Sunday 31 January 2016

'விசாரணை' கண்டு வியந்தேன்: வெற்றிமாறனுக்கு கமல்ஹாசன் பாராட்டு

 'விசாரணை' படம் பார்த்து தான் வியந்துவிட்டதாக இயக்குநர் வெற்றிமாறனுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறது.

படத்தின் பணிகள் அனைத்துமே முடிந்து, உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினார்கள். முதலில் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிட 'விசாரணை' தேர்வானது. இவ்விழாவில் திரையிட தேர்வான முதல் தமிழ் படம் 'விசாரணை' என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு வரவேற்பு கிடைத்தது.

சென்சார் அதிகாரிகள் இப்படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இப்படத்தின் உரிமையைக் கைப்பற்றி இருக்கும் லைக்கா நிறுவனத்தினர் 'விசாரணை' பிப்ரவரி 5ம் தேதி வெளிவரும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன் இயக்குநர் வெற்றிமாறனை வெகுவாக பாராட்டியிருக்கிறார். 'விசாரணை' படம் குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "நல்ல சினிமாவின் தாக்கத்தை வெற்றிமாறன் மனதில் பதித்துச் சென்ற என் பாலு மகேந்திராவிற்கு நன்றி. நேற்று 'விசாரணை' என்ற சினிமா கண்டு வியந்தேன்" என்று தெரிவித்திருக்கிறார். 

0 comments:

Post a Comment