Saturday 23 January 2016

தனி ஒருவராக 20 அடி ஆழ கிணறு வெட்டி தண்ணீர் வரவைத்து விவசாயி சாதனை!

சென்னிமலை அருகே உள்ள கொத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு குப்புசாமி என்ற ஒரு மகன் உள்ளார். இவர் ஈங்கூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

பழனிசாமிக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து வரும் அவர், விவசாயத்துக்காக அந்த பகுதியில் பொது கிணற்றில் 2 நாட்கள் முறை வைத்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் அந்த கிணற்றிலும் வருடத்தில் பாதி நாட்கள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டது.

இதனால், விவசாய வேலையில் ஈடுபட்டு வந்த பழனிச்சாமி, அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கதவுகள் தயாரிக்கும் கம்பெனியில் லாரிகளில் வந்து இறங்கும் லோடுகளை இறக்கும் லோடு மேனாகவும் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், தனது விவசாய நிலத்தில் ஒரு கிணறு வெட்ட எண்ணியிருக்கிறார். 'அப்படி கிணறு வெட்டினால் அந்த தண்ணீரை நம் தேவைக்கு உபயோகபடுத்தி கொள்ளலாமே' என்று நினைத்திருக்கிறார். உடனே நிலத்தடி நீர் மட்டம் பார்க்கும் ஒருவரிடம் போய் கேட்க, அவரும் நிலத்தின் ஒரு இடத்தை குறித்து கொடுத்திருக்கிறார்.

இயந்திரம் வைத்து கிணறு வெட்டும் அளவிற்கு வசதி இல்லாததால் குறித்து கொடுத்த இடத்தில் பழனிசாமி தன்னந்தனியாக கிணறு தோண்ட தொடங்கியிருக்கிறார். சுமார் 20 அடி ஆழம் கிணறு வெட்டி அந்த கிணற்றில் தண்ணீர் வரவழைத்திருக்கிறார்.

இதுகுறித்து பழனிச்சாமி கூறுகையில் "கடந்த 1½ ஆண்டு காலமாக கொஞ்சம் கொஞ்மாக கிணற்றை வெட்டினேன். வேலைக்கு போய் விட்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் உளி, சுத்தி, மண் வெட்டி உதவியுடன் மண்ணை வெட்டி கூடையில் எடுத்து பக்கத்தில் கொட்டினேன். இந்த கிணற்றில் இருந்து மண்ணை வெளியில் எடுத்து வர வசதியாக படிகள் அமைத்து அதன் மூலம் மேலே வந்து தொடர்ந்து கிணறு வெட்டினேன். சுமார் 20 அடி தோண்டியதும் கிணற்றில் நீருற்று வரத் தொடங்கியது. அதனால், 20 அடி ஆழத்துக்கு மேல் என்னால் தோண்ட முடியவில்லை. கிணறு வெட்ட என் மனைவியும், மகனும் உதவிக்கு வர எண்ணினார். ஆனால் நான் வேண்டாம் என்று கூறி தனி ஒரு ஆளாக இந்த கிணற்றை தோண்டி உள்ளேன். ஆனால் மோட்டார் வைக்க மின் வசதி இல்லாததால் அதற்காக காத்திருக்கிறேன்" என்றார்.

இதையடுத்து பக்க வாட்டு பகுதிகளை சரி செய்து மண் சரியாத வகையில் அமைத்திருக்கிறார். தற்போது இந்த கிணற்றில் 5 அடிக்கு தண்ணீர் உள்ளது. மேலே இருந்து சுமார் 10 அடி ஆழத்துக்கு, 2 அடி அகலத்தில் படியும் அமைத்திருக்கிறார்.

மேலும், இந்த கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருக்க, அப்பகுதியில் உள்ள தனது நிலத்திலிருந்து மழை காலத்தில் வெளியேறும் தண்ணீர் பள்ளத்தில் சென்று வீணாவதை தடுக்க, கிணற்றின் அருகே மழை நீர் சேமிப்பு தொட்டி ஒன்றையும் அமைத்துள்ளார். அந்த தொட்டியை சுமார் 6 அடி ஆழத்துக்கு அமைத்து அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் கிணற்றில் விழும் வகையில் பைப் அமைத்து கிணற்றுடன் இணைத்துள்ளார்.

இத்தகைய பெரும்முயற்சி செய்து சாதனை படைத்த இந்த ஏழை விவசாயை பார்க்கும் போது 'முயற்சித்  திருவினை யாக்கும் முயன்றின்மை இன்மை புகுத்தி விடும்' என்ற வள்ளுவரின் குறல் தான் நினைவுக்கு வருகிறது.

0 comments:

Post a Comment