Thursday 25 February 2016

‘ஒப்புக்கொன்னாரா?” - விசாரணை பாணியில் பாரதிராஜாவும் மாட்டிக்கொண்ட கதை

நேற்று  பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்ற விசாரணை படம் குறித்த கருத்துரைக்கு, இயக்குநர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டு தலைமை தாங்கினார். படத்தை வெகுவாகப் பாராட்டிய அவர், ‘வெளில வந்ததும்.. ச்சே நாம்ள்லாம் என்ன படம் எடுத்திருக்கோம்’ என்று நினைக்க வைத்துவிட்டார் வெற்றிமாறன் என்றார்.

அவர் பேசுகையில் தான் போலீஸ் ஸ்டேஷன் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

"அப்ப ஜெமினில அசிஸ்டெண்ட்டா வேல செஞ்சிட்டிருந்தேன். அப்பவே இங்க்லீஷ் படிக்கணும்னு ஆசைல அமெரிக்கன் லைப்ரரி போவேன். மொத்தமா இருபத்தஞ்சு பைசாதான் இருக்கும். அங்கிருந்து ரெண்டு புக் எடுத்துட்டு தேனாம்பேட்டை டிக்கெட் கேட்கறேன். பத்து பைசா. ’டென் என்பி ஒண்ணு குடுங்க’ன்னேன். கண்டக்டர் ’ட்வெண்டி என்.பி டிக்கெட் குடுத்துட்டார். இருந்ததே 25 காசுதான்னு எனக்கு கோவம். ’என்ன டென் NP கேட்டா, ட்வெண்டி NP டிக்கெட் குடுத்துட்டீங்க?’ன்னு கேட்டேன். கண்டக்டர் கோவமா ‘என்ன டென் NP? பெரிய இங்க்லீஷ் படிச்சவரு! பத்து காசுன்னு கேட்க மாட்டியா’ ன்னு கேட்டார். ‘நான் மடத்தனமாப் பேசாதய்யா’ன்னுட்டேன். அப்டியே சண்டை பெரிசாகி, கண்டக்டரை அடிச்சுட்டேன்.

டக்னு பஸ்ஸை பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு விட்டுட்டாங்க. ஒரு பெரியவர் மட்டும் ‘நான் இருக்கேன்யா.. உன் பக்கம் கொஞ்சம் நியாயம் இருக்கு’ன்னு வந்தார். ஆனாலும் கேஸ் போட்டுட்டாங்க. நம்ம சினிமாலதான் கோர்ட், ஸ்டேஷன்லாம் பார்த்திருக்கோம். என்ன பண்ணுவாங்கன்னு தெரியலையேன்னு உட்கார்ந்திருந்தேன். அந்த இன்ஸ்பெக்டர் நல்லவரு, ‘அடிச்சேன்னு சொல்லாத. பாதுகாப்புக்கு கையால தடுத்தேன்’னு எழுது’ன்னார். எழுதினேன். வெளில உன்னை அடிக்க ஆளுக நிக்கறாங்கன்னு சொல்லி, ஜீப்ல என்னை இறக்கிவிட ஏற்பாடு பண்ணினார். ’ரெண்டு நாள் கழிச்சு வாங்க.. கிழிச்சுப் போட்டுடலாம்னார். ரெண்டு நாள் கழிச்சுப் போனா.. அந்த இன்ஸ்பெக்டரை மாத்திட்டாங்க.

அது வேறொரு பிரச்னை. ஒரு கோவில்ல புதுசா புள்ளையார் மொளைச்சு, அவரு பால் குடிக்கறார்னு வதந்தி பரவி, அந்தப் பிரச்னைல அவரை மாத்திட்டாங்க. நானும் விட்டுட்டேன்.

மூணு மாசம் கழிச்சு, கங்கை அமரன் ஏதோ கவர் வந்திருக்குன்னு கூப்டான். பார்த்தா, கோர்ட்ல இருந்து சம்மன். சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வரச்சொல்லி. லாயர்லாம் பார்க்கல நாங்க. நாமதான் பராசக்தி பார்த்திருக்கோமே! ‘நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை’ன்னு ஆரம்பிச்சு இந்த கண்டக்டர் என்னென்ன பண்ணினார்னான்னு அந்த ஜட்ஜுக்கு வெளக்கிரலாம்டான்னு நானும், இளையராஜா அண்ணன் பாஸ்கரும் போனோம். கோர்ட்ல என்னடான்னா எங்களை கூப்டவேல்ல. வெய்ட் பண்ணிப் பண்ணி, நேரமாகுதுன்னு ஒரு போலீஸ்கிட்ட கேட்டா, ‘வாய்யா.. ஒன்னத்தான் தேடிட்டிருந்தேன்’ன்னு கூட்டீட்டு போய் ஒக்கார வெச்சுட்டார். ‘கூப்பிடுவாங்க, போன உடனே பேசிர்றது’ன்னு நான் ரெடியா இருக்கேன்.

கூப்டாங்க.

போய் நின்னு, ‘ஐயா.. நடந்தது என்னன்னா’ன்னு நான் ஆரம்பிக்கறேன். ஜட்ஜ் என்னைப் பார்க்காம, குமிஞ்சுட்டே ‘ஆர் யு கில்ட்டி ஆர் நாட் கில்ட்டி?’ன்னு கேட்கறார்.

'இல்லய்யா.. வந்து நடந்தது என்னன்னா..’

“ஆர் யு கில்ட்டி ஆர் நாட் கில்ட்டி??”

“ஐயா... அது வந்து ஐ’ம் நாட் கில்ட்டி..’ன்னு ஆரம்பிக்கறதுக்குள்ள போலீஸ் என்னைப் பிடிச்சு இழுத்துடுச்சு. எனக்கு பக்னு ஆய்டுச்சு. ‘ஐயா அது என்னன்னான்னு பேசறேன். ஜட்ஜ் குமிஞ்சுகிட்டே தஸ் புஸ்னு ஏதோ எழுதி தூக்கிப் போடறார். என்னைக் கூப்டு உள்ள ஒக்கார வெச்சுட்டாங்க.

என்னன்னு கேட்டா, ‘ஒரு லாயர் இல்லாம நீ வெளில போகமுடியாது’ன்னுட்டாங்க. ‘என்னடா சொல்றானுக. நாம நியாயம் பேச வந்திருக்கோம்.. இவரென்ன வக்கீல் வந்துதான் எடுக்கணும்கறார்’ன்னு நெனைச்சேன். போலீஸ் வேற மெரட்டறாங்க. ‘இன்னும் அரை மணிநேரம் இருக்கு. வக்கீல் வர்லைன்னா உள்ள தள்ளீடுவோம்கறான். புக் படிக்க விடலை.  பெஞ்ச் விட்டு எந்திரிக்க விடலை. பசி வேற.

வக்கீல் வரணும்னா அவருக்கு இருவது ரூவா குடுக்கணும். இளையராஜா அப்ப ஏவிஎம்ல ரெகார்டிங்கல இருக்கார். சாயந்திரமானா ரெகார்டிங் முடிச்சு, அறுபது ரூவா கெடைக்கும். சரின்னு பாஸ்கரை அனுப்ச்சி எப்படியாவது காசு வாங்கிட்டு வரச்சொன்னேன். அப்பறம் இருவது ரூவா குடுத்து ஒரு வக்கீலை வெச்சு என்னை எடுத்தாங்க. என்னை யார்னே தெரியாது, ஆனா இருவது ரூவா வாங்கிட்டு இவனைத் தெரியும்னு கையெழுத்து போட்டு வெளில எடுத்தாங்க.

அப்பறம் ஆறுமாசம் வாய்தா வாய்தான்னு அலையவிட்டு, எவ்ளோ காசு செலவாச்சுன்னுகூட கணக்கில்ல. எங்க லாயர், ‘யோவ் கில்ட்டின்னு ஒத்துக்கய்யான்னு சொன்னார். என்னய்யா ஆறுமாசம் கழிச்சு இப்ப ஒத்துக்கய்யான்னா என்ன அர்த்தம்னு தோணிச்சு. சரின்னு கையக்கட்டி ‘ஆமங்கய்யா.. கில்ட்டிங்கய்ய்யா’ன்னேன். அம்பது ரூபா கட்டச் சொல்லி விட்டுட்டாங்க.

இப்ப ஏதோ வளர்ந்துட்டோம், இதைக் காமெடியாப் பேசறோம். ஒரு பாமரனா எனக்கு என்ன தெரியும்? விசாரணை படம் மாதிரி உள்ள கூட்டீட்டுப் போய் நொக்கு நொக்குன்னு நொக்கீருப்பாங்க”

இந்தக் கதையைச் சொல்லி படத்தைப் பாராட்டியவர் ‘எங்களுக்கு வயசாய்டுச்சுன்னு நெனைக்காதீங்க. நாங்களும் உங்களை ஜெயிக்க புதுசு புதுசா யோசிச்சுட்டு களத்துல இறங்கறோம் பாருங்க’ என்று வெற்றிமாறனுக்கு செல்லமாக சவாலும் விட்டார்.

இளையராஜாவுக்காக மாறிய தயாரிப்பாளர்கள் சங்கம்

திரைப்படங்களை சேனல்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக கடந்த பில மாதங்களாக பிரச்சனைகள் நீடித்து வருகிறது. இப்பிரச்சனை காரணமாக தனிப்பட்ட முறையில் எந்த நடிகர், நடிகைகளும் சேனல்களுக்கு பேட்டியளிக்க கூடாது என்றும் பட புரொமோஷன் செய்து கொள்ள மட்டும் படக்குழுவினர் பேட்டியளிக்கலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் கண்டீஷன் போட்டிருந்தது.

இந்நிலையில், இளையராஜாவுக்கு பாராட்டு விழாவை ஒரு பிரபல தொலைக்காட்சி மிகவும் பிரம்மாண்டமாக வரும் 27ம் தேதி நடத்த இருக்கிறது.

இளையராஜாவின் பாராட்டு விழா என்பதால் விழாவில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் சங்கம் அந்த கண்டிஷனை தளர்த்தியுள்ளது.

'இவரு ரஜினி படத்தில் நடிச்சவர் தானே..!'- விபத்தில் சிக்கியவருக்கு கைகொடுக்காத 108

ஒளிப்பதிவாளர் ஒருவருடன் பேட்டியை முடித்துக் கொண்டு வடபழனியில் இருந்து நானும் புகைப்படக்காரரும் திரும்பிக் கொண்டிந்தோம்.

வடபழனி பேருந்து நிலையத்துக்கும் விஜயா மருத்துவமனைக்கும் இடையில் காலை 11 மணி அளவில் ஒரு விபத்து நடக்கிறது. முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவரை பின்னால் வந்து கொண்டிருந்த வேன் ஒன்று மோதிவிட,  நிலைகுலைந்து  கீழே விழுகிறார் அந்த பெரியவர். அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த நாங்கள்,  எங்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு அவரை தூக்கி நிறுத்த முயன்றோம். மனிதாபிமானம் நிறைந்த பொதுமக்கள் சிலரும் நம்மோடு இணைந்தார்கள்.

பின்னந்தலையில் அடிபட்டவர் தொடர்ந்து வாந்தி எடுத்ததும்,  அவரின் முகத்தை கழுவிவிட்டு அவரை நிழலான பகுதிக்கு கொண்டு சென்றோம். கூட்டம் சேர்ந்தது. அவரைப் பார்த்த பலரும் ‘’இவரு ரஜினி படத்துல நடிச்சவர்தானே...? ‘’ என்று கேள்வி கேட்டுக்கொண்டே கடந்து போனார்கள். தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.

 உழைப்பாளி படத்தில் ரஜினி, சிவன் வேடத்திலும்,  ஐயராக ஒருவர் அவர் பின்னாலும் அமர்ந்து கொண்டு வருவார்களே...அந்த ஐயராக வரும் குருக்கள்தான் காயமடைந்த பெரியவர் ராமகிருஷ்ணன்.

செல்போன் வைத்திருந்த பலரும் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து போராடினோம். அரை மணி நேரம் ஒரு மணி நேரம் ஆனது ஆம்புலன்ஸ் வந்தபாடில்லை.

"கிண்டியில இருக்கோம் சார்...ஆலந்தூர்ல இருக்கோம் சார்...வர ஒரு மணி நேரம் ஆகும் பரவாயில்லையா...?" என்று அலட்சியமாக இருந்தது ஆம்புலன்ஸ் தரப்பின் இருந்து வந்த பதில்கள்.

சரி...ஆட்டோவை நிறுத்தலாம் என்று பார்த்தால்,  கை காட்டும் ஆட்டோக்கள் பலவும்  எங்களை கண்டு கொள்ளாமலே கடந்து சென்றன. அவர் எடை அதிகமாக இருந்ததால் தூக்குவதில் சிரமம் இருந்தது. பக்கத்தில் இருக்கும் விஜயா மருத்துவமனைக்குக் கூட அவரை தூக்க முடியாமல் ஆட்டோவை தேடியே அங்கிருந்தவர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்.

நிச்சயமாக ஆம்புலன்ஸ் வராது என்று தெரிந்தால் கூட அடுத்து என்னவென்று யோசித்திருக்கலாம். ஆனால் வரும் ஆனால் வராது என்கிற நிலை இருந்ததால் அருகில் பேருந்து நிலையம் அருகே இருந்த போலீஸ் பூத்துக்கு போனால் அது 12 மணி அளவிலும் பூட்டப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரையிலும் மிக முக்கியமான இடத்தில் டிராஃபிக் போலீஸ் யாருமே இதை கவனிக்கவில்லை.

கடைசியாக அவரின் உறவினருக்கு அவரது செல்போன் மூலம் தொடர்பு கொண்டோம். அவர்களும் வந்து சேர ஒரு மணி ஆகும் என்று சொல்ல,  அந்த நேரத்தில் கருணை நிறைந்த ஆட்டோகாரார் ஒருவர் வண்டியை நிறுத்த,  அருகில் இருந்த மருத்துவமனையில் அவரை கொண்டு போய் சேர்த்தோம். இப்போது அவர் முதலுதவி பெற்று வருகிறார். தங்கள் பணிகளை எல்லாம் நிறுத்திவிட்டு அந்த சாலையில் தங்கள் வாகனங்களை ஓரங்கட்டிவிட்டு உதவியவர்களால் மட்டுமே மனிதம் தழைத்துக் கொண்டிருக்கிறது.

விபத்து சிறியதோ பெரியதோ,  ஆம்புலன்ஸ் வரும் என்ற நம்பிக்கையை பொதுமக்கள் இழந்துவிட்டால் எப்படி அவர்கள் உதவ முன்வருவார்கள்? சென்னை போன்ற பெருநகரத்திலேயே ஆம்புலன்ஸ்கள் தட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனவா? விபத்து நடந்து ஆட்டோக்கள் உதவ முன் வந்தால்,  அவர்களுக்கு சிக்கலாகும் என பயப்படுகிறார்களே...இதற்கு முடிவே இல்லையா?  ஒரு விபத்து இப்படி பல கேள்விகளை முன் நிறுத்துறது.

சாமான்ய மனிதனுக்கும் சட்டம் சரிசமமாகும் வரை இங்கே எதுவும் கேள்விகளே!

நாக்கை துருத்தி... கையை ஓங்கி... தஞ்சை கோர்ட்டில் டென்ஷனான விஜயகாந்த்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பேனரை  சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட  வழக்கில்,  தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஜாமீன் பெற தஞ்சாவூர் வந்திருந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் தேமுதிக நிர்வாகி ஒருவரை விஜயகாந்த் அடிக்க பாய்ந்ததால் சிறுதி நேரம் பரபரப்பு நிலவியது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி,  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள்  வழங்க கோரி, தேமுதிக தலைவர் விஜயகாந்த தலைமையில் தஞ்சாவூர் தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது,  ஆர்ப்பாட்ட மேடை அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பேனரை தேமுதிக தொண்டர்கள் கிழித்தெறிந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த அதிமுகவினர் விஜயகாந்த் பிளக்ஸ் பேனரை  கிழித்து, அங்கிருந்த தேமுதிக தொண்டர்கள் சிலரையும் கடுமையாகத் தாக்கினர். இனிமேல் தஞ்சாவூருக்குள் விஜயகாந்த்தை நுழைய விடமாட்டோம் என்று அதிமுகவினர் சபதமும் போட்டனர்.

பின்னர் விஜயகாந்த் மீது வன்முறையை தூண்டுதல், பொதுசொத்தை சேதப்படுத்துதல் போன்ற பிரிவுகளில் அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கும் போடப்பட்டது. அதில் முதல் குற்றவாளியாக விஜயகாந்த் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கில் ஜாமீன் பெற இன்று (வியாழன்) காலை 12 மணியளவில்,  விஜயாகாந்த் தஞ்சை கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அங்கு தேமுதிகவினர், ஏராளமானோர் கூடியிருந்தனர். ஒருகட்டத்தில் விஜயகாந்தை பார்க்க தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் ஒருவரையொருவர் முண்டியடித்தனர். அதனால் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் விஜயகாந்த் சிக்கிக் கொண்டார்.இதனையடுத்து எரிச்சலடைந்த விஜயகாந்த்,  நிர்வாகி ஒருவரை அடிக்க, நாக்கை துருத்திக்கொண்டு கையை ஓங்கினார். இதனால் அந்த இடத்தில் சலசலப்பும் பரபரப்பும் நிலவியது.

பின்னர் நீதிபதி முன்பு ஆஜரான விஜயகாந்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.  இதேபோன்ற பேனர் பிரச்னையில் அதிமுகவினர் மீது, தேமுதிகவினர் கொடுத்த புகார் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்ததக்கது. 

ஜிம்முக்கு போறதுக்கு முன்னாடி இந்த 7 விஷயங்களை படிச்சுட்டு போங்க!

ஜிம்முக்குச் செல்ல வேண்டும், உடற்பயிற்சி செய்து உடலை முறுக்கேற்ற வேண்டும் என பலருக்கும் ஆசை இருந்தாலும், ஜிம்மில் முறையான சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், உடல் வலி ஏற்பட்டு ஓரிரு நாட்களுக்குப் பின்னர் ஜிம்முக்குச் செல்வதையே நிறுத்திவிடுபவர்கள்தான் அதிகம். ஜிம்முக்குச் செல்பவர்கள் இந்த ஏழு விஷயங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

1.ஜிம்முக்குச் செல்லும்போது டிஷர்ட், டிராக் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து செல்வது அவசியம். உடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வானதாக இருப்பது அவசியம்.

2.முதன்முதலில் ஜிம்முக்குச் செல்லும்போது, ஃபிட்னெஸ் டெஸ்ட் எடுக்க வேண்டும். உடலின் நெகிழ்வுத்தன்மை, உடல் வலிமை, கார்டியோ உடற்பயிற்சிகளைச் செய்யும் திறன், உடலின்  சமநிலைத்தன்மை, பி.எம்.ஐ மதிப்பு போன்றவற்றைப் பரிசோதித்து, அதன் பிறகே உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும்.

 3. உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு, ஐந்து நிமிடங்கள் வார்ம்அப்  பயிற்சிகள் அவசியம். வார்ம்அப் பயிற்சிகளுக்குப் பிறகு, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான்,  உடற்பயிற்சி செய்வதற்கு உடலில் உள்ள தசைகள் ஒத்துழைக்கும். தசைப்பிடிப்பு உள்ளிட்ட தசையில் ஏற்படும் கோளாறுகளும் தவிர்க்கப்படும்.

4. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அதிகமாக கார்டியோ பயிற்சிகளைச் செய்வதால் உடல் எடை குறையும். ஆனால், உடல் ஃபிட் ஆக இருக்காது. அடிக்கடி சோர்வு ஏற்படும். எனவே, ஒரு மணி நேர உடற்பயிற்சியில் 40 நிமிடங்கள் கார்டியோ பயிற்சிகளையும், 20 நிமிடங்கள் வலுவூட்டும் பயிற்சிகளையும் செய்ய வேண்டும். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள், 70 சதவிகிதம் வலுவூட்டும் பயிற்சிகளையும், 30 சதவிகிதம் கார்டியோ பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.

5. 'உடற்பயிற்சியின்போது தண்ணீர் குடிக்கக் கூடாது' என்று சிலர் சொல்கிறார்கள். இது தவறு.  நாக்கு உலரும்போதுதெல்லாம் 50 மி.லி தண்ணீரைப் பருக வேண்டும். உடற்பயிற்சி முடிந்தவுடன் 15 நிமிடங்கள் கழித்து, தேவையான அளவு தண்ணீரைக் குடிக்கலாம்.

6. வாரத்துக்கு ஒரு நாள் உடற்பயிற்சிக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். தசைகளுக்கு ஓய்வு கொடுத்தால் மட்டுமே, அடுத்த வாரம் முறையாக உடற்பயிற்சி செய்ய இயலும். எனவே, ஆர்வக்கோளாறில் ஜிம்மில் சேர்ந்ததும் ஏழு நாட்களும் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

7. உடற்பயிற்சிகள் அனைத்தையும் முடித்தவுடன் தசைகளின் இறுக்கத்தை  தளர்த்தும் வண்ணம் சில  ஸ்டிரெட்ச்சிங்  பயிற்சிகளை செய்ய வேண்டும். 3 முதல் 5 நிமிடங்கள் வரை செய்யும் இந்தப் பயிற்சியை, உடற்பயிற்சியாளர் கண்காணிப்பில் செய்ய வேண்டியது அவசியம்.

பூச்சி மருந்து தெளிப்பானிலும் ஜெ. ஸ்டிக்கர்... ஆவேசமடைந்த விவசாயிகள்!

கோவையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மருந்து தெளிப்பானில் பெரிய அளவிலான ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் ஆவேசமடைந்த விவசாயிகள்,  "ஸ்டிக்கர் ஒட்டாம எதையும் கொடுக்க மாட்டீங்களா..?" என கோபமாக கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தானிய சேமிப்பு குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம்,  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் விவசாயிகள் அனைவருக்கும் இலவசமாக மருந்து தெளிப்பான் வழங்கப்பட்டது.

தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்ட அந்த மருந்து தெளிப்பான்களில்,  பெரிய அளவிலான முதல்வர் படம் ஒட்டப்பட்டிருந்தது. அதிகாரிகள் அதை விவசாயிகளுக்கு தர முற்பட்டபோது ஜெயலலிதா படம் ஒட்டியிருந்ததை கண்ட விவசாயிகள், "இதில் எதற்கு இவ்வளவு பெரிய ஜெயலலிதா பட ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறீர்கள்?" என அதிகாரிகளிடம் சண்டையிட்டனர்.

மேலும், ஆவேசமடைந்த சில விவசாயிகள், முதல்வர் ஜெயலலிதா பட ஸ்டிக்கரை கிழித்தெறிந்தனர். மேலும் செய்தியாளர்களிடமும் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.

"விவசாயிகளுக்கு வழங்கும் மருந்து தெளிப்பானில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி கொடுப்பது எங்களுக்கு கேவலமாக இருக்கிறது. இதை எப்படி நாங்கள் எடுத்துச் செல்ல முடியும்? அரசு வழங்கும் ஒரு பொருளில் ஜெயலலிதா படம் இடம்பெறுவது நாங்கள் ஏதோ கட்சிக்காரர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. முதல்வர் படமாக இருந்தாலும் அதை இவ்வளவு விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அரசாங்க முத்திரையை போட்டு கொடுக்கலாம். அதற்காக இப்படியா?" என கொந்தளித்தனர் விவசாயிகள்.

ஒருவழியாக அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.