரு. நான் வரக்கூடாதா?” என்றெல்லாம் விவாதம் பண்ணியவருக்கு, ஒரே ஒரு சலுகையை வழங்கியது இதழ். “வேணும்னா உங்க படம் ரிலீஸ் ஆகும்போது விளம்பரமா கொடுங்க. அட்டையில போட்டுடலாம். ஆனால் ஆறு லட்சம் பீஸ்” என்று கூற, அசரவேயில்லை பிரகாஷ்.

எப்படியோ அவர் பர்பாமென்ஸ் தாங்கிய அலங்காரத்துடன் அட்டைப்படத்துடன் வந்தது இதழ். (சர்குலேஷன்ல ஈரத்துணி விழலியே?) தற்போது ரஜினியின் பிரபல வசனமான எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்ற தலைப்பில் ஒரு ஆக்ஷன் படம் பண்ணுகிற ஆக்ஷனில் இறங்கியிருக்கிறார் அவர். கொட்டுகிற மழை, கோவாச்சு கண்கள், ஆட்டோக்காரர் அடையாளம் என்று அவரது பர்பாமென்ஸ் கண்டு கதி கலங்கிப் போயிருக்கிறது ஏரியா.

தம்பி நீ வந்து கிளர்றதுக்கு எங்க தலைவர் படத்தோட டைட்டில்தான் கிடைச்சுதா என்று ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கல் வைத்துக் கொண்டிருக்க, தன்னை மினி சிவகார்த்திகேயனாகவே எண்ணி சம்பளத்தை ஏற்றுகிற முடிவுக்கும் வந்துவிட்டாராம் ஜி.வி.

விறகுன்னு நினைச்சா சறுகாட்டம் பறக்குது. சறுக்குன்னு நினைச்சா விறகாட்டம் பொசுக்குது! ஏண்டா நாராயணா இப்படி?
1

இதையெல்லாம் தாங்கி தான் ஆகவேண்டும்- அஜித் உருக்கம்

அஜித் வேதாளம் வெற்றிக்கு பிறகு மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார். மேலும், தன் காலில் ஏற்பட்ட அடிக்கு அறுவை சிகிச்சை முடித்து ஓய்வில் இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்று அஜித் குறித்து வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘அஜித் மருத்துவமனையில் இருந்த போது, அருகே வேதாளம் ஒரு திரையரங்கில் ரிலிஸ் ஆனதாம்.

ரசிகர்களின் விசில் சத்தம் அவர் காதில் கேட்க, இத்தனை கஷ்டப்பட்டு, இந்த வலியை தாங்கினால் தான், வெற்றி கிடைக்கும்’ என நெகிழ்ச்சியாக கூறினாராம்.

ஒரு வரியை வைத்து முடிவு செய்யாதீர்கள்- விஜய் ஆண்டனி சர்ச்சைக்கு விளக்கம்

விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் பிச்சைக்காரன். இப்படத்தின் விளம்பரத்திற்காக லோகன் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

இதில் ‘பாழா போன உலகத்துல எல்லாமே காசு தான்’ என ஒரு பாடல் எழுதியுள்ளார். இப்பாடலில் மருத்துவர்களை குறை சொல்வது போல் ஒரு வரி இடம்பெற்றதாக சிலர் கண்டனர் தெரிவித்தனர்.

தற்போது இந்த சர்ச்சைக்கு விஜய் ஆண்டனி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதோ உங்களுக்காக அந்த விளக்க அறிக்கை...

ரஜினி முருகன் 1 வார பிரமாண்ட வசூல்- முழு விவரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் திரையரங்கு எங்கும் ஹவுஸ் புல் காட்சிகளாக வெற்றி நடைப்போடுகின்றது. இந்நிலையில் இப்படம் பல படங்களுடன் போட்டியில் வெளிவந்தது.

ஆனால், எதிர்ப்பார்த்ததை விட நல்ல வசூல் தான் இன்று வரை இப்படத்திற்கு கிடைத்து வருகின்றது.

தற்போது வந்த தகவலின்படி இப்படம் 1 வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ 25 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடும் பழங்கள்

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 45 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது என்றும்,

தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் என்றும், அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது நம் முன்னோர்கள் சொல்வது போல், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்.

எனவே நீரிழிவு நோயாளிகள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.

கிவி கிவி பழம் :
நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
செர்ரி :
செர்ரி பழங்களில் கிளை சீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
கொய்யா :
கொய்யாப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் `ஏ’ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.
நாவல் பழம் :
கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.
பீச் :
மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
பெர்ரிப் பழங்கள் :
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
ஆப்பிள் :
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அன்னாசி :
அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டிவைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.
பேரிக்காய் :
சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
பப்பாளி :
பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
அத்திப்பழம் :
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
ஆரஞ்சு :
சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் `சி’ இருப்பதால், இந்த பழத்தை தினந்தோறும் அளவாக சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தர்பூசணி :
தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.
கிரேப் ஃபுரூட் :
ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே காணப்படும் இந்த பழம் தான் கிரேப் ஃபுரூட். இது நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளும்.
மாதுளை :
அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக் கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
பலாப்பழம் :
பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தொடக்கூடாது என்று நினைக் கக்கூடாது. ஏனென்றால், இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் பழங்களுள் ஒன்றாகும்.
நெல்லிக்காய் :
கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் `சி’ மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.
முலாம்பழம் :
முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.
நட்சத்திரப் பழம் :
இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.
வெள்ளை கொய்யா :
நாவல் பழத்தைப் போல் இது மிகவும் பிரபலமாக இல்லாவிட்டாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு பழம். இதனை நீரிழிவு நோயாளிகள், தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் என்பது பரம்பரை வியாதியா அல்லது பருவத்தில் வரும் வியாதியா என்ற பட்டிமன்றம் நடத்தாமல் வந்த பின்னர் என்னசெய்யவேண்டும் என்று யோசியுங்கள்.
உணவு கட்டுப்பாட்டை சரியாக கடைபிடித்து வந்தால் எல்லா நோயுமே நம்மை விட்டு அகன்றுவிடும். அதிலும் குறிப்பாக மேற்கண்ட பழ வகைகளை மட்டும் உண்டு வாழ்வை மட்டும் இனிப்பாக்குவோம்.

சிசிஎல் பாலிடிக்ஸ்? விஷாலை தொடர்ந்து ஜீவாவும் விலகல்!

முதலில் சரத்குமார் தலைமையிலும் அதற்கப்புறம் விஷால் தலைமையிலும் நடந்து வந்த சிசிஎல் கிரிக்கெட் விளையாட்டு, புரபஷனல் கிரிக்கெட் வீரர்களின் மேட்சை விட படு பிரமாதமாக அமைய, நாடெங்கிலும் அதற்கு நல்ல வரவேற்பு. ஸ்பான்சர்களும் குஷியாக இந்த குழுவிற்கு ஆதரவளித்ததால், நாளொரு பந்தும் பொழுதொரு உருட்டலுமாக சந்தோஷ ஆட்டம் நடத்திக் கொண்டிருந்தது சென்னை ரைனோஸ் அணி. இப்படி மட்டையும் பந்துமாக இருந்தால், மார்க்கெட்ல முட்டை விழுந்துரும் என்பதை சற்று லேட்டாக புரிந்து கொண்டார் விஷால். அந்த நேரம் பார்த்து அவரை வெறுப்பேற்றிய சக நட்புகள், அவரை அணியை விட்டே வெளியேறுகிற அளவுக்கு படுத்தி எடுத்தது.

சரத்குமார் பாலிட்டிக்சை கூட சமாளிச்சுரலாம். கூடவே இருக்கிற கொசுக்கடிக்கு ஏது மருந்து என்று முடிவெடுத்த விஷால், நிமிஷத்தில் அந்த கேப்டன் பதவியை துறந்து விட்டு தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதற்கப்புறம் விஷாலின் இடத்திற்கு வந்தமர்ந்தார் ஜீவா. “ஏன் அங்கே தோற்றீங்க? ஏன் இங்கே காலை வாரினீங்க? நாங்க பார்க்காத ஆளையெல்லாம் நடிகர்னு ஏமாத்தி உள்ள இறக்குறீங்களே, அது நல்லாவா இருக்கு?” என்றெல்லாம்  ஜீவாவை நோக்கி பலரும் கேள்வி எழுப்ப, இதென்னடா வம்பாப் போச்சு என்றாச்சு அவரது Ball வடியும் முகம்.

நடுவில் அவரை இன்னும் மனம் நோக வைத்தார்களாம் அணிக்குள்ளிருக்கும் சிலரே. இதில் ஆத்திரத்திற்குள்ளான ஜீவா, நேற்றோடு அந்த பதவிக்கு முழுக்கு போட்டுவிட்டார். சினிமாவில் கூட இனி கிரிக்கெட் மட்டையை தூக்க மாட்டேன் என்கிற அளவுக்கு விரக்தியாகிவிட்டாராம். ஆனால், இன்று என்ன காரணத்திற்காக அவர் விலகினார் என்ற விளக்கம் ஏதும் இல்லாமல், ஜீவா சிசிஎல் கேப்டன் பதவியை துறந்தார் என்று மட்டும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

பரத்துக்கே படம் கிடைச்சுருச்சு. பரபர ஜீவா உருப்படியாக அவர் வேலையை பார்க்க தடையாக இருக்கும் ஒரு விஷயத்தை உடைத்துவிட்டு வெளியேறியதில் தப்பென்ன இருக்கு? போங்கப்பா… இத பற்றி பேசறதுக்கு பதிலா போய் பால் பொறுக்கி போடுங்க!

கடைசி நியூஸ்- ஜீவா விட்டுப்போன கேப்டன் பதவியை கேட்ச் பிடித்திருக்கிறார் ஆர்யா!

இது தான் படம், அனைவரையும் புகழ்ந்து தள்ளிய டிடி

சின்னத்திரை தொகுப்பாளர் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது டிடி தான். இவரின் கலகலப்பேச்சால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து இழுப்பார்.

இவர் சமீபத்தில் ரஜினி முருகன் படம் குறித்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். இப்படம் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி படத்தில் நடித்த பலரையும் குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.



கவுண்டமணியைக் கோபப்படுத்திய புதுநடிகர்

கவுண்டமணி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது”. இவருடன் சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா படங்களில் நண்பன் கதாபாத்திரங்களில் நடித்த சௌந்தரராஜா மற்றும் மெட்ராஸ் பட புகழ் ரித்விகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

கவுண்டமணியுடன் நடித்த அனுபவத்தை பற்றிப் பகிர்ந்து கொண்டார் சௌந்தரராஜா. “கவுண்டமணி சார், எந்த டயலாக்கையும் வாசிக்க மாட்டார், வாசிக்கச்சொல்லி கேட்பார். ரெண்டு, மூணு தடவை வாசிக்கச்சொல்லி கேட்பார், அப்புறம் நேரடியாக டேக் போகலாம்ணு சொல்லிடுவார்.

ஒரே டேக்ல ஓகே பண்ணுவார். இத்தனைக்கும் பேப்பர்ல இருந்த டயலாக் ஒண்ணுகூட மிஸ் ஆகாது. அது எத்தனை பக்கமா இருந்தாலும் இதான் கவுண்டமணி சார் ஸ்டைல். அவரோட இந்த அசாத்திய திறமைதான் அவர்  இவ்ளோ பெரிய இடத்தில் இருக்க காரணம்.

அப்பேர்பட்ட திறமைக்காரர் முன்னாடி, நான் பண்ணுன கூத்தைக்கேட்டா உங்களுக்குக் கோபம் வந்தாலும் ஆச்சர்யமில்ல. ஒரு சீன்ல, கவுண்டமணி சார், நான் அப்புறம் ரித்விகா காம்பினேஷன். காட்சிப்படி கவுண்டமணி சார் ரொம்ப நக்கலா எங்களைப் பத்தி பேசிட்டிருப்பார். அதைக்கேட்டு, நான்
சீரியஸா, செம கோபத்துல அவரைப் பார்த்து முறைக்கணும். கவுண்டமணி சார், நக்கலா பேசுறப்போ, அவர் வாயையே பார்த்துக்கிட்டிருந்தேன் நான்.

அசால்டா, அவர் ஸ்டைல்ல, செம கெத்தா நக்கலா பேசுனப்போ,  எனக்கு, அவரோட நடிப்பையும் கெத்தான அவரோட ஸ்டைலையும் மெய்மறந்து ரசிச்சிக்கிட்டு இருந்தேன். ஒவ்வொரு முறையும் அவரை மனசு ரசிச்சதுல  அவர் மேல  கோபம் வர மாதிரி நடிக்க முடியல. பட்டு பட்டுன்னு சிரிச்சிட்டேன். இதே கூத்து தான் தொடர்ந்து சில டேக்குகள்லயும் நடந்தது.

கவுண்டமணி சார், நான் அடிச்ச கூத்துல லேசா சீரியஸாகுற மாதிரி எனக்குள்ள தோணிச்சு. அப்புறம் தான், சுதாரிச்சிக்கிட்டு,  ‘அண்ணே,  மன்னிச்சிருங்கண்ணே, இந்த தடவை சொதப்பாம நடிக்கிறேன்’னு சொன்னேன். தட்டிக்கொடுத்து ‘அசத்துப்பா’ன்னு சொன்னார். அதுக்கப்புறம்  தான் அந்த டேக் ஓகே ஆச்சு. நிஜமாவே கவுண்டமணி சார் கூட நடிச்சது எனக்கு பெரிய அனுபவம்”, என்றார் சௌந்தரராஜா.

ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கான டிப்ஸ்! உஷார்

எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர்வழிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்றுவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார் பி.கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணனா

”ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே  செய்கின்றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என சில விஷயங்கள் இதில் உள்ளன. கடந்த மார்ச் மாதம்கூட  TimTara என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் நிறுவனர் ஏமாற்று நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டார். அந்த இணையதளமும் அதன்பின்னர் மூடப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.

கவர்ச்சி விளம்பரங்கள்!

கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் 500 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும். இதை நம்பி பலரும் அந்தப் பொருளை வாங்க போட்டிபோட கடைசியில், யாராவது ஒருவருக்கு மட்டுமே அந்தப் பொருள் கிடைக்கும் என்று சொல்லிவிடும். ஆனால், ஏற்கெனவே கட்டிய பணத்தைத் திரும்பத் தரமாட்டோம், அதற்கு பதில் ஏதேனும் பொருள் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லும். வேறு வழியில்லாமல் நாம் வாங்கும் இந்தப் பொருள், கடையில் விற்கும் விலையைவிட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இரண்டு நிமிட நிபந்தனை!

இந்த ஏமாற்று வித்தையில் வேடிக்கையான விஷயம்,  வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்துமுடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒரு டெக்னிக்கை பின்பற்றுகின்றன. அதாவது, பொருளை வாங்க இரண்டு நிமிடங்களே அவகாசம் தரும். இதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைக்காது என்று சொல்வதால், நாம் பரபரப்புக்குள்ளாவோம்.  ஏற்கெனவே பணம் கட்டிவிட்டோம்; எனவே, இரண்டு நிமிடத்தில் பொருளை வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்டிய பணம் போய்விடும் என்கிற அவசரத்தில்தான் நாம் செயல்படுவோம். இந்த இரண்டு நிமிடத்தில் பொருட்களை சரியாக புக் செய்ய முடியாமல் பணத்தை இழக்கிறார்கள் பலர்.

மறைமுக கட்டணங்கள்!

இன்னும் சில இணையதளங்கள் Free Trail, Half Price, போன்று பல ஆஃபர்களை தருகின்றன. இதிலும், பெரும்பாலும் நடப்பது மோசடியே. உண்மையில் இவர்கள் மறைமுக கட்டணங்கள் (Hidden Charges) என்ற பெயரில் அதிகமான பணத்தை உங்களிடமிருந்து கறந்துவிடுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைக் கேட்க மாட்டார்கள். இதேபோல, திடீரென இலவச போன், கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது.

ஷிப்பிங் கட்டண மோசடி!

உண்மையாக வாடிக்கையாளர்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் தளங்கள், டிவி வாங்கினால்கூட அதை கொண்டுவந்து தருவதற்கு எந்தக் கட்டணத்தையும் கேட்காது.  அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும். பொருளை கொண்டுவந்து தர அதிக கட்டணம் கேட்கும் இணையதளங்களை  நம்பக்கூடாது. இதில் இ-பே மட்டும் விதிவிலக்கு, காரணம், அந்தத் தளத்தில் பொருட்களை விற்பவர்கள் பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விலை குறைவாக தருவதால் பொருட்களை கொண்டுவந்து சேர்க்க கட்டணம் கேட்கலாம்.

நோ ரிட்டர்ன், ப்ளீஸ்!

பொருட்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலான தளங்கள் மோசடி செய்கின்றன. ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும்போது அளவு சரியாக இல்லை என்றால், அதைத் திரும்ப அனுப்பும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிவது அவசியம். ஆனால், ஆர்டர் செய்த பொருளைத் திரும்ப அனுப்பும் முன்பு நீங்கள் அதை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

விதிமுறைகளில் மோசடி!

சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயே விதிமுறைகளை பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கியமான விதிமுறைகளை நம் கண்ணுக்கு தெரியாதபடி போட்டிருப்பார்கள். அந்த விதிமுறையை நாம் கவனிக்கத் தவறிவிட்டு, பொருட்களை வாங்கிய பின்னர் அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெரிவித்தால், நாங்கள்தான் விதிமுறைகளை ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம் என்பார்கள். பெரும்பாலும் பொருட்களை ரிட்டர்ன் எடுத்துக்கொள்வதிலேயே இந்தப் பிரச்னை வரும்.

கூரியர் மோசடி!

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் செய்திருக்கும் பொருளானது கூரியர் மூலமாக நமக்கு அனுப்பப்படும். ஆனால், அந்த கூரியரை பிரித்து பார்க்கும்போது அந்தப் பொருளானது இல்லாமல்கூட இருக்கலாம். வீட்டுக்கு வந்த கூரியரில் பொருள் ஏதும் இல்லை எனில், உடனே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பியதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாமல்போனால், அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கலாம். சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மூன்றாம் நபர் விற்பனையாளர்களைக்கொண்டு செயல்படுவதால் அவர்களாலும் ஏமாற்றப்படலாம், ஜாக்கிரதை.

வாரன்டி இருக்கிறதா?

பல இணையதளங்கள் உற்பத்தியாளர் வாரன்டியுடன்தான் (Manufacturer Warranty)பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையைவிட மிகக் குறைவாக இருந்தால், உற்பத்தியாளர் வாரன்டி தராமல் மோசடி செய்துவிடுகின்றன சில நிறுவனங்கள். அப்படியே வாரன்டி தந்தாலும் அதற்கான பொறுப்பு அந்த ஆன்லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மை குழப்பி ஏமாற்றிவிடும்.

உஷாரய்யா உஷாரு!

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இப்படி நடக்கும் மோசடிகளில் நாம் சிக்கி ஏமாறாமல் இருக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

* பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100 அல்லது 200-க்கு தருகிறோம் என்று சொல்லும் தளங்களை ஒதுக்குவது நல்லது.

* பொருள் ஏலத்தில் (Auction, Bid) விற்கப்படும்போது பொருளின் விலை சந்தை விலையைவிட சற்றே குறைவாக மட்டுமே இருக்கவேண்டும். மிக அதிக விலையுள்ள பொருளை, மிகக் குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்றால் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது.

* நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார்ப்பதும் அவசியம். சில தளங்களில் எழுத்துப்பிழை போன்று இருந்தாலும், அவை போலி பொருட்களை அவ்வாறு விற்கின்றன. உதாரணம்,Nokia – Noika, Samsung Galaxy Note – Galaxy Note..

