Sunday 24 January 2016

மரபணுத் தொழில்நுட்பமும் தாரை தப்பட்டையும்!

பெரிய தொழிலதிபர் – பூடகமாக செட்டியார்! அவருக்கு வாரிசு கிடையாது. காலம் போன காலத்தில் தன் மரபணுக்களைத்தாங்கிய குழந்தை வேண்டுமென்று ரகசியம் காக்க எண்ணி வில்லனை நாடுகிறார். அவர் தன்னிடம் இருக்கும், பாலியல் தொழிலாளர்களை காண்பிக்கிறார். வில்லனின் மனைவியும், கதைநாகியுமான சூறாவளியையும் சோகமே உருவாய் முன்னிறுத்தப்படுகிறார். உடனே அந்தப்பணக்காரர், சூறாவளியை தேர்வு செய்கிறார். மிகவும் அபத்தமான அறிவியலுக்குப்புறம்பான காட்சியமைப்பு. பாலா நல்ல இயக்குனராயிருக்கலாம். அவர் அறிவியல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்ன?

இப்போதைய தொழில்நுட்பத்தில் இதெல்லாம் ஒரு மேட்டரேயில்லை! ஆச்சிக்கு முட்டை உற்பத்தி இருக்காது. சரி! ஒரு பெண் தன் வாழ்நாளில் 450 சினை முட்டைகளை உருவாக்க முடியுமென்றாலும், எந்த முட்டை விந்துடன் இணைகிறதோ அது மட்டுமே குழந்தையாக உருவாக இயலும். பெண்களுக்கு இரண்டு அண்டகங்கள் உண்டு. ஒரு மாதம் ஒரு முட்டை உருவாகிறதென்றால் மறு அண்டகத்திலிருந்து அடுத்த முட்டை உற்பத்தியாகி வரும். அப்படி உருவாகும் முட்டை ஒரு 15 நாட்கள் விந்திற்காக காத்திருக்கும். விந்துடன் இணையாத பட்சத்தில் முட்டை லூட்டினைசிங் ஹார்மோன்களின் உதவியுடன் சிதைக்கப்பட்டு மாதவிடாயாக வெளியேற்றப்படும்.

ஆண்களால் தன் வாழ்நாள் முழுவதிலும் விந்தணுக்களை உற்பத்தி செய்ய இயலும். ஆகையால் அந்தப்பெரியவரிடம் இருந்து விந்துக்களைப்பெறுவது சாத்தியமே. இன்று அனைத்து நாடுகளிலும் மனித விந்துகளுக்கென்றும், முட்டைகளுக்கென்றும் ஏராளமாய் வங்கிகள் உண்டு. காதும் காதும் வைத்தாற்போல அதற்கென உள்ள மருத்துவ விற்பன்னர்களை எளிதாகவும் அணுகவும் முடியும். கருமுட்டையை அதற்கென உள்ள வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் முடியும். IVF அதாவது In-vitro fertilization தொழில்நுட்பத்தின் மூலம் கண்ணாடித்தட்டில் கருவூட்டல் சாத்தியமே!

இயல்பாக கருவுறுதல் பெலோப்பியன் குழாயில் நடைபெறும். சினையூட்டப்பெற்ற கருமுட்டை சில நாட்களில் நகர்ந்து கருப்பையில் நிலைபெறும். இது இளம் வயதில் அந்த ஹார்மோன்களின் துணையோடு இயல்பாக நடக்கும். பத்து மாதங்களில் குழந்தையைப்பெற்றெடுப்பர். ஒரு வேளை கருப்பை கருவைச்சுமக்கும் தகுதியில்லையெனில் வாடகைத்தாய் மூலம் குழந்தையைப்பெற்றுக்கொள்வர். இதெல்லாம் சிவகுமார் காலத்துத்தொழில்நுட்பம் (அவன்,அவள்,அது! படம் பார்த்திருப்பீர்கள் தானே?)

சில வருடங்களுக்கு முன்னர் தன் மகளுக்காக மருமகனின் விந்தினாலும் மகளின் கருமுட்டையாலாம் கருவூட்டப்பட்ட கருவை தன் கருப்பையில் சுமந்து பெற்றெடுத்த பெண்மணியைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். Post menopausal baby தொழில்நுட்பம் மூலம் சாத்தியமே! இயற்கையாக மாதவிடாய் முற்றுப்பெற்ற பெண்களுக்கு செயற்கையாக இந்த ஹார்மோன்களை செலுத்தி அவர்களையும் குழந்தை பெறச்செய்துவிடமுடியும். ஆண் குழந்தையும் PCR தொழில்நுட்பம் கொண்டு சாத்தியமே! இவ்வளவு தொழில்நுட்பம் இருந்தும் ஒரு ரௌடியை நாடுவானேன்?

அது தான் கோடி கொட்டிக்கொடுக்கவும் அவர் தயார் தானே? இது சில லட்சங்களில் சாத்தியமான ஒன்று. வழக்கம் போல அறிவியல் இன்னும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது! என்ன செய்ய?

0 comments:

Post a Comment