Thursday 18 February 2016

ரூ. 251 ஸ்மார்ட் போன்: ரிங்கிங் பெல் 'ரிங் 'அடிக்காதது ஏன்?

கடந்த ஐந்து  மாதத்திற்கு முன் தொடங்கப்பட்ட ரிங்கிங்பெல்ஸ் நிறுவனம்தான் தற்போது 'ப்ரீடம் 251' ரூபாய்க்கு ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.

ரிங்கிங்பெல்ஸ் என்ற நிறுவனம் நொய்டாவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்தான் ஆரம்பிக்கப்பட்டது. அமிதி பல்கலையில் படித்த மோகித் குமார் கோயல் என்பவரால்தான் இந்த நிறுவனம் தொடங்கபபட்டுள்ளது. அவரது மனைவி தார்ணாதான் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி.

பிரதமர் நரேந்திர மோடியின் 'மேக் இன் இந்தியா' தொழில் ஊக்கத் திட்டத்தின் கீழ்  இந்த ஸ்மார்ட் போன் தயாரிக்கபபட்டுள்ளது. நேற்று இந்த போன் சந்தையில் வெளியிடப்பட்டது.  ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற விழாவில் ஏராளமான பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் இந்த ஸ்மார்ட் போன் வெளியிடப்பட்டது.

முன்னதாக நேற்று காலை அத்தனை பத்திரிகையிலும் ‘இந்தியாவின் மிக மலிவு விலை ஸ்மார்ட் போன்‘ இன்று வெளியீடு என விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த ஃபரீடம் 251 போன் அறிமுகப்படுத்தப்பட்டதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இந்த விழாவில் முதலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்து கொள்வதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் கடைசி நேரத்தில் அவர் நிகழ்சியில் பங்கேற்காமல் ஜகா வாங்கி விட்டார்.

முன்னதாக இந்திய மொபைல் நிறுவனங்களின் சங்கம், விலை கண்டிப்பாக 3,500க்கு குறைய கூடாது என்று வலியுறுத்தியிருந்தது. அல்லது மானிய விலையில் கொடுக்கலாம் என்று மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு பரிந்துரைத்திருந்தது. ஆனால் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஸ்மார்ட் போன் அறிமுக நிகழ்ச்சியின் போது, மோகித் குமார் பல கேள்விகளுக்கு மனைவியிடம் கேட்டே பதில் அளித்துள்ளார். அதனால் அவர்தான் இந்த 251 ரூபாய் ஸ்மார்ட் போன் ஐடியாவுக்கு பின்புலத்தில் இருக்க வேண்டுமென்று கூறப்படுகிறது.

5 மாதங்களுக்கு முன்பு வரை மோகித் குமார்  கோயல், உத்தரபிரதேசத்தில் ஷாமிலி மாவட்டத்தில் மளிகை கடை வைத்துள்ள தனது தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார்.

இந்த போனின் அடக்க விலை 2, 500 ரூபாய் ஆகும். ஆனால் தனிப்பட்ட மார்க்கெட்டிங் உக்திகள், வரிகள் குறைப்பு, செலவு குறைப்பு இந்த போனுக்கென்றே சந்தையில் இ- காமர்ஸ் வழியாக தனியாக மார்க்கெட் ஏற்படுத்துதல் போன்ற புதுமையான திட்டங்களால் 251 ரூபாய்க்கு வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த போனை தயாரிக்க நொய்டாவில் இரண்டு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக 251 கோடி ரூபாய் கடன் மற்றும் பங்கு வெளியீட்டு முலமாக திரட்டியுள்ளனர். கோயல் குடும்பத்தினர் இந்த தொழிற்சாலைகளில் எந்த முதலீடும் செய்யவில்லை.

மோகித் குமார் கோயலுக்கு  ஐ.ஐ.டியில் படித்த அசோக் சட்டா என்பவர் இந்த நிறுவனத்தை தொடங்க உதவியாக இருந்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி. ஓம்பிரகாஷ் சக்லேச்சா என்வரை சந்தித்து, ஆதரவு கோரியுள்ளனர். அவர் செய்த உதவியினாலேயே  நாட்டிலேயே முதன் முறையாக மலிவு விலை  ஸ்மார்ட் போன் நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்த ஸமார்ட் போனைத் தயாரிக்க சீன நாட்டில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும் உபயோகப்படுத்தக் கூடாத அதாவது expire ஆன பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.

இதற்கு முன் இதே நிறுவனம் வெளியிட்ட ஹெட் செட்டை ஆன்லைனில் புக் செய்த பல வாடிக்கையாளர்களுக்கு பொருள் போய் சேரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த போன் அறிமுகப்படுத்துவதற்கு சற்று நாட்கள் முன்னதாகவே ரிங்கிங்பெல் நிறுவனம் இதற்கான இணையதளத்தை ஆரம்பித்துள்ளது. இந்த இணையத்தளத்தின் நம்பகத்தன்மை குறித்து தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமாக டிராய்க்கும் மத்திய தொலை தொடர்பு அமைச்சகத்துக்கும் புகார்கள் குவிந்து வருகின்றன.

0 comments:

Post a Comment