Friday 22 January 2016

தன்னம்பிக்கையைத் தூண்டும் 3 உலகத் திரைப்படங்கள்..!!

எல்லோருக்கும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும். வரலாற்றில் நம் பெயரும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் சிறு தோல்வி ஏற்பட்டாலே நாம் முடங்கி போய் விடுகிறோம். ஆனால் விடாமுயற்சியுடன் நம் இலக்கை நோக்கி பயணித்தால் எந்த ஒன்றாலும் நம்மை தோற்கடிக்க முடியாது. நம்மால் சாதிக்க முடியும் என்பதை நம் மனதுக்குள் விதைக்கிற உணமைக் கதையை அடிப்படையாக வைத்த படங்கள் இதோ உங்களுக்காக.

1. தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்

ஒரு காலத்தில் சாப்பிட உணவில்லாமல், தங்குவதற்கு வீடு இல்லாமல் ரயிலிலும், லிப்ட்டிலும், என கிடைக்கும் இடத்தில் எல்லாம் தங்கி, விடா முயற்சியுடன் வாழ்க்கையோடு போராடி இன்றைக்கு பல மில்லியன் டாலர் நிகர மதிப்புக் கொண்ட முதலீட்டு நிறுவனமான கார்டினர் ரிச் அண்ட் கோ-வை உருவாக்கிய கிறிஸ் கார்டினரின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாக வைத்து உருவானது தான் 'தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்' திரைப்படம்.

கிறிஸ் கார்டினர் ஒரு நிறுவனத்தில் ஸ்கேனர் மார்க்கெட்டிங் பணியில் இருக்கிறார். அதில் அவருக்குப் போதிய வருமானம் இல்லை. வாடகை கொடுக்க முடியாததால் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார். இதனால் மனைவியும் அவரை விட்டுப் போய்விடுகிறார். அவர் தன் மகனுடன் வீடு இல்லாமல் இரவு நேரத்தில் எங்கேயாவது தங்க இடம் கிடைக்காதா என்று அலைகிறார். இப்படி பல விதத்திலும் மன உளைச்சலுக்கு ஆளாகும் அவர் பணம் சம்பாதித்தே ஆக வேண்டும் என்று கட்டாயத்தில் பங்குத் தரகர் பணிக்கு இரவு பகலாகப் படிக்கிறார். அவரது விடாமுயற்சியில் இறுதியில் பங்குத் தரகர் தேர்வில் வெற்றி பெறுகிறார். ஒரு நிறுவனத்தில் பங்குத் தரகர் வேலை கிடைக்கிறது. சிரித்த முகத்துடன் தன் இருக்கையில் சென்று நிமிர்ந்து உட்கார்ந்து பெருமூச்சு விடுகிறார்.

அவர் பங்குத் தரகராக பணி செய்வதோடு நின்று விடவில்லை. குறிப்பிட்ட பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்து அந்தப் பணத்தைப் பல மடங்காக்குகிறார். இறுதியில் அவர் தானே ஒரு தரகு நிறுவனத்தையே உருவாக்கும் அளவுக்கு வளர்கிறார்.

பணம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், பணம் சம்பாதிக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்பதோடு, அறிவு பூர்வமாக விடாமுயற்சியுடன் இலக்கை அடைய அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் என்பதை ஆழமாகப் பதிவு செய்கிறது தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ். இந்தப் படத்தை இயக்கியவர் கேப்ரியல் முசீனோ. புகழ்பெற்ற நடிகரான வில் ஸ்மித் இந்தப் படத்தில் கிறிஸ் கார்டினராக வாழ்ந்திருந்தார்.

2. தி டைவிங் பெல் அண்ட் தி பட்டர்ஃபிளை

ழான் டொமினிக் பாபி என்ற எழுத்தாளனின் நிஜ வாழ்க்கை தான் இந்தப் படம்.பாபியும் ஆரம்பத்தில் நம்மை போலத்தான் நல்ல ஆரோக்கியத்துடன் ,மனைவி,குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். புகழ்பெற்ற ஒரு பத்திரிகையில் வேலை செய்தும் வந்தார் . நாற்பத்திரண்டு வயதில் அவரின் மூளைக்குள் பாய்ந்த அதிர்வுகள் மூளையை கடுமையாக தாக்கி நினைவிழக்க செய்கிறது, நாளடைவில் அவரின் இடது கண்ணை தவிர்த்து மற்ற உறுப்புக்கள் வேலை செய்யாமல் போய்விடுகிறது .

அவர் ஒருமுறை கண் இமையை அசைத்தால் அது "ஆம்" என்று அர்த்தம் ,இரண்டு முறை தொடர்ந்து அசைத்தால் " இல்லை " என்று அர்த்தம் .. அவர் ஏதாவது சொல்ல நினைத்தால் அங்கிருக்கும் பேச பயிற்சிகொடுக்கும் பெண் பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள் .பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை அசைப்பார், இதேமாதிரி அடுத்த பிற எழுத்துகளை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை .கண்களின் இமை அசைவுகளின் வழியாக பாபி சொல்வார்

பாபியின் கண் இமை அசைவுகளின் மொழியை எழுத்தாக மாற்ற புதிதாக ஒரு பெண் வருகிறாள் அவளின் வேலை ஆரம்பத்தில் பேச பயிற்சி கொடுத்த பெண்ணின் அதே வேலை தான் ..பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள் .பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை சிமிட்டி ஆமாம் என்று சொல்லி, இதை போல அடுத்த பிற எழுத்துக்களை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை சொல்வார் அதை அவள் எழுத வேண்டும் .இப்படி ஒவ்வொரு வார்த்தையாக எழுதி உருவானது தான் the diving bell and the butterfly என்ற புத்தகம் ,இந்தப் புத்தகத்தை ரொனால்ட் கார்வுட் அருமையான திரைக்கதையாக மாற்ற ,,பாபி தனனுடைய இடது கண்ணால் இந்த உலகத்தை எப்படி பார்த்தாரோ அதே கோணத்தில் காமிராவின் கண்கள் காட்சிகளை பதிவு செய்ய இந்தப் படத்தை இயக்கினார் ஜூலியன் சினபால் . இந்தப் படம் எந்த மனதுக்குள் வாழ்க்கையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையத் தருகிறது.

3. மை லெஃப்ட் ஃபூட்

கிறிஸ்டி பிரவுன் என்ற ஓவியனின்,கவிஞனின் ,எழுத்தாளனின் வாழ்க்கை தான் இந்தப் படம்.. பிரவுன் நம்மை போல ஆரோக்யமான உடல்நிலையோ,இயல்பான பேச்சாற்றலோ கொண்டவன் இல்லை..பிறக்கும் போதே மூளையில் ஏற்பட்ட பாதிப்பு அவனின் உடல் இயக்கங்களை கைதுசெய்து இடதுகாலை மட்டும் விடுதலையாக விட்டுவிட்டது .இடது காலே எல்லாமும் ஆனது . அந்த இடது காலால் தான் ஓவியங்கள் வரைவான், எழுதுவான். அப்படி அவனின் இடது காலால் எழுதப்பட்ட புத்தகத்தின் அடிப்படையில் உருவானது தான் இந்த திரைப்படம். இந்தப் படத்தைப் பார்க்கும் போது நாம் எவ்வளவு ஆரோக்யமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என்பதோடு பிரவுன் நமக்குள் சாதிக்க வேண்டும் என்ற வெறியை விதைக்கிறார். பிரவுனாக நடித்தவர் டேனியல் டே லீவிஸ் . இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர் விருது அவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment