Tuesday 19 January 2016

அரண்மனைக் கிளி பாடல்... எழுதியவர் இளையராஜாவா, பொன்னடியானா? புது சர்ச்சை!

மாரிமுத்துவை நினைவிருக்கிறதா? கண்ணுக்குக் கண்ணாக படத்தை இயக்கியவர். பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் அவர் நடித்து வெளியான படம் உப்புக் கருவாடு. எம்எஸ் பாஸ்கரின் தம்பியாக வருவார்.

அவர் சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு தகவல், சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

முதலில் அவரது பதிவைப் பாருங்கள்:

முகநூல் நட்புகளுடன் ஒரு இனிமையான பகிர்வு... 'அரண்மனை கிளி' - நான் உதவி இயக்குநராய் (clap asst) வேலை பார்த்த முதல் படம்...(வருடம் 1992)... அந்தப் படத்தின் பாடல்கள் நீங்கள் அறிந்ததே... அதில் அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி சார் எழுத... ஒரே ஒரு பாடல் மட்டும் வேறொரு கவிஞருக்குக் கொடுக்கப்பட்டது...(பெயர் வேண்டாம்)... அந்தப் பாடல் 'என் தாயெனும் கோயிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே...' அந்தக் கவிஞர் எவ்வளவோ எழுதியும் யாரும் திருப்தி அடையவில்லை...

சற்று கோபமடைந்த இசைஞானி விறுவிறுவென்று தன் Composing roomக்குப் போய் அரை மணி நேரத்தில் பாடலை எழுதிக்கொண்டு வந்து... அடுத்த அரை மணி நேரத்தில் பாடிவிட்டுப் போய் விட்டார்... இதைப் பக்கத்தில் இருந்து பார்த்து பிரமித்து விட்டேன்... அவர் பாடி முடித்துப் போன பின் நான் மெதுவாக Voice roomக்குள் போனேன்... ஆஹா... அங்கே அந்தப் பொக்கிஷத்தைப் பார்த்தேன்... இசைஞானி தன் letter padல் தன் கையெழுத்தில் தானே எழுதிய பாடல் தாள் (lyric sheet) மைக் முன்னால் போர்டியம் standல் இருந்தது... நான் நைஸாக அதைத் திருடிக்கொண்டு வந்து விட்டேன்... இன்று வரை அதைப் பாதுகாத்து வருகிறேன்...அதைத்தான் போட்டோ எடுத்து இணைத்துள்ளேன்...

என் school...college mark sheet போல் இதையும் பத்திரமாக வைத்துள்ளேன்... தன் இசைப் பயணத்தில் 1000 படங்களைக் கடந்திருக்கும் இசை அதிசயமே... இவ்வளவு காலத்துக்குப் பிறகு என் மீது திருட்டு வழக்குத் தொடர மாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலும்... என்னை ஆள் வைத்துத் தேட மாட்டீர்கள் என்ற தைரியத்திலும்... இதை இங்கே பகிர்ந்திருக்கிறேன்,' என்று எழுதியுள்ளார்.

ஆனால், அரண்மனை கிளி படத்தின் எல்பி ரெக்கார்ட் மற்றும் கேசட் உறையில், என் தாயெனும் கோயிலை பாடலை எழுதியவர் பொன்னடியான் என்று எழுதப்பட்டுள்ளதால், இந்தப் பாடலை எழுதியவர் யார் என்கிற விவாதம் கிளம்பியுள்ளது.

உண்மையில் மாரிமுத்து எழுதியிருப்பது போல, அரண்மனைக் கிளியின் அனைத்துப் பாடல்களையும் வாலி மட்டுமே எழுதவில்லை. அவர் நான்கு பாடல்களை எழுதியிருந்தார். கவிஞர் முத்துலிங்கம் ஒரு பாடலையும், பிறைசூடன் ஒரு பாடலையும், பொன்னடியான் இரு பாடல்களையும் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னொன்று, தான் எழுதிய பாடலை பிற கவிஞர்களின் பெயரிலேயே வெளியிட்டு, அந்த கவிஞருக்கு சம்பளமும் தரச் செய்வது இளையராஜாவின் வழக்கம். சமீபத்தில்தான் இதுகுறித்து ஒரு கட்டுரையை  வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

1993-ல் வெளியான அரண்மனைக் கிளி படத்துக்காக இளையராஜா தன் கைப்பட எழுதிய பாடல் வரிகள் இடம்பெற்ற தாள்:

0 comments:

Post a Comment