Thursday 21 January 2016

நாராயணா, இந்த கொ… தொல்லை தாங்கலையே?

“ஐயோ எப்படி தம்பி இதெல்லாம்?” என்று தன்னைத் தானே வியந்து கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தமிழ்சினிமாவை யார் யாரோ கயிறு கட்டி மேலே தூக்கினாலும், நடுவுல பூந்து கட்டிங் பிளேயர் போடுவோம்ல? என்று சில ஹிட்டு பட ஹீரோக்கள் வந்து ஆபத்தை ஏற்படுத்துவார்கள். (பிட்டு பட ஹீரோக்கள் என்று மாற்றிப் படிக்காமலிருக்க கடவது) அப்படியொரு ஆபத்துதான் ஜி.வி என்கிறது சினிமாவுலகம். விஜய்க்கு ரஜினி இடத்தை பிடிக்க ஆசை. சிவகார்த்திகேயனுக்கு விஜய் இடத்தை பிடிக்க ஆசை. இந்த ஜி.வி.பிரகாஷுக்கு சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்க ஆசையாம். “எண்ணி வச்சுக்கோங்க…. இன்னும் ஒரே வருஷத்துல நான் அவர் இடத்துல இல்லேன்னா என் பெயரை மாத்திக்குறேன்” என்று வெளிப்படையாகவே பேசி வருகிறாராம் அவர்.

அதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறது திரையுலகம். ஒரு முன்னணி வார இதழில் சிவகார்த்திகேயன் அட்டைப்படம் வந்தது. அதை பார்த்தவுடன் இவருக்கும் அதே வார இதழில் அட்டைப்படமாக வந்துவிட ஆசை. தனது ஆசையை எப்படியோ சம்பந்தப்பட்ட இதழிடம் தெரிவிக்க, “அதுக்கெல்லாம் சான்சே இல்ல” என்று கூறிவிட்டார்களாம். “அவரு வர்றாரு. நான் வரக்கூடாதா?” என்றெல்லாம் விவாதம் பண்ணியவருக்கு, ஒரே ஒரு சலுகையை வழங்கியது இதழ். “வேணும்னா உங்க படம் ரிலீஸ் ஆகும்போது விளம்பரமா கொடுங்க. அட்டையில போட்டுடலாம். ஆனால் ஆறு லட்சம் பீஸ்” என்று கூற, அசரவேயில்லை பிரகாஷ்.

எப்படியோ அவர் பர்பாமென்ஸ் தாங்கிய அலங்காரத்துடன் அட்டைப்படத்துடன் வந்தது இதழ். (சர்குலேஷன்ல ஈரத்துணி விழலியே?) தற்போது ரஜினியின் பிரபல வசனமான எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்ற தலைப்பில் ஒரு ஆக்ஷன் படம் பண்ணுகிற ஆக்ஷனில் இறங்கியிருக்கிறார் அவர். கொட்டுகிற மழை, கோவாச்சு கண்கள், ஆட்டோக்காரர் அடையாளம் என்று அவரது பர்பாமென்ஸ் கண்டு கதி கலங்கிப் போயிருக்கிறது ஏரியா.

தம்பி நீ வந்து கிளர்றதுக்கு எங்க தலைவர் படத்தோட டைட்டில்தான் கிடைச்சுதா என்று ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கல் வைத்துக் கொண்டிருக்க, தன்னை மினி சிவகார்த்திகேயனாகவே எண்ணி சம்பளத்தை ஏற்றுகிற முடிவுக்கும் வந்துவிட்டாராம் ஜி.வி.

விறகுன்னு நினைச்சா சறுகாட்டம் பறக்குது. சறுக்குன்னு நினைச்சா விறகாட்டம் பொசுக்குது! ஏண்டா நாராயணா இப்படி?
1

0 comments:

Post a Comment