*பொருளை வாங்கும்போது, அதை ஏற்கெனவே வாங்கியவர்களின் கருத்தை வாங்கும் தளத்திலோ அல்லது இணையத்திலோ தேடிவிட்டு வாங்க வேண்டும்.

* ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்கத் தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியைக் குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனித்து விட்டு, வாங்குவதற்கான வேலையில் இறங்குவது நல்லது. அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். ஆர்டரை கேன்சல் செய்தால் பெரும்பாலும், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும்.

* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிக மிக பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள்.  இல்லை என்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிற மாதிரி (Cash On Delivery) வைத்துக்கொள்ளுங்கள்.

* முதல்முறையாக ஆன்லைன் மூலம் பொருள் வாங்குபவர்கள் அதுகுறித்து நன்கு பரிச்சயம் கொண்டவர் மூலம் வாங்கலாம்.

* ஆர்டர் செய்த பின்னர் உங்களுக்கு வரும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை பொருள் உங்களுக்கு கிடைக்கும் வரை பத்திரமாக வைத்திருக்கவும்.”

கட்சி தாவுகிறார் வடிவேலு.?

தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன் பேர்வழி என தேமுதிக., தலைவரை கடுமையாக சாடினார். ஆனால் தேர்தலில் திமுக., தோல்வி அடைந்ததோடு, வடிவேலுவின் சினிமா மார்க்கெட்டும் ஆட்டம் கண்டது. இந்த ஐந்தாண்டு காலத்தில் சினிமாவில் அவர் எப்படி இருந்தார், அவரது சினி பீல்டு வாழ்க்கை எப்படி கடந்தது என்று யாருக்கும் சொல்லி தீர வேண்டிய அவசியமில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதே நடிகர்களை தங்களது கட்சியில் சேர்க்க முன்னணி கட்சிகள் பலவற்றில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த முறை திமுக.வுக்கு ஆதரவாக பிராச்சாரம் செய்த வடிவேலு, இந்த முறை அந்தக்கட்சிக்கு பிரச்சாரம் செய்ய மாட்டார் என தெரிகிறது. மாறாக கடந்த சட்டசபை தேர்தலில் தான் பிரச்சாரம் செய்த கட்சிக்கு எதிரான பலம் பொருந்திய கட்சியில் அவர் இணையப்போவதாக செய்திகள் உலா வருகின்றன.

விரைவில் வடிவேலு கட்சி மாறும் செய்தியோ.? அல்லது அவர் புதிதாக ஒரு கட்சியில் இணைகிறார் என்ற செய்தி வெளியாகும் என தெரிகிறது. 

34 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம்பாகமாகும் தமிழ்ப்படம்

குடும்பப் படங்கள் என தமிழில் வெளியான படங்களை லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பாக மணல் கயிறு படத்தை நம்மால் தவிர்க்கவே முடியாது. முக்கியமாக தாய்மார்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம். விசு இயக்கத்தில் எஸ்.வி.சேகர், சாந்தி கிருஷ்ணா, மனோரமா, விசு, உள்ளிட்ட பலர் நடிப்பில் 1982ல் வெளியான படம்.

 இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. 34 வருடங்கள் பழமையான இப்படத்தின் இரண்டாம் பாகத்தை யாருடா மகேஷ் படத்தின் இயக்குநர் மதன் குமார் இயக்குகிறார். தயாரிப்பு ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ். இரண்டாம் பாகத்திலும் விசு, மற்றும் எஸ்.வி.சேகர் நடிக்க இருக்கிறார்கள்.

சமீபகாலமாகவே விசு படங்களில் நடிப்பதைக் குறைத்திருந்தார் தற்போது இப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க இருக்கிறார். சமீபகாலங்களாக குடும்பப் படங்கள் குறைந்துவிட்ட தமிழ் சினிமாவில் மணல்கயிறு பாகம் 2 மாற்றத்தை உருவாக்குமா பார்க்கலாம்